பிரேந்திரநாத் சாஸ்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேந்திரநாத் சாஸ்மல்
காண்டாயில் அமைந்துள்ள சாஸ்மலின் மார்பளவு சிலை
தாய்மொழியில் பெயர்বীরেন্দ্রনাথ শাসমল (வங்காள மொழி)
பிறப்பு26 அக்டோபர் 1881
சந்திவெட்டி கண்டாய், மிட்னாபூர் மாவட்டம், இந்தியா
இறப்பு24 நவம்பர் 1934
கொல்கத்தா, இந்தியா
மற்ற பெயர்கள்பிரேன் சாஸ்மல்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

பிரேந்திரநாத் சாஸ்மல் (Birendranath Sasmal) (26 அக்டோபர் 1881 - 24 நவம்பர் 1934) ஒரு வழக்கறிஞரும், அரசியல் தலைவரும் ஆவார். மிட்னாபூரின் "முடிசூடா மன்னன்" என்றும் தேசத்தின் மீதான அன்பு மற்றும் பணி மற்றும் சுதேசி இயக்கத்தில் இவர் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக "தேசபிரான்" என்றும் அறியப்பட்டார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரேந்திரநாத் சாஸ்மல் பிரிக்கப்படாத மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோண்டாய் என்ற இடத்தில் மகிஷ்ய ஜமீந்தார் பிஸ்வம்பர் சாஸ்மல் மற்றும் தாயார் ஆனந்தமோயி தேவி ஆகியோருக்கு பிறந்தார். 1900 இல் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, கொல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் சுரேந்திரநாத் பானர்ஜியின் தாக்கத்தால் கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரிக்கு சேர்ந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மிடில் டெம்பிளில் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார்; இந்த நேரத்தில் அமெரிக்கா மற்றும் யப்பானுக்கும் சென்று திரும்பினார். பார் அட் லா ஆன பிறகு இந்தியா திரும்பினார்.[1][3]

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

அரசியல் காரணங்களுக்காக, மிட்னாபூர் மாவட்டத்தை பிரித்தானியப் பேரரசு இரண்டாகப் பிரிக்க முன்மொழிந்தது. அதற்கு எதிராக சாஸ்மல் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினார். அப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்து போராட்டங்களை நடத்தினார். போராட்டத்தின் காரணமாக பிரிவினைக்கான முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டது. 1904 இல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1913 இல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய பிரேந்திரநாத் மிட்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் சில ஆண்டுகள் பயிற்சி செய்தார். ஆனால் பின்னர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்தார். உயர் நீதிமன்றத்தில், சிட்டகாங் ஆயுதக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினார். ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் பிரித்தானிய இந்திய வருகையின் போது பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததற்காக பிரித்தானிய இராச்சியத்தால் ஒன்பது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஸ்ரோட்டர் டிரினா என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். அரசியலை சமூக நலனுடன் ஒத்ததாகக் கருதினார். மேலும், 1913, 1920, 1926 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் மிட்னாபூர் வெள்ளத்தின் போது நிவாரணப் பணியாளராக ஒரு முக்கிய பங்கை வகித்தார். [1][2][4][3]

ஒத்துழையாமை இயக்கம் (1920)[தொகு]

1920 கொல்கத்தா தேசிய காங்கிரசின் அமர்வில் சாஸ்மல் முக்கிய பங்கு வகித்தார். 1921 ஒத்துழையாமை இயக்கத்தின் தீர்மானத்தை ஆதரித்தார். அதற்குள் சித்தரஞ்சன் தாஸின் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். நாக்பூர் அமர்வில் இருந்து திரும்பியதும், தனது லாபகரமான தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். வங்காள மாகாண காங்கிரசின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் மிட்னாபூரில் நடந்த உள்ளூர் ஒன்றிய வாரியத்தின் எதிர்ப்பு போராட்டத்தையும் வெற்றிகரமாக வழிநடத்தினார்.[1][5]

வரி கொடா இயக்கம் (1920–1922 )[தொகு]

வங்காள கிராம சுயாட்சி சட்டம் 1919 இல் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி மாவட்டத்தில் 227 ஒன்றிய வாரியங்கள் உருவாக்கப்பட்டன. பிரேந்திரநாத் தனது மக்களுக்காக போராடி புறக்கணிப்பு இயக்கத்தில் மூழ்கினார். ஒன்றிய வாரியங்களை அகற்றாத வரை வெறும் காலில் நடப்பேன் என்று அறிவித்தார்.[6] 17 டிசம்பர் 1921 இல், 226 ஒன்றிய வாரியங்கள் ஒழிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு கடைசியாக நீக்கப்பட்டது. ஒரு கூட்டத்தில், உரத்த ஆரவாரத்துடன், மக்கள் தங்கள் தலைவரின் காலில் காலணிகளை அணிவித்தனர்.[2][5]

