பெரும்பொருள் விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பொருள் விளக்கம் [1] [2] என்னும் நூல் பண்டைய தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. [3] சிற்றட்டகம், சிறுநூல் [4] ஆகியவை எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்கள். பெரும்பொருள் விளக்கம் என்னும் இந்த நூலும் அக் காலத்தது. வீரம், ஈகை முதலானவை பெருமை கொள்ளத்தக்க செயல் ஆகையால் இப் பொருள் பற்றிய பாடல்களைக் கொண்ட இந்த நூல் பெரும்பொருள் விளக்கம் எனப்பட்டது. பெரும்பொருள் என்பது பெருமிதப் பொருள்,

தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையில் பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலின் பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. எனினும் அந்த உரையில் நூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 15 1ம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் நூலில் அந்தப் பாடல்கள் உள்ள நூலின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு எடுத்துக்காட்டப்பட்ட பாடல்கள் 41. எல்லாமே வெண்பாக்கள். [5]

துறைகள்[தொகு]

அமர், அறிவுடைமை, ஈகை, எயிற்காத்தல், களம், குடி மரபு, தானை மறம், திறை கோடல், நிரை கோடல், நிரை மீட்சி, பகைவயிற் சேறல் செல்லல், பாசறை, யானை மறம், வாழ்த்து என்னும் துறையினவாக இந்தப் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு [6][தொகு]

120 பாடல்கள் இந்த நூலின் பாடல்களாகத் திரட்டப்பட்டுள்ளன. [7]

1

இற்றைப் பகலுள் எயில் கதவம் புக்கு அன்றிப்
பொறறேரான் [8] போனகம் [9] கைக் கொள்ளானால் - எற்றாங்கொல் [10]
ஆறாத வெம்பசித் தீ ஆற உயிர் பருகி
மாறா மறலி வயிறு.

2

போர் வாகை வாய்த்த புறவடிகள் மேதக்கார்
ஏர் வாழ்நர் என்பதற்கு ஏதுவாம் - சீர்சால்
உரை காக்கும் மன்னர்க்கு ஒளி பெருகத் தாம் தம்
நிரை காத்துத் தந்த நிதி.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறத்திரட்டு நூலின் முன்னுரையில் சு. வையாபுரிப் பிள்ளை பெரும்பொருள் விளக்கம் என்னும் நூல் பொருள் இலக்கணத்தை மேற்கோள்களால் விளக்கும் நூல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  2. நச்சினார்க்கினியார் சீவக சிந்தாமணி பாடல் எண் 187 உரையில் இந்த நூலைப் பெரும்பொருள் எனக் குறிப்பிடுகிறார்.
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 78. 
  4. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நேமிநாதம் சின்னூல் எனவும் போற்றப்படுகிறது. இந்தச் சின்னூல் வேறு. சிறுநூல் வேறு.
  5. புறப்பொருள் வெண்பாமாலை நூலில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ள வெண்பாக்களும் வெண்பாக்களே
  6. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
  7. இங்குக் கருவிநூலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாறு நூலில் 12 பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன
  8. பொன தேரான் = அழகிய தேர் வீரன்
  9. உணவு
  10. என் ஆம் கொல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பொருள்_விளக்கம்&oldid=3342932" இலிருந்து மீள்விக்கப்பட்டது