பூப்புனித நீராட்டு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூப்படைதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரை பூப்புனித நீராட்டு விழா பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.
1870 ஆம் ஆண்டில் ஒரு இந்து தமிழ்ப் பெண் (மையத்தில்), தனது பூப்புனித நீராட்டு விழாவின்போது தாவணி பாவாடை, மலர்கள், நகைகள் போன்றவற்றை அணிந்துள்ளார்.

பூப்புனித நீராட்டுவிழா (Ritu Kala Samskaram) என்பது, பெண் பால்முதிர்ச்சி அடைந்து முதல் மாதப்போக்கினைக் கண்டதை விழாவாக்கிக் கொண்டாடும் ஒரு சடங்காகும். முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா அதையடுத்துவரும் அண்மைய நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. சில மக்கள் குழுக்களிடையே ஆண்களுக்கும் இத்தகைய சடங்குகள் நடத்தப்படுவதுண்டு. இச்சடங்குகளும் விழா முறைகளும் மதம், சாதி, வாழ்நிலை, வர்க்கம், இனம் சார்ந்தும் வேறுபடுகின்றன.

ஈழத் தமிழர்களுக்கான சடங்குகள்[தொகு]

இங்கே விபரிக்கப்படுபவை தென்னிந்திய, ஈழத்து தமிழரிடையே (சாதிப்படிநிலைச் சமூக அமைப்பில்) இந்துக்களிடையே நடைபெறும் சடங்குகளின் பொதுப்போக்கான சில கூறுகளாகும். இடத்துக்கிடம் இக்கூறுகள் மாற்றம் கணாலாம், வேறு பல கூறுகள் சேர்க்கப்படலாம். சில கைவிடவும்படலாம்.

நீராட்டல்[தொகு]

மஞ்சள் நீராட்டுச் சடங்கு

பெண் பூப்படைந்தவுடன் முக்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். இக்காலகட்டத்தில் பெண்ணை குளியறையில் நீராட்டலாம். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின்னர் ஒரு தனியறையில் பெண்ணை விடுவர். அவ்வறையில் வேப்பிலை மற்றும் காம்புச்சத்தம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேல் செருகிவிடுவர். பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் (இந்துத் தமிழ்ச் சூழலில் தாழ்த்தப்பட்ட ஒரு சாதி) கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டு முடியும் வரை மாற்றுடுப்பு வழங்கும் பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் (சலவைத் தொழிலாளியைக் குறிக்கும் சாதிப்பெயர்) எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பத்தொரு நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு பிராமண சாதியைச் சேர்ந்த ஒருவரை அழைத்து புண்ணியவாசம் செய்வார்கள். முன்பு கிராமபுறங்களில் பூப்பெய்தி 4 ஆம் நாள் பசும் பால் வைத்து நீராட்டித் துடக்கைப் போக்குவார்கள்.

உணவு முறை[தொகு]

முதற்தண்ணி வார்த்ததும் சில இடங்களில் கத்தரிக்காயை மெதுவாக அடுப்புத் தணலில் சுட்டு எடுத்து, சிறிய உரலில் போட்டு இடித்துச் சாறு பிழிந்தெடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். ஒரு தரம் இதைக் குடித்தால் பெண்களுக்குப் பிரத்தியேகமாக ஏற்படும் நாரி வலி பின் ஒருபோதும் தோன்றாது என நம்பப்படுகிறது. உணவாக முதல் மூன்று நாட்களும் பச்சையரிசிச் சாதமும், கத்தரிக்காய் பாற்கறியும் கொடுப்பர். மூன்று நாட்களின் பின் அதிகாலை ஒரு பச்சை முட்டை குடிக்கக் கொடுக்கும் பொழுது அதன் அளவு நல்லெண்ணெயும் முட்டைக்கோதுக்குள் விட்டு குடிக்கக் கொடுப்பர். பின்பு காலை உழுத்தங்களி, மதியம் சோறு கறி, கத்தரிக்காய் பொரியல், முட்டைப் பொரியல் கொடுப்பர். பொரியல் வகையறாக்கள் நல்லெண்ணெயிலேயே பொரிக்கப்படும். பால் விடாது காலை, மாலை கோப்பி கொடுக்கலாம். இரவு இடியப்பம் கொடுக்கலாம். இக்காலத்தில் இலகுவாக சமிபாடடையக் கூடிய ஊட்டநலன் உள்ள உணவுகளைக் கொடுப்பர். முக்கியமாக அனைத்து உணவுகளிலும் உழுந்தும், நல்லெண்ணெயும் மிகுதியாகச் சேர்க்கப்படும்.