லாபன் சத்தியாகிரகம் (1930)[தொகு]

பிரேந்திரநாத் அவர்களும் இயக்கத்தில் ஈடுபட்டார். இவரைப் பின்பற்றுபவர்கள் மக்களை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக பங்கேற்றனர். சத்தியாக்கிரகிகள் நார்காட் மற்றும் பிச்சாபோனிக்கு அமைதியான வழிகளில் உப்பு சட்டத்தை உடைக்க வந்தனர். சத்தியாகிரகம் அப்பகுதியில் வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. [2]

கீழ்ப்படியாமை இயக்கம், கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல், மத்திய சட்டமன்றம் (1930-1934)[தொகு]

1930 ஆம் ஆண்டின் உப்புச் சத்தியாகிரகத்தின் போது, கைது செய்யப்பட்டார். விடுதலையானதும், ஆயுதக் களஞ்சியச் சோதனை வழக்கில் (1930) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் வாதாட சிட்டகாங்கிற்கு விரைந்தார். மீண்டும் 1932 இல் டக்ளஸ் துப்பாக்கிச் சூடு வழக்கில் ஒரு பாதுகாப்புத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். ராம்சே மெக்டொனால்டின் 'கம்யூனல் விருதை' எதிர்த்து காங்கிரசு தேசியவாதக் கட்சியின் அனுசரணையில் நடைபெற்ற கொல்கத்தா மாநாட்டில் இணைந்தார். 1933 இல், பிரேந்திரநாத் கொல்கத்தா மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய சட்டமன்றத் தேர்தலில் வர்த்தமான் பிரிவின் இரு மாவட்டத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது இறுதி மூச்சை விட்டுவிட்டார்.

இறப்பு[தொகு]

பிரேந்திரநாத் சாஸ்மல் 1934 நவம்பர் 24 அன்று தனது 53வது வயதில் மாரடைப்பால் இறந்தார்.

ஆளுமை[தொகு]

பிரேந்திரநாத் சாஸ்மல் மகாத்மா காந்தியின் தீவிர சீடராக அகிம்சை இயக்கத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். சிந்தனை - வன்முறை வன்முறையைத் தூண்டுகிறது. மக்களுக்காக இல்லாவிட்டால் நான் யாருக்காக வாழ்வேன் என்று சாஸ்மல் கூறுவது வழக்கம். அரசியலில் இவருக்கு சில கசப்பான அனுபவம் இருந்தது. ஆனால் மக்கள்  இவரை நேசித்தனர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு சாலை (தேசபிரான் சாஸ்மல் சாலை) இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. காந்தி உட்பிரிவில் தேசபிரான் சமூக மேம்பாட்டுத் தொகுதிக்கு சாஸ்மாலின் பெயரிடப்பட்டது. இவரது பெயரைக் கொண்ட பல பள்ளிகள், சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தெருக்கள் இன்றளவும் உள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Sasmal, Birendranath - Banglapedia". en.banglapedia.org. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Bhowmik, Arindam. "বীরেন্দ্রনাথ শাসমল | बिरेन्द्रनाथ शासमल | Birendranath Sasmal". www.midnapore.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  3. 3.0 3.1 "মেদিনীপুরের লৌহ মানব বীরেন্দ্রনাথ শাসমলের অবদান আজও ভেলেননি গ্রামবাসীরা". News18 Bengali (in Bengali). 2021-08-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  4. সংবাদদাতা, নিজস্ব. "স্মৃতিচারণায় উজ্জ্বল দেশপ্রাণের দেশপ্রেম". www.anandabazar.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
  5. 5.0 5.1 Ahir, Rajiv (2018) (in en). A Brief History of Modern India. Spectrum Books (P) Limited. பக். 807. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7930-688-8. https://books.google.com/books?id=HBziwQEACAAJ&q=a+brief+history+of+modern+india. 
  6. "Legacy of Midnapore - Birendranath Sasmal". http://www.midnapore.in/bi.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேந்திரநாத்_சாஸ்மல்&oldid=3724015" இலிருந்து மீள்விக்கப்பட்டது