பேச்சு:கூழைக்கடா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூழைக்கடா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பழந்தமிழில் இதனைக் குருகு என்று அழைத்துள்ளார்கள். கூழைக்கடா என்பது தற்காலத்தில் வழங்கும் பெயர். கூழை என்பது வால் குட்டையாகவோ வாலே இலாமலோ இருக்கும் விலங்கைக் குறிக்கப்பயன்படும் சொல். இங்கு குட்டையாகவும், வால் குறுகியும் இருப்பதால் இதனை கூழைக்கடா என்கிறார்கள். கூழைக் கும்பிடு என்பது உண்மையிலேயே உள் மதிப்பில்லாமல் தோள், உடலைக் குறுக்கி கும்பிடுவது. "குறைவுடைமை" அல்லது "இல்லாமை" என்பதே அடிப்படை. --செல்வா 16:14, 16 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

ஓ! நன்றி செல்வா. குருகு என்பதையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்து விடுகிறேன். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஐயம் உள்ளது. பண்டைய தமிழகத்தை அறிய சங்க இலக்கியங்களே துணை நிற்கின்றன. இதை மட்டுமே கொண்டு எவ்வாறு செய்தியின் நம்பகத்தன்மையை நாம் நிரூபிக்க முடியும்? அவ்வகையில் தேற்றாமரத்தையோ, குருகையோ இந்தப் மரம், பறவை தான் என எவ்வாறு உறுதியாகக் கூறுவது? சில வரலாற்று நூல்களிலும் தமிழ், தமிழகம் குறித்த ஆங்கில விக்கி பேச்சுப்பக்கங்களிலும் இது சுட்டிக்காட்டப்படுகிறதானாலேயே இந்த எண்ணம் வந்தது. உங்கள் கருத்தை அறிய ஆவல்.--சிவக்குமார் \பேச்சு 15:13, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
தமிழகச்சூழலில் பின்வருமாறு செய்துள்ளனரா எனத்தெரியவில்லை. ஆனால் பொதுவாக படிமவியல், செடிப்படிமவியல், மொழியியல், வேளாண்படிமவியல், கல்வெட்டியல் போன்ற பல துறையினரின் ஆய்வுகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சான்றுகளை உறுதிப்படுத்துவதைக் கொண்டு முடிவகளுக்கு வருகின்றனர். காட்டாக, தியடோர் பாசுக்கரன் கானமயில் பற்றிய பாடலைப் பற்றிய பொதுவான புரிதலை விலங்குகளின் படிவளர்ச்சியைக் கொண்டு கேள்விக்குட்படுத்தினார். இந்தோ-ஆரிய மொழிகளின் வரவையும் பரவுதலையும் காலப்போக்கையும் பற்றிய முடிவுகளில் குதிரைக்கான வெவ்வேறு மொழிப்பெயர்கள் முதன்மையான இடம் பெறுகின்றன. இதுபோல பல துறைகளைச் சேர்த்து ஆய்வு செய்து எழுதிய ஒரு நல்ல நூல் "Guns, Germs, and Steel". -- சுந்தர் \பேச்சு 16:43, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
நண்பர் கார்த்திக்பாலா கூட சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கி வருகையில் வழியில் (இன்றைய திண்டுக்கல், கரூர், பழநி மாவட்டங்களில்) ஒரு இடத்தில் களிறுகளைக் காண்பதாக வந்த குறிப்பை உயிரியல் வரலாற்றுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கிறார். -- சுந்தர் \பேச்சு 16:48, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

சிவா, தமிழ் இலக்கியத்தில் மீன், விலங்கு செடி-கொடிகள் பற்றியசெய்திகள் வரும் பொழுது, அவை பல இடங்களில் துல்லியமாய் உள்ளன. எந்தச் சூழலில் (எ.கா: கடற்கரை ஓரத்தில்) வளரும் செடி-கொடி, என்ன நிறத்தில் அதன் பூ இருக்கும், அல்லது எந்த நேரத்தில் மலரும் பூ என்பது போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டு இருப்பதால், துறையறிவு உடையவர்கள், பெரும்பாலான இடத்தில் துல்லியமாய், அது என்ன செடி-கொடி, என்ன விலங்கு, மீன் என்று கூறும் படியாக உள்ளன. மேலும் சில செய்திகள் வழிவழியாய் அதே இடங்களில் இன்றும் வாழும் மக்களால் இன்றும் போற்றப்பட்டு வந்துள்ளது. இலக்கிய செய்திகளும் 2000 ஆண்டுகளாக தொடர்ந்து பல நூல்களில் வருவதால், தொடர்ச்சியும் உள்ளது. என்றாலும், சில குறிப்புகள் செய்திகள் துல்லியமாய் உறுதி செய்யப்படாமலும் இருக்கின்றன. பி. எல். சாமி அவர்கள் எழுதியுள்ள நூலகளைப் படித்தால், அவர் எப்படி ஒவ்வொன்றையும் நிறுவுகின்றார் என்று அறியலாம். Yak என்னும் விலங்கைத் தமிழர்கள் கவரி மான் என்று அழைதார்கள் என்பதை பி. எல். சாமி ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளார். எப்படி நரந்தம் புல் உண்டு, குளிரான இமயமலைப் பகுதியில் வாழ்கின்றது என்னும் செய்திகளைத் தொகுத்து எழுதியுள்ளார். திருவள்ளுவரின் குறளிலே,
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

