பெரிய மலையாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய மலையாளி எனப்படுவோர் மலையாள கவுண்டர் பழங்குடி வகுப்பில் காணப்படும் பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) என்னும் மூன்று உட் பிரிவுகளில்[1] முதல் பிரிவை சார்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மலையை சார்ந்து வாழ்வதால் மலைவாழ் மக்கள் எனவும் மலையாளி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

பெரிய மலையாளிகள் கல்வராயன் மலையிலும், சேர்வராயன் மலையிலும், சித்தேரியிலும் வாழ்கின்றனர். இவர்களைக் கல்ராயர் என்றும் கூறுவர். இவர்கள். தங்களைக் காராளர் என்ற வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். 'காராளர்' என்ற பெயர் மலையாளத்தின் மற்றொரு பெயரான 'கேரளம்' என்பதனோடு தொடர்புடையது என்று சிலர் கருதுகின்றனர். மலையாளிகளின் ஒருசில பழக்க வழக்கங்கள் கேரள மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர் போலும். காராளர் என்ற சொல்லின் ஆட்சி 'உழவர்' என்ற பொருளில் பண்டைத் தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றது. கம்பர் கூட, "கார் நடக்கும்படி நடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனின் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்'- என்று கூறுகிறார்.[2]

பெரிய மலையாளிகள் 1962 க்கு முந்தைய பதிவின்படி கள்ளக்குரிச்சி வட்டத்தில் 22,000 பேரும், ஆத்தூர் வட்டத்தில் 12,000 பேரும் வாழ்கின்றனர். இம்மலையாளிகள் ஐந்து தலைவர்களால் பண்டை நாளில் இங்குக் குடியேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இப் பகுதிகள் ஐந்து ஜாகீர்களாகப் பிரிக்கப்பட்டு, இன்றும் அவர்கள் வழி வந்தோரால் ஆளப்படுகின்றன. இத் தலைவர்களின் உரிமை பரம்பரையானது. இந்த ஜாகீர் ஒவ்வொன்றும் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இக் கல்ராயர்கள் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளோடு மணத்தொடர்பு கொள்வதில்லை. தொலைவும், வகுப்புப் பிரிவும் காரணங்களாக இருக்கலாம். சேர்வராயன் மலையிலுள்ள பெரிய மலையாளிகள் மூன்று பிரிவினர்களாக வாழ்கின்றனர். சேல நாடு, மொக நாடு, முத்து நாடு என்பவையே அப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் ஒரு பட்டக்காரனின் ஆணைக்கு உட்பட்டது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது பட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டியும் மூப்பன் என்ற தலைவனின் ஆணைக்கு அடங்கியது. ஒவ்வொரு மூப்பனும் அப்பட்டியிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறான், ஒவ்வொரு பட்டக்காரனுக்கும் துணையாக மணியக்காரர்களும், மூப்பர்களுக்குத் துணையாகக் கங்காணிகளும் உள்ளனர். சித்தேரியிலுள்ள 'குரு' சேர்வராயன் மலையிலுள்ள மூன்று நாட்டுப் பெரிய மலையாளிகளாலும் போற்றி மதிக்கப்படுகிறார்.[2]

பார்ப்பனப் புரோகிதர்கள் மலையாளிகளுக்குக் கிடையாது. மேற்கூறிய சாதித் தலைவர்களே மற்ற பொறுப்புக்களோடு, திருமணம் முதலிய சடங்குகளையும் முன்னின்று நடத்துகின்றனர். ஆனால் பவானி வட்டத்திலுள்ள கொல்லி மலையாளிகள் மட்டும் ஓர் அய்யங்காரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பட்டக்காரர்களும், துரைகளும் மலையாளிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். இவர்களைக் காண்போர் எதிரே குப்புற விழுந்து வணங்குவர்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. தமிழியல் கட்டுரைகள் நூல், 1995, ந. சஞ்சீவி, வெளியீடு; சென்னை பல்கலைக்கழகம், பக்கம் 1
  2. 2.0 2.1 2.2 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மலையாளி&oldid=3068888" இலிருந்து மீள்விக்கப்பட்டது