பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை (Zero First Information Report) எனில் காவல் நிலையத்தின் அதிகார வரம்பை கணக்கில் கொள்ளாமல், நடந்த குற்றச் சம்பவம் தொடர்பாக குறித்து யாரேனும் எந்த ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், புகார் மனுவை பெற்றுக் கொண்டு, காவல் நிலைய அதிகாரிகள் பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை தயாரிப்பர். அந்த முதல் தகவல் அறிக்கையில் ஆண்டு மட்டும் இருக்கும். ஆனால் வரிசை எண் குறிக்கப்படாது. பின்னர் நிலைய காவல் துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, சம்பவம்/குற்றம் எந்த காவல் நிலைய அதிகார வரம்பில் வருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையை, முறையான விசாரனைக்காகச் உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பர். பின்னர் உரிய காவல் நிலைய அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் வரிசை எண் மற்றும் ஆண்டு பதிவு செய்யவர். [1][2][3]

சாதாரண முதல் தகவல் அறிக்கையில் காவல் நிலைய அறிக்கையில் குற்ற வரிசை எண் மற்றும் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையில் வரிசை எண் இருக்காது. ஆனால் ஆண்டு மட்டும் பதியப்பட்டிருக்கும். அத்தகைய எண் இல்லாத முதல் தகவல் அறிக்கையை, பின்னர் உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது, அங்கு அது வரிசை எண் மற்றும் ஆண்டு போன்ற விவரங்கள் பதிந்த பின்னர் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எனவே அத்தகைய முதல் தகவல் அறிக்கையை, பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.

சில சம்பவங்களுக்கு காவல்துறையினரின் உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது (மாதிரிகள் சேகரிப்பது, கண் சாட்சிகளிடமிருந்து தகவல்களைப் பெறுவது போன்றவை). அத்தகைய சூழ்நிலையில், இந்த வழக்கு தங்கள் அதிகார எல்லைக்குள் வராது என்று காவல் நிலைய அதிகாரிகள் தங்களை விலக்கிக் கொள்ளமுடியாது. தங்களது அதிகார எல்லை வரம்பில் குற்றம்/சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை பதியாமல் இருப்பதால், இந்த முறை சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையின் குறிக்கோளைத் தடுக்கும்.

பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை (அதாவது சம்பவம்/அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல்) எந்தவொரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படலாம். பின்னர் வழக்கை விசாரணை செய்தும், நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்த பின்னர் தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட பொருத்தமான காவல் நிலையத்திற்கு பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கையை மாற்றலாம்.

பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கையை பதிய மறுக்கும் காவல் நிலைய அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ஏ இன் கீழ் வழக்குத் தொடரவும், துறைசார் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

வரலாறு[தொகு]

புதிய குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2013 இல் நீதியரசர் வர்மா குழுவின் பரிந்துரைகளின் படி, பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை அறிமுகமானது. தில்லி பிரதேசத்தில் 23 வயது பெண்னை 2012 தில்லி கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கிற்கு பின் பூஜ்ஜியம் முதல் தகவல் அறிக்கை வழங்கும் முறை உருவாக்கப்பட்டது.

சத்விந்தர்கௌர் எதிர் தில்லி அரசு வழக்கில், சத்விந்த்கௌர் என்பவரால் தில்லியின் ஒர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை, தில்லி உயர் நீதிமன்றம் நீக்கித் தீர்ப்பு வழங்கியது. ஆனால் மேல்முறையீட்டில் இந்திய உச்ச நீதிமன்றம், குற்றச்சம்பவம் தங்களுடைய காவல் நிலைய எல்லையில் நிகழாவிட்டாலும், மனுதாரரின் புகார் மனுவை ஏற்று காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை பதிந்து வழக்கை விசாரிக்க முடியும் எனத்தீர்ப்பு வழங்கியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. What is zero FIR and why cops cannot cite jurisdiction and refuse complaints
  2. Zero FIR
  3. What is a zero fir? What is the procedure to file a zero fir?

வெளி இணைப்புகள்[தொகு]