அத்துடன் காலையில் வேப்பிலை 10, மிளகு 3, விரற்பிடி சின்னச் சீரகம், 2 உள்ளிப் பல், சிறுதுண்டு மஞ்சள் இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் குளிசைகளாக்கி 3 நாட்களுக்கு விழுங்கக் கொடுப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது .

சாமர்த்தியச் சடங்கு[தொகு]

சடங்கு செய்வதற்குச் சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து அன்று பருவடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் பாக்கும் சில்லறைக் காசும் வைத்துச் சுருட்டப் பெற்ற ஒரு வெற்றிலையைக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுனங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்ககூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு வெள்ளைத்துண்டை இட்டு அதன் மேலோ பருவமடைந்த பெண்ணை உட்கார வைப்பர். அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகள், ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைறைக் காசு முதலியனவும், வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு வெற்றிலையும், ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். இச்சடங்கில் தாய்மாமன், மாமிக்குத்தான் முக்கிய இடம் அளிக்கப்படும். பெண்ணை நிறைகுடம் விளக்கில் பார்க்கும்படி பெண்ணுக்குக் கூறி முகத்திரையை விலக்கி விட்டு அதன் பின் கற்பூரம் ஏற்றி பிள்ளையாரைத் துதித்து எடுத்த காரியம் இனிதே நடைபெற வேண்டும் என்று நினைத்து வணங்க வேண்டும். தாய்மாமன் தேங்காய் உடைப்பார். பின் பால், அறுகு இருக்கும் தட்டில் சில்லறைக்காசு போட்டு மாமியார் இருகைகளாலும் எடுத்து பெண்ணை ஆசீர்வதித்து தலையில் வைப்பார்கள் அதைத் தொடர்ந்து 5 பேர் அல்லது 7 பேர் என ஒற்றை எண்ணிக்கையாலனவர்கள் பாலறுகு வைப்பர். பாலறகு வைத்து முடிந்ததும் பெண்ணை நீராட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பெண்ணை இருத்தி முதலில் தாய்மாமன் தலையிலே தண்ணீரை ஊற்றுவார். அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ஊற்றுவார்கள். பெண்ணுக்கு மஞ்சள் பூசி நன்கு நீராட்டி மீண்டும் தலையைத் துணிகொண்டு மூடி அழைத்து வந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் குத்துவிளக்கை தரிசிக்க விடுவர். பின்பு பெண்ணை அலங்காரம் செய்து தாய்மாமன் பெண்ணின் கையில் கும்பம் (தேங்காய் மற்றும் மாவிலைக் கொத்தினால் மூடப்பெற்ற நிறைகுடம் அல்லது செம்பு) கொடுப்பார். கன்னிப் பெண்கள் குத்துவிளக்குடன் பெண்ணை அழைத்துக் கொண்டு மேடையை நோக்கிச் செல்வர். அங்கு ஆரத்தி தட்டங்கள் வரிசையாக வைப்பார்கள்.