என்னும் குறளில் வரும் கவரிமா இந்த Yak தான். எப்படி மயிரை நீக்கிவிட்டால், குளிர் தாங்கமாட்டாமல், கவரிமா இறந்து படுமோ, அதுபோல், மானம் இழந்தால் தம் உயிரைநீப்பர் மானமுடையவர் என்கிறார். இதனை அறியாமல் பலரும் ஒரு முடி விழுந்தாலும் உயிர் நீங்கும் மான் இனம் (கற்பனை) என்று பலர் பொருள் கூறியுள்ளனர் (தவறுதலாக). சங்க இலக்கியத்திலே பல இடங்களில் கவரி மா வாழும் இமயமலைப் பகுதியையும், அது உண்ணும் நரந்தம் புல்லையும் பற்றித் தெளிவான குறிப்புகள் உள்ளன. --செல்வா 00:30, 20 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

முனைவர் பட்டக் களப்பணிக்காக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் முகாமிட்டிருக்கும் கார்த்தியுடன் இது பற்றி தொலைபேசியில் உரையாடினேன். அவரும் நற்றிணை, குறுந்தொகை நூல்களிலும் கவரிமாவைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் அவை தென்னாட்டுச்சூழலில் வாழ்ந்திருக்கமுடியாதாதலால் கட்டாயம் நம் புலவர்கள் சோழர்களுடனோ வேறு வகையிலோ இமயத்துக்குச் சென்று திரும்பியிருக்க வேண்டுமென்றும் கருதுவதாகக் கூறினார்.
குருகு அல்லது குருட்டுக் கொக்கு என்று அழைக்கப்படுவது pond heron என்ற புள்ளினமென்று அவர் நினைக்கிறார். ஊர் திரும்பியதும் தம்மிடமுள்ள நூல் சான்றுகளைப் பார்த்து உறுதிப்படுத்துவதாகவும் சொன்னார். -- சுந்தர் \பேச்சு 09:41, 20 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
சுந்தர், உங்கள் ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது :) நன்றியும் பாராட்டுகளும். --சிவக்குமார் \பேச்சு 14:13, 28 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
செல்வா, புரிகிறது. நிறைய வர்ணனைகள் இருக்கும் வகையில் உயிரினங்களை எளிதாக அடையாளம் காணமுடியும் என்பது சரிதான். இது குறித்து நான் ஊரில் உள்ள அரசு நூலகத்தில் தேடியபோது தமிழரின் மரபுச் செல்வங்கள் -அறிவியல் தொழில்நுட்பம் - 1 என்னும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூல் ஒன்று கிடைத்தது. இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு. இந்நூலில் இலக்கியத்தில் நிலையியல் உயிர்நூல் கருத்துகள் (ஆசிரியர் - இரா. காஞ்சனா, இணைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை) என்ற ஒரு கட்டுரையில் இது குறித்த இருந்த கருத்தை பயன்கருதி இங்கு பதிகிறேன்.
  " உயிர்களை அடையாளம் கண்டு முடிவு செய்ய புலவர்கள் 
    பயன்படுத்தியுள்ள சிறுசிறு அடைமொழிகள், மலரும் காலம் 
    பற்றிய அவர்களது தெளிவு, ஒவ்வொரு செடியின், மலரின் 
    உறுப்புகளையும் அவர்கள் கூர்ந்து உற்றுநோக்கி, கண்டவற்றை 
    மிகைப்படுத்தாது கூறிய தன்மை ஆகியனவே காரணங்கள் எனலாம்."

--சிவக்குமார் \பேச்சு 15:10, 20 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கூழைக்கிடா-கூழைக்கடா[தொகு]

தலைப்பை கூழைக்கடா என மாற்றலாமா? கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குற்றாலக் குறவஞ்சிப் பாடலில் அவ்வாறே கொடுக்கப்பட்டுள்ளது.--சிவக்குமார் \பேச்சு 15:34, 7 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

கூழைக்கடா என்பதே நான் பி.எல்.சாமியின் நூலில் பார்த்தப் பெயர். குற்றாலக் குறவஞ்சியிலும் கூழைக்கடா என்றே உள்ளது. எனவே கூழைக்கடா என்றே மாற்றலாம் என்பது என் கருத்து. --செல்வா 21:53, 7 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

தொடர்புடன் ஒரு கட்டுரை[தொகு]

ஜெயமோகனின் குருகு பார்க்க.--HK Arun 17:25, 19 மே 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கூழைக்கடா&oldid=1894353" இலிருந்து மீள்விக்கப்பட்டது