பெ. வரதராஜுலு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெ. வரதராசுலு நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெ. வரதராஜுலு நாயுடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1887-06-04)சூன் 4, 1887
இராசிபுரம் சேலம் தமிழ்நாடு
இறப்புசூலை 23, 1957(1957-07-23) (அகவை 70)
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்

பெ. வரதராஜுலு நாயுடு (P. Varadarajulu Naidu, ஜூன் 4, 1887 - ஜூலை 23, 1957) இந்திய அரசியல்வாதியும், இந்திய விடுதலை போராட்ட வீரரும் ஆவார். சித்த ஆயுர்வேத மருத்துவரும், பத்திரிக்கையாளருமான இவர் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1887 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி வரதராஜுலு பிறந்தார்.[1] பலிஜா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில் அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்து​கொண்டார்.​

உயர்நிலைக் கல்வி கற்கும்​பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது.​

பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். ​ அவர் சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் பெரும்​ புகழ்பெற்றதால் அமைந்தது.

அரசியலில்[தொகு]

1906 ஆம் ஆண்டில் 19 வயதில் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1916 இல் தேசியஅரசியலில் தீவிரமாகப் பங்கேற்றார். 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறைவாசம் விதிக்கப்பட்டது.​ சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, ​​பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்​பட்டது.​ விசாரணையில்,​​ நாயுடுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி வாதாடினார். உயர்நீதி​மன்ற மேல் முறையீட்டில் இராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க​வாதத்தால்,​​ நாயுடு விடுதலை பெற்றார்.​

அவர் சேலத்தில் வாரப்பதிப்பாக 1919ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பித்த "தமிழ்நாடு" இதழும் அவர் எழுதிய இரு கட்டுரைகள்,​ அரசுத்​துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறைவாசத்தை ஏற்றார்.​

1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​ இது மூன்றாவது சிறைத்​தண்டனையாகும்.

1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்த​பொழுது,​​ வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார்.​1921 இல் மீண்டும் சேலம் வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி,​ தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​​ காந்தியடிகளிடம் கொடுத்து​விட்டார்.​

1922 இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட​பொழுது,​​ அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு​ தான் வரி​கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார்.

வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம்,​​ காந்தியடிகளின் "யங் இந்​தியா"வில் வெளிவந்தது.​

1925 இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராகவும் பணியாற்றினார்.​ 1929 இல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.​ பின்னர் ஆரியசமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ​போது,​அதனை முறியடிப்பதற்கென்று வரதராஜுலு​ பிரசாரம் செய்தார். ஜி. சுப்பிரமணிய ஐயர்,​​ பாரதியார், திரு வி. க.வைத் தொடர்ந்து,​​ தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் நாயுடு.

இதழியல் பணி[தொகு]

இவரது இதழியல் பணி "பிரபஞ்சமித்திரன்" எனும் வார இதழ் மூலம் தொடங்கியது.​[2] மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும்,​​ சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட "பிரபஞ்சமித்திரன்" மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்த​பொழுது,​​ நாயுடு 1916 இல் அந்த இதழை வாங்கினார்.​ அவர் ஆசிரியரானார்.​ இரண்டாண்டுகள் வெளிவந்தது.​ 1918 ஆம் ஆண்டு நாயுடு சிறைப்பட்டபொழுது, ஆயிரம் ரூபாய் ஈடுகாணம் அரசால் கேட்கப்பட்டு,​​ பத்திரிகை முடக்கப்பட்டது.

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு "தமிழ்நாடு" இதழைத் தொடங்கி ஆசிரியராக இருந்து பணிஆற்றிய நாயுடுவின் பணி ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.​ 1925 ல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார். 1931 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.

1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும்,​​ சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும்,​​ தமிழ்நாடு இதழின் நலிவிற்​கும் காரணமாயிற்று.​ விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்​பட்டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்தலில்,​​ சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.​

"தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்க​நாதம்" எனும் தலைப்​பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடு​வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.​

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._வரதராஜுலு_நாயுடு&oldid=3929003" இலிருந்து மீள்விக்கப்பட்டது