பின்னர் சுமங்கலிப் பெண்கள் இருவர் எதிரெதிரே நின்றுகொண்டு ஒவ்வொரு தட்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை வலது தோளால் உயர்த்தி ஆரத்தி எடுத்து பின் தலையை மூன்று முறை சுற்றி அதைப் பின்னுக்கு கொடுத்து கண்ணூறு கழிப்பார்கள். பின்பு கடைசியாக வேப்பிலையால் சுற்றித் தடவி பால் ரொட்டியை உடைத்து நாலுபக்கமும் எறித்து வேப்பிலையால் தலையைச் சுற்றிப் பெண்ணை வாயில் மென்று துப்பச் செய்தபின்னர், வாழைப்பழ ஆரத்தி எடுப்பர். (ஆரத்திக்குரிய தட்டங்களின் ஒழுங்கு இடத்துக்கிடம் வேறுபடலாம், ஆனால் எப்பவும் நிறைநாழி முதலாவதாகவும் வேப்பிலை வெள்ரொட்டித்தட்டம் இறுதியாகவும் செய்யவேண்டும். அதன் பின் வாழைப்பழம் ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும். (பொதுவாகப் பெண்ணின் தாயார் ஆராத்தி எடுப்பதில்லை). பெற்றோர் ஆண்டாள் மாலையை பெண்ணின் கழுத்தில் இட (ஆண்டாள் மாலை அணிவது பெண்ணைப் பாவையாக கருதுவதால்) பெண்ணின் முன் இருக்கும் நிறைகுடத்தைத் தாய்மாமனும், குத்துவிளக்கை மாமியாரும் எடுத்துக்கொண்டு அதனுடன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு பூசை அறையினுள் சென்று வைப்பர், தாய்மாமன் பெண்ணின் கையிலிருக்கும் செம்பை வாங்கி பூஜை அறையில் வைப்பர் (இம்முறை வீட்டில் செய்வோருக்குப் பொருந்தும்) பூஜை அறையில் தூப தீபம் காட்டி வழிபட்டு பெண் பெற்றோரினதும், மாமன் மாமியினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்பு சடங்கில் பங்குபற்றிய உறவினர்கள் பெண்ணை வாழ்த்தி தம்மால் இயன்றவரை பரிசளிப்பர். அதன் பின் வந்தவர்கள் மதிய உணவு விருந்தளித்து உபசரிப்பர்.

ஆரத்தி எடுக்கும் முறை[தொகு]

ருது சாந்தியின் போது எடுக்கும் ஆரத்தி 3 முறை மேலும் கீழுமாக சுற்றிப் பின் பெண்ணின் தலைக்கு மேல் 3 முறை சுற்றிப் பின்னால் கொடுப்பர். (நிறை நாழியும் பன்னீர்த்தட்டமும் முன்னுக்கு வைக்கவேண்டும். உணவுத் தட்டங்களைத் தலைக்கு மேல் சுற்றிப் பின்னால் கொடுப்பர். பூத்தட்டத்தால் ஆரத்தி எடுத்தபின் பூக்களைப் பெண்மேல் தூவிவிடுதல் வேண்டும். பின் இந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கட்டிக் கட்டாடியிடம் கொடுத்து விடப்படும். அல்லது ஆற்றிலோ, கடலிலோ சேர்த்து விடப்படும்.

பால்சாதம்: பச்சை அரிக்குள் தேங்காய்ப் பாலும், நீரும் சிறிது உப்பும் போட்டு சாதமாக அவித்து 3 தளிசுகளாகத் தட்டில் வைக்கலாம்.

பிட்டு : வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும்..

களி: வறுத்த அரிசிமா 1 சுண்டு, வறுத்த உழுத்தமா ½ சுண்டு, தேங்காய்பால் 3 சுண்டு, பனங்கட்டி ¾ சுண்டு உப்பு விரற்பிடியளவு, தேங்காய்ப் பாலைக் காய்ச்சி (உழுத்தமா, அரிசிமா, உப்பு, தூளாக்கிய பனங்கட்டி எல்லாவற்றையும் கலந்து பாலின் மேல் தூவி கட்டிபடாமல் கிளறி எடுத்து 3 தளிசுகளாக தட்டத்தில் வைப்பர்.

வெள்ரொட்டி (பால்ரொட்டி)[தொகு]

1 சுண்டு பச்சை அரியை கழுவி ஊற வைத்து இடித்து ¼ சுண்டு கப்பிமா எடுப்பர். மிகுதியை மாவக்குவர் இரண்டையும் கலந்து ½ தேக்கரண்டி உப்பும்சேர்ப்பர். ஒரு தேங்காய் துருவி முதல் பால் எடுத்து காய்ச்சி மாவில் ஊற்றி இறுக்கமாக கையில் ஒட்டாத பதத்திற்கு குழைப்பர். ½ மணித்தியாலம் விட்டு ஒரு வாழையிலையில் எண்ணெய் தடவி மாவை சிறு உருண்டைகளாகத் தட்டி எண்ணெயில் பொரிப்பர். இது பூரி போல் பொங்கி வரும்.

