புரூணை உள்நாட்டுப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூணை உள்நாட்டுப் போர்
Brunei Civil War
Perang Saudara Brunei
Digmaang Sibil sa Brunay

புரூணை சுல்தான் முகயிதின் படைகளுக்கு உதவியதற்கு சபாவின் கிழக்குப் பகுதி சூலு சுல்தானகத்திற்கு வெகுமதியாக வழங்கப்பட்டது.
நாள் 1660 - 1673
இடம் புரூணை சுல்தானகம்
சபா (புரூணை ஆட்சியில்)
சுல்தான் முகயிதின் வெற்றி:
பிரிவினர்
அப்துல் அக்குல் முபின் படைகள் சுல்தான் முகயிதின் படைகள்
  • சுல்தான் முகமது அலியின் சீடர்களின் கிளர்ச்சியாளர்கள் (அப்துல் அக்குல் முபினுக்கு எதிராக)
  • சூலு படைகள்
தளபதிகள், தலைவர்கள்
அப்துல் அக்குல் முபின் புரூணை சுல்தான் முகயிதின்

புரூணை உள்நாட்டுப் போர் (ஆங்கிலம்: Brunei Civil War; மலாய்: Perang Saudara Brunei; இடச்சு மொழி: Bürgerkrieg von Brunei) என்பது புரூணை சுல்தானகத்தில் (Bruneian Sultanate) 1660 முதல் 1673 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் ஆகும்.[1][2]

புரூணை நாடு மலேசியாவின் சரவாக் மாநிலத்தால் சூழப்பட்டு உள்ளது. அதன் வடக்கில் தென் சீனக் கடல் உள்ளது. 1984 சனவரி 1-ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. புரூணை அரசாங்கம் சுல்தான் வம்சாவழியினரால் ஆளப்படும் ஒரு முழுமையான முடியாட்சி நாடாகும்.

வரலாறு[தொகு]

பண்டார் செரி பெகாவானில் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் I-இன் கல்லறை (குவிமாடம்)
புரூணையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பிலகந்தோன் நீராவிக் கப்பல்; 8 சூலை 1846
1844-இல் புரூணையில் பிரித்தானிய கடல்படையின் கப்பல்
1844-இல் புரூணையில் பிரித்தானிய கடல்படையின் விக்சன் போர்க் கப்பல்

புரூணையின் பதின்மூன்றாவது சுல்தான் புரூணை சுல்தான் முகமது அலி (Brunei Sultan Muhammad Ali); அவருடைய மகனின் பெயர் இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சு (Pengiran Muda Bongsu).

புரூணை சுல்தான் முகமது அலியின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் பெங்கீரான் அப்துல் முபின் (Pengiran Abdul Mubin); அவருடைய மகனின் பெயர் பெயர் பெங்கீரான் மூடா ஆலாம் (Pengiran Muda Alam). பெங்கீரான் அப்துல் முபின் அப்போது புரூணையின் முதல்வர் பதவியில் இருந்தார்.

இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சு[தொகு]

இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சுவிற்கும்; அமைச்சரின் மகன் பெங்கீரான் மூடா ஆலாமிற்கும் இடையில் ஒரு சேவல் சண்டை போட்டி நடைபெற்றது. அதில் இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சு தோல்வி அடைந்தார். அமைச்சரின் மகன் பெங்கீரான் மூடா ஆலாம் வெற்றி அடைந்தார். சேவல் சண்டையின் முடிவுகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.[1]

இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சுவின் தோல்வியை பெங்கீரான் மூடா ஆலாம் கேலி செய்தார். அதனால் சினம் அடைந்த இளவரசர் பெங்கீரான் மூடா பொங்சு, பெங்கீரான் மூடா ஆலாமைக் கொன்றுவிட்டு, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார்.[1]

புரூணை சுல்தான் அப்துல் அக்குல் முபின்[தொகு]

செய்தி அறிந்த பெங்கீரான் அப்துல் முபினும் அவரின் ஆதரவாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து அரண்மனைக்குச் சென்றனர். பழிவாங்கும் விதமாக, புரூணை சுல்தான் முகமது அலியைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஒரு சுல்தான் மகனுக்கும் ஒரு முதல்வரின் மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சின்ன பிரச்சினை இரு கொலைகளில் போய் முட்ந்தது. அதன் பின்னர் பெங்கீரான் அப்துல் முபின் (Pengiran Abdul Mubin) தன்னை பதினான்காவது புரூணை சுல்தானாக நியமித்துக் கொண்டார். புரூணை சுல்தான் அப்துல் அக்குல் முபின் (Sultan Abdul Hakkul Mubin) (புரூணையின் 14-ஆவது சுல்தான்) என்ற பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார்.[2]

புரூணை சுல்தானகத்தின் புதிய பெண்டகாரா[தொகு]

முந்தைய சுல்தான் முகமது அலியின் ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்த சுல்தான் அப்துல் அக்குல் முபின் முயற்சிகர் செய்தார். அந்த வகையில் சுல்தான் முகமது அலியின் பேரனான முகயிதின் (Muhyiddin) என்பவரை புரூணை சுல்தானகத்தின் புதிய பெண்டகாராவாக (Bendahara) நியமித்தார்.

