பிள்ளையார்பட்டி தல வரலாறு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளையார்பட்டி தல வரலாறு
நூல் பெயர்:பிள்ளையார்பட்டி தல வரலாறு
ஆசிரியர்(கள்):கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
வகை:கட்டுரைத் தொகுப்பு
துறை:இடவரலாறு
காலம்:20ஆம் நூற்றாண்டின்
ஐந்தாம் பத்தாண்டுகள்
இடம்:காரைக்குடி
மொழி:தமிழ்
பக்கங்கள்:viii + 86
பதிப்பகர்:பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் அறநிலை
பிள்ளையார்பட்டி
பதிப்பு:முதல் பதிப்பு: 1955
இரண்டாம் பதிப்பு: 1983
மூன்றாம் பதிப்பு: 1988
நான்காம் பதிப்பு: 1990

பிள்ளையார்பட்டி தல வரலாறு என்னும் நூல் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களால் 1955ஆம் ஆண்டில் வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பிள்ளையார்பட்டிக் கோவில் நகரத்தார்க்கு காணிக்கை ஆக்கப்பட்டு உள்ளது.

தோற்றம்[தொகு]

பிள்ளையார்பட்டிக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்கள், கோயில் அமைப்பு, முதற் திருப்பணிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. செஞ்சிக்கு அருகில் உள்ள மண்டபப்பட்டு என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டைக் கொண்டு தமிழகத்தில் முதன்முதலில் குடைவரைக் கோயிலை உருவாக்கியவர் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் கருதப்பட்டது. அக்கருத்தை இக்கோயிலில் உள்ள பெருபரணன் கல்வெட்டைச் சான்றாகக் கொண்டு நூலாசிரியர் மறுக்கிறார்; பிள்ளையார்பட்டி குடைவரைக்கோயில் மகேந்திரருக்கு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது என நிறுவுகிறார்.

வளர்ச்சி[தொகு]

கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் இக்கோயில் நகரத்தார் ஆளுகைக்கு வந்த வரலாற்றையும் இரண்டாம், மூன்றாம், நான்காம் திருப்பணிகளின் வரலாற்றையும் இப்பகுதியில் நூலாசிரியர் விளக்குகிறார்.

விழாகள்[தொகு]

பிள்ளையார்பட்டி கோயிலில் கொண்டாடப்படும் சதுர்த்தி விழா, மார்கழித் திருவாதிரை, வைகாசி மாத விழா ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம் இப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளது.

பிள்ளையார் பெருமை[தொகு]

பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் ஏழு பெருமைகள் இப்பகுதியில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.

பிற்சேர்க்கை[தொகு]

பிற்சேர்க்கை 1: கல்வெட்டுகள்[தொகு]

பிள்ளையார்பட்டி கோயிலில் உள்ள 11 கல்வெட்டுகளைப் பற்றிய தகவல்கள் தொகுத்து இப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளன.

பிற்சேர்க்கை 2: பெயர்களும் மூர்த்திகளும்[தொகு]

பிள்ளையார்பட்டிக்கு உள்ள 11 பெயர்களையும் அவ்வூர் பிள்ளையாருக்கு உள்ள 10 பெயர்களையும் குடைவரையுள் அமைந்துள்ள சிவன், உமை ஆகியோரின் பெயர்களையும் கற்றளியில் அமைந்துள்ள சிவன், உமை ஆகியோரின் பெயர்களையும் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவுருவங்களின் பட்டியலையும் நித்திய வழிபாட்டு நேரங்களின் பட்டியலையும் இப்பகுதி கொண்டிருக்கிறது.

பிற்சேர்க்கை 3: கும்பாபிஷேகத் தேதி விபரம்[தொகு]

இதுவரை இக்கோயிலில் நடைபெற்ற ஐந்து திருக்குடமுழுக்குகளைப் பற்றிய நாள்களின் பட்டியலும் இக்கோயிலைப் பற்றிய பாடல்களின் பட்டியலும் இப்பகுதியில் இடம்பெற்று உள்ளன.

பிற்சேர்க்கை 4: இசைகுடிமானம்[தொகு]

நகரத்தார்கள் சமூகத்தில் திருமணக் காலத்தில் இரு வீட்டாரும் சேர்ந்து எழுதிக்கொள்ளும் ஒரு உடன்பாடு, மார்கழித் திருவாதிரை யன்று படிக்கப்பெறும் ஊடல் நீங்கியமைக்கு உவந்தளித்த உரிமை ஆகியவற்றின் படிவங்கள் இப்பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளன.

பிற்சேர்க்கை 5: பிள்ளையார் தோத்திரப் பாடல்கள்[தொகு]

இப்பகுதியில் பின்வரும் பாடல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன:

  • திருமூலர் அருளியது
  • கபில்தேவர் அருளியவை
  • அதிராவடிகள் அருளியது
  • நம்பியாண்டார் நம்பி அருளியது
  • பெருந்தேவனார் அருளியது
  • ஔவையார் அருளியவை
  • விநாயகர் அகவல்
  • உமாபதிசிவம் அருளியது
  • வில்லிப்புத்தூரார் அருளியது
  • கோவிலூர் ஆண்டவர் அருளியது
  • இராமலிங்க சுவாமிகள் அருளியது
  • மகாகவி பாரதி அருளியவை
  • சொக்கலிங்க ஐயா அருளியவை
  • கோவிந்தசாமி ஐயர் அவர்கள்
  • கிருஷ்ணய்யர் அவர்கள்

பிற்சேர்க்கை 6: தேசிவிநாயகப் பிள்ளையார் ஒருபா ஒருபது[தொகு]

  • பிள்ளையார்பட்டியில் உள்ள தேசிவிநாயகர் மீது சா. கணேசன் இயற்றிய 10 வெண்பாகளும் அறுசீர் விருத்தம் ஒன்றும் இப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளது.
  • கி. வா. ஜெகந்நாதன் அவர்கள்
  • கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
  • வேழமுகம்
  • பிள்ளையார் சிந்தனை
  • திரு ராய.சொ. இயற்றிய விநாயக வணக்கம்
  • முப்பத்திருவகைப் பிள்ளையார்