ஆரத்திப் பொருட்கள்[தொகு]

நிறை நாழி (நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்பு சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலையைச் சொருகி வைப்பர்.)

பிட்டி, களி, பால்சாதம், சோறுகறி. தேங்காய்த் தட்டம் (முடியுடன் கூடிய 3 தேங்காய்களை மஞ்சள் நீர் கொண்டு கழுவித் தட்டில் வைப்பர்),

  • பழங்கள்
  • பலகாரம்
  • பன்னீர்த்தட்டம்
  • வெற்றிலை பாக்கு எலுமிச்சை,
  • பூத்தட்டு,
  • வெள்ரொட்டி,
  • வேப்பிலை,
  • ஆரத்தி.

தமிழ்நாட்டுச் சடங்குகள்[தொகு]

தமிழ்நாட்டில் ஒரு பெண் பூப்படைந்திருக்கிறாள் என்பதை சில பெண்களைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர். இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வை பூப்படைந்த பெண்ணின் தாயைத் தவிர பிறரே செய்கின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்த பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் வரை வீட்டின் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறாள். இந்த தனிமைக் காலத்தில் பூப்படைந்த பெண்ணிற்கு உண்ண தனித் தட்டு, போன்றவையும், படுக்கத் தனிப்படுக்கையும் அளிக்கப்படுகின்றன. (தற்போது இந்நிலை சிறிது மாற்றமடைந்துள்ளது.).பெண் பூப்படைந்த தினத்திலிருந்து பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாள் புரோகிதர்களைக் கொண்டு புனிதச் சடங்கும் அதைத் தொடர்ந்து அவரவர் சாதிக் கட்டுப்பாடுகளுக்கேற்ப குடும்பச் சடங்கும் நடத்தப்படுகின்றன. இந்தச் சடங்குகள் தமிழ்நாட்டிலுள்ள பகுதி மற்றும் சாதிகளுக்கு ஏற்ப சிறிது மாறுபடுகின்றன. இவ்விழாவை பூப்புனித நீராட்டு விழா என்கின்றனர்.

புனிதச் சடங்கு[தொகு]

பெண்கள் பூப்படையும் நிகழ்வைத் தீட்டாகக் கருதி அவளைப் புனிதப்படுத்துவதற்காக புரோகிதர்களைக் கொண்டு ஒரு புனிதச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தப் புனிதச் சடங்கில் புரோகிதர்கள் செய்யும் சடங்குடன் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் விருப்பத்தின்படி கூடுதல் சடங்குகளைச் செய்வதுண்டு.

பூப்படைந்த பெண்ணை ஒரு இடத்தில் அமரச் செய்து அந்தப் பெண்ணின் முன்னால் ஒரு வாழை இலை போட்டு, அதில் நெல் போட்டு அதன் மேல் மற்றொரு வாழை இலை போட்டு அதில் அரிசி போட்டு அதையும் ஒரு வாழை இலையைப் போட்டு அதன் மேல் மூன்று செம்புகளில்(கும்பம்) தண்ணீர் நிரப்பி அதில் மாஇலை, பூக்கள் போட்டு வைக்கப்படுகிறது. மஞ்சளைக் கொண்டு உருட்டி பிள்ளையார் உருவமாக வைத்து புரோகிதர் வழிபாடுகளைத் தொடக்குகிறார். அதன் பிறகு புரோகிதரால் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு யாகம் வளர்க்கப்படுகிறது. பின்னர் பூப்படைந்த பெண் அங்கிருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்கிறார்.