சில நாள்கள் கழித்து, முந்தைய சுல்தான் முகமது அலியின் (புரூணையின் 13-ஆவது சுல்தான்) ஆதரவாளர்கள், தற்போதைய சுல்தான் அப்துல் அக்குல் முபினை (புரூணையின் 14-ஆவது சுல்தான்) பழிவாங்கத் திட்டம் தீட்டினார்கள். புதிய பெண்டகாராவாகப் பதவி வகித்து வந்த பழைய சுல்தான் முகமது அலியின் பேரனான முகயிதினை (Bendahara Muhyiddin) தூண்டியும் விட்டார்கள்.[2]

பெண்டகாரா முகயிதின் முதலில் மறுத்தார். ஆனால் பின்னர் ஒப்புக் கொண்டார். பெண்டகாரா முகயிதினின் ஆதரவாளர்கள்; சுல்தான் அப்துல் அக்குல் முபினின் அரண்மனைகள் மற்றும் மாளிகைகளுக்குள் ஈட்டிகளைப் பாய்ச்சி தொந்தரவுகளைச் செய்தனர்.[1]

புரூணை சுல்தான் முகயிதின்[தொகு]

சுல்தான் அப்துல் அக்குல் முபின், நெருக்கடியை எதிர்நோக்கும் நோக்கத்துடன் பெண்டகாரா முகயிதினின் ஆலோசனையின் பேரில் செர்மின் தீவிற்கு (Chermin Island) தன் அரண்மனையை மாற்றினார்.

சுல்தான் அப்துல் அக்குல் முபின் வெளியேறிய பிறகு, பெண்டகாரா முகயிதின், தன்னை புரூணையின் 15-ஆவது சுல்தானாக புரூணை சுல்தான் முகயிதின் (Sultan Muhyiddin of Brunei) அறிவித்துக் கொண்டார். இதனால், புரூணையில் ஓர் உள்நாட்டுப் போர் தொடங்கியது.[1][2][3]

உள்நாட்டுப் போரின் போது, அப்துல் அக்குல் முபின் கினாரூத்து (Kinarut) எனும் இடத்திற்கு (இன்றைய சபா, பாப்பார்) தப்பிச் சென்றார். அங்கு அவர் பத்து ஆண்டுகள் தங்கி இருந்தார். சுல்தான் முகைதினின் தொடர்ச்சியான தாக்குதல்களையும் முறியடித்து வந்தார்.

சூலு சுல்தானகத்தின் தலையீடு[தொகு]

உள்நாட்டுப் போர் நீண்ட காலம் நீடிப்பதால் புரூணை சுல்தான் முகயிதின் கவலைப்பட்டார். சூலு சுல்தானிடம் அவரின் படைகளை அனுப்பி தமக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சூலு சுல்தான் உதவி செய்தால் அதற்கு வெகுமதியாக கிழக்கு சபா நிலத்தை வழங்க உறுதி அளித்ததாகவும் கூறப் படுகிறது.

சூலு சுல்தானுக்கு வெகுமதியாக சபா மாநிலம்[தொகு]

இறுதியில் ஓர் உள்நாட்டுப் போர் நடந்தது. அதில் சுல்தான் முகைதின் வெற்றி பெற்றார். முன்னாள் சுல்தான் அப்துல் அக்குல் முபின் கொல்லப்பட்டார். பின்னர் புலாவ் செர்மின் தீவில் (Pulau Chermin Royal Cemetery) சுல்தான் அப்துல் அக்குல் முபின் அடக்கம் செய்யப்பட்டார்.

புரூணை உள்நாட்டுப் போரின் போது புரூணை சுல்தானுக்கு உதவியதற்காக புரூணை சுல்தானிடம் இருந்து கிழக்கு சபாவை, சூலு சுல்தான் வெகுமதியாகப் பெற்றுக் கொண்டார். இவ்வாறுதான் சபா மாநிலம் புரூணை சுல்தானகத்தில் இருந்து தனித்துப் போனது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 History for Brunei Darussalam: Sharing Our Past (Secondary 1). பக். 44–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99917-2-330-7. 
  2. 2.0 2.1 2.2 2.3 History for Brunei Darussalm. EPB Pan Pacific. 2008. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-99917-2-545-1. 
  3. Senju, Shizuo (1980). History for Brunei Darussalam. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:99917-2-545-8. 
  4. Leigh R. Wright (1966). "Historical Notes on the North Borneo Dispute". The Journal of Asian Studies 25 (3): 471–484. doi:10.2307/2052002. https://archive.org/details/sim_journal-of-asian-studies_1966-05_25_3/page/471. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூணை_உள்நாட்டுப்_போர்&oldid=3682388" இலிருந்து மீள்விக்கப்பட்டது