பெர்லின் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு ஜெர்மனியினர் பேர்லின் சுவரைக் கட்டுகின்றனர், நவம்பர் 20 1961
சுவரின் கடைசிக் கட்ட வடிவமைப்பு
பெர்லின் செயற்கைக்கோள் படம், சுவர்ப் பகுதி மஞ்சள் நிறத்தில் குறியிடப்படுள்ளது.

பேர்லின் சுவர் அல்லது பெர்லின் சுவர் (Berlin Wall) (செருமன்: Berliner Mauer, உருசிய மொழி: Берли́нская стена́), என்பது கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிக்கும் சுவர் ஆகும்.

பனிப்போரின் சின்னமாகக் கருதப்படும் இச்சுவர் இரண்டு பகுதிகளையும் 28 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்தது. இதன் கட்டுமானப்பணி 1961 ஆகத்து 13 அன்று ஆரம்பித்தது. இச்சுவர் பனிப்போரின் இறுதியில் 1989 இல் முற்றாக இடிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இச்சுவரைத் தாண்டி மேற்கு ஜெர்மனிக்குள் தப்ப முயன்ற 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[1]

பனிப்போரின் இறுதியில் உள்நாட்டுக் குழப்பங்களின் உச்சக்கட்டத்தில் கிழக்கு ஜெர்மனி அரசு 1989 நவம்பர் 9 இல் மேற்கிற்குள் செல்வதற்கு மக்களை அனுமதிப்பதாக அறிவித்தைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி மேற்கிற்குள் நுழைந்தனர். பல்லாயிரக்கணக்கான மேற்கு ஜெர்மனியினர் இவர்களை மறு பக்கத்தில் இருந்து வரவேற்றனர். அடுத்த சில கிழமைகளில் சுவர் இடிக்கப்பட்டது.

பேர்லின் சுவரின் வீழ்ச்சி ஜெர்மனி இரண்டும் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது. இவை 1990 அக்டோபர் 3 இல் இணைந்தன.

பின்னணி[தொகு]

போருக்கு பிந்தைய ஜெர்மனி[தொகு]

ஐரோப்பாவில் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்த பின்னர், போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின் படி ஓடர் - நெஸ்ஸீ கோட்டிற்கு மேற்கு இருந்த ஜெர்மானிய பகுதி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நேச நாடுகளால் (ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்சு , சோவியத் யூனியன்) கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. நேச கட்டுப்பாட்டு கவுன்சில் தலைமையாகமாக இருந்தால், முழுமையாக சோவியத் மண்டலத்துக்குள் இருந்த போதிலும் தலைநகர் பெர்லினும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது.[2]

இரண்டு ஆண்டுகளுக்குள், சோவியத் மற்றும் மற்ற ஆக்கிரமிப்பு சக்திகளின் இடையே அரசியல் பிளவுகள் அதிகரித்தது. இவற்றுள் ஜெர்மனியின் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு புனரமைப்பிற்கு சோவியத்தின் 'மறுப்பும் அடங்கும். பின்னர் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா மற்றும் பெனிலக்ஸ் நாடுகள் சந்தித்து சோவியத் அல்லாத மண்டலங்களை இணைத்து ஒரு மண்டலமாக மாற்ற முடிவு செய்தன.

கிழக்கு முகாம்[தொகு]

இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து, சோவிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், போலந்து, ஹங்கேரி, மற்றும் செக்கோஸ்லோவாக்கியாஆகிய நாடுகளுக்கு தலைமை தாங்கி, அவற்றை பலவீனமான சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த ஜெர்மனியுடன் இணைந்து பராமரிக்க விரும்பினார்.[3] 1945 ல், ஸ்டாலின் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் பிரிட்டிஷ் நிலையை குறைப்பதாகவும், மெதுவாக அமெரிக்கா ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் விலகுவதாகவும், அதன் பின்னர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் ஜெர்மனி வழியில் நிற்க எதுவும்மில்லை என்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் தெரிவித்தார்.[4]

1950 களின் தொடக்கத்தில் மேற்கு குடியேற்றங்கள்[தொகு]

இரண்டாம் உலக போரின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு பின்னர், கிழக்கு முகாமின் புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெரும்பான்மையினர் சுதந்திரமடையவும் சோவியத் அவர்களை விட்டு செல்லவும் விரும்பினர்.[5] ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையே உள்ள மண்டல எல்லையை சாதகமாக பயன்படுத்தி மேற்கு ஜெர்மனிக்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வந்தது.[6][7] ஜோசப் ஸ்டாலினின் நடவடிக்கை பெரும் அதிருப்தியை வளர்த்தது.[8] 1953யின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 226,000 பேர் வெளியேறினர்.[9]

அமைப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகள்[தொகு]

அமைப்பு மற்றும் மாற்றங்கள்[தொகு]

பேர்லின் சுவர் 140 கிலோமீட்டர்க்கும் மேல் (87 மைல்) நீளம் கொண்டது. ஜூன் 1962 ல், இரண்டாவது சுவர் சுமார் 100 மீட்டர்கள் (110 யார்டு) தூரம் கிழக்கு ஜெர்மன் பிரதேசத்தில் கட்டப்பட்டது. சுவர்களுக்கு இடையே இருந்த வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பகுதி Death Strip என்றழைக்கப்பட்டது. மணல் அல்லது சரளை கற்களால் மூடப்பட்டிருந்த இப்பகுதி தப்ப நினைக்கும் மக்களின் கால்தடங்களை கண்டறிய உதவியது.