இந்த யாகத்தின் முடிவில் தரையில் அரிசி மாவுப் பொடியால் மூன்று கோடுகளுடனான சதுர வடிவம் வரையப்படுகிறது. சதுரத்தின் நான்கு மூலைப்பகுதியிலும் நான்கு விளக்குகள் வைக்கப்பட்டு அனைத்துத் திரிகளிலும் தீபமேற்றப்படுகிறது. நான்கு மூலைகளிலும் இவற்றிற்கிடைப்பட்ட மத்தியப் பகுதியிலும் வெற்றிலை, பாக்கு மற்றும் வாழைப்பழம் வைக்கப்பட்டு நடுவில் பூப்படைந்த பெண் உட்கார வைக்கப்படுகிறாள். அதன் பின்பு நான்கு விளக்குகளும் நூலால் இணைக்கப்படுகின்றன. இப்போது புரோகிதர் மீண்டும் வேத மந்திரங்களை உச்சரிக்கிறார். பிறகு தாய்மாமன் மனைவியைக் கொண்டு ஒரு தீபத்தின் மூலம் நான்கு விளக்குகளையும் இணைத்த நூல் நான்கு மத்தியப் பகுதியில் துண்டிக்கப்படுகிறது.

இதன் பிறகு புரோகிதர் கும்பத்திலிருக்கும் புனித நீர் கொண்டு முதலில் பூப்படைந்த பெண்ணின் மேல் தெளிக்கிறார். பிறகு பூப்படைந்த பெண்ணின் பெற்றோர், அங்கு வந்திருப்பவர்கள் அனைவர் மீதும் தெளிக்கப்படுகிறது. பின்பு வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இப்புனித நீர் தெளித்துப் புனிதப்படுத்தப்படுகிறது.

குடும்பச் சடங்கு[தொகு]

புரோகிதர் புனித நீர் தெளித்துச் சென்றதும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் மனைவி மற்றும் பெண்கள் சிலர் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள்த்தூள் கலந்த நீர் கொண்டு குளிப்பாட்டுகின்றனர். இதன் பிறகு தாய்மாமன் கொண்டு வந்த பட்டுப்புடவை மற்றும் அலங்காரப் பொருட்கள் கொண்டு பூப்படைந்த பெண் அலங்கரிக்கப்படுகிறாள். பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் அல்லது அத்தை மகளுக்கு (சிறுமிக்கு) ஆணுக்கான உடை அணிவிக்கப்பட்டு மாப்பிள்ளையாக்கப்படுகிறாள்.பூப்படைந்த பெண்ணிற்கு தாய்மாமன் மனைவியும், மாப்பிள்ளை வேடமணிந்த சிறுமிக்கு பூப்படைந்த பெண்ணின் தாயும் மாலை அணிவிக்கின்றனர். அதன் பிறகு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குரிய சடங்குகள் செய்து ஆசிர்வதிக்கின்றனர்.

அம்மனுக்குப் பூப்புனித நீராட்டு[தொகு]

கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூறுகிறது.

இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது.

அதன் பிறகு ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது.

முக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.

பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.

பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது.[1]

மூடநம்பிக்கை[தொகு]

தமிழ்நாட்டில் பூப்படைந்த பெண்கள் வீட்டில் பூசாரிகள் மற்றும் சாமியாடிகளாக உள்ள அவர்களது உறவினர்கள் பதினாறு அல்லது முப்பது நாட்கள் வரை எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பல பெண்கள் பூப்படைந்த பெண்ணின் வீட்டில் முப்பது நாட்கள் வரை எந்தவிதமான உணவையும் வாங்கிச் சாப்பிடுவதில்லை. பூப்படைந்த பெண்ணிற்கு சில ஆண்டுகள் கழித்து பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டாலும் இவ்விழாக்களில் கலந்து கொள்ளும் பெண்களில் பலரும் தாங்கள் பூப்புனித நீராட்டு விழாக்களில் சாப்பிடுவதில்லை என்பது போன்ற தவறான எண்ணத்தில் மூடநம்பிக்கையில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • குறையொன்றுமில்லை, அமரர் கோணாமலை தங்கவடிவேல், 2005.திருகோணமலை.

மேற்கோள்கள்[தொகு]

  1. பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பக்கம் 61 முதல் 64 வரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூப்புனித_நீராட்டு_விழா&oldid=3536038" இலிருந்து மீள்விக்கப்பட்டது