பல ஆண்டுகளாக, பேர்லின் சுவர் நான்கு பதிப்புகளை கண்டது:

  1. கம்பி வேலி (1961)
  2. மேம்படுத்தப்பட்ட கம்பி வேலி (1962-1965)
  3. கான்கிரீட் சுவர் (1965-1975)
  4. Grenzmauer 75 (எல்லை சுவர் 75) (1975-1989)

கடப்பு[தொகு]

கிழக்கு பேர்லின் மற்றும் கிழக்கு ஜேர்மனியர்கள், முதலில் மேற்கு பேர்லின் அல்லது மேற்கு ஜெர்மனிக்கு பயணம் செய்யவே முடியாது. இந்த கட்டுப்பாடு சுவரின் வீழ்ச்சி வரை அமுலில் இருந்தாலும் பிந்தைய ஆண்டுகளில் இந்த விதிகள் பல விதிவிலக்குகளை கண்டது.

  • 1965 முதல் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் மேற்கே பயணிக்க முடியும்
  • முக்கிய குடும்ப விஷயங்களுக்காக உறவினர்கள் வருகைகள்
  • தொழில்முறை காரணங்களுக்காக மேற்கே பயணிக்க வேண்டியிருந்த மக்கள் (உதாரணமாக, கலைஞர்கள், லாரி டிரைவர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோர்)

தகர்த்தல்[தொகு]

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட தேதி 9 நவம்பர் 1989 என கருதப்படுகிறது, ஆனால் அது முழுமையாக ஒரே நாளில் தகர்க்கப்படவில்லை. அன்று மாலை தொடங்கி தொடர்ந்து வந்த நாட்களில், மக்கள் சுத்தியல் மற்றும் உளிகளை கொண்டு சுவரை தகர்த்தனர். இந்த மக்கள் "Mauerspechte" (சுவர் மரங்கொத்தி பறவைகள்) என செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டனர்.[10] பின்னர் வந்த வாரங்களில் கிழக்கு ஜெர்மனி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் (போட்ஸ்டேமெர் பிளாட்ஸில், Glienicker Brücke, Bernauer Straße) பத்து புதிய எல்லைகளை திறப்பதாக அறிவித்தது. இருபுறமும் மக்கள் மணி நேரம் காத்திருந்து சுவர் பகுதி தகர்க்க படுவதையும் பழைய சாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்படுவதையும் கண்டுகளித்தனர்.

எதிர்ப்பு[தொகு]

அந்த நேரத்தில் சில ஐரோப்பிய தலைநகரங்களில், ஒன்றுபட்ட ஜெர்மனியின் முன்னேற்றம் பற்றி ஒரு ஆழ்ந்த கவலை இருந்தது. செப்டம்பர் 1989 ல், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் பேர்லின் சுவர் இடிக்கப்பட கூடாது என சோவியத் அதிபர் மிகைல் கோர்பச்சேவிடம் கேட்டுகொண்டார்.[11][12]

பேர்லின் சுவர் வீழ்ச்சிக்கு பின்னர், பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் ஒன்றுபட்ட ஜெர்மனி அடால்ப் ஹிட்லரை விட அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் ஐரோப்பா அதன் விளைவுகளை தாங்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dw-world.de/dw/article/0,2144,2125882,00.html
  2. Miller 2000, ப. 4–5
  3. Miller 2000, ப. 10
  4. Miller 2000, ப. 13
  5. Thackeray 2004, ப. 188
  6. Bayerisches Staatsministerium für Arbeit und Sozialordnung, Familie und Frauen, Statistik Spätaussiedler Dezember 2007, p.3 (in German)
  7. Loescher 2001, ப. 60
  8. Loescher 2001, ப. 68
  9. Dale 2005, ப. 17
  10. "பேர்லின் சுவர்". History.com. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 16, 2013.
  11. "How Margaret Thatcher pleaded with Gorbachev not to let the Berlin Wall fall out of london". Hasan Suroor (Chennai, India: Hindu). 15 September 2009 இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130719125911/http://www.hindu.com/2009/09/15/stories/2009091553501100.htm. பார்த்த நாள்: திசம்பர் 16, 2013. 
  12. Gledhill, Ruth; de Bruxelles, Simon (11 September 2009). "Thatcher told Gorbachev Britain did not want German reunification". Times (UK). http://www.timesonline.co.uk/tol/news/politics/article6829735.ece. பார்த்த நாள்: திசம்பர் 16, 2013. 
  13. Gledhill, Ruth; de Bruxelles, Simon (10 September 2009). "United Germany might allow another Hitler, Mitterrand told Thatcher". Times (UK). http://www.timesonline.co.uk/tol/news/world/europe/article6828556.ece. பார்த்த நாள்: திசம்பர் 16, 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லின்_சுவர்&oldid=3350702" இலிருந்து மீள்விக்கப்பட்டது