பிரான்சிஸ் ஜெனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ.பிரான்சிஸ் ஜெனம் (1941-2017) ஈழத்து மேடை நாடக, திரைப்பட நடிகர், நாடக இயக்குநர்

ஈழத்தின் புகழ்பூத்த நாடக‍க் கலைஞர்களுள் முதன்மையானவர். பல்லாயிரம் பார்வையாளர் கண்ணூறுபட்ட கலைஞன். நாடக அரங்க‍க் கல்லூரியின் களம் பயில் முன்னவராய், பயிற்சிப் பட்டறையின் உடல், குரல் விந்தைகளின் வெளிப்பாட்டு வித்தகர். பல பத்து நாடக‍க் கலை வல்லுனர்களின் கடாட்சத்துக்காட்பட்ட புடம் போட்ட நடிகன்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கத்தோலிக்க சமயக் குடும்பத்தில் சில்லாலையில் அல்பிறெட், முத்தம்மா தம்பதிகளுக்கு முதல் மகனாக 1941.03.08ம் திகதி பிறந்தார். சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். ஜெனத்தின் தாயார் முத்தம்மாவுடன் தந்தையார் அல்பிறென் புகையிலை வியாபாரத்துக்காக தென்னிலங்கையில் 'பியகம' என்ற சிங்களக் கிராமத்தில் குடிபெயர்ந்தனர். அங்கே சிங்களமொழிமூலம் மூன்றுவகுப்புகள் கல்விபயின்றார். தாயார் முத்த்மா ஜெனத்தின் பதின்ம வயதில் மரிக்கவும் யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தில் வந்து தந்தையார் அல்பிறட் பிள்ளைகளுடன் குடியேறினார். பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் (சென்.பற்றிக்ஸ்) ஜெனம் இணைந்து கொண்டார். அங்கு அவர் டபிள் புறொமோசனில் வகுப்பேற்றப்பட்டுத் தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் ஜெனம் யாழ். கடற்கரை வீதியில் அமைந்துள்ள கூட்டுறவுத் துறையில் கல்விபயின்றார். தொடர்ந்து யாழ் நீதிமன்றுக்கு அருகில் 1ம் குறுக்குத் தெருவில் அமைந்த லங்கா சமசமாஜக் கட்சியின் வடபிரதேச செயலாளராகவும் யாழ் மாநகர சபை உறுப்பினராகவும் ஆரம்ப வகுப்புகளுக்கு குடியியல் புத்தகங்களை எழுதியவருமான அரியாலை அருளம்பலம் விஸ்வநாதன் என்பவரின் அலுவலகத்தில் வகுப்புத் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்புகளை நிர்வகிக்கும் எழுத்தராக 1983வரை 25 வருடங்களாக ஊழியம் புரிந்தார். தென்னிலங்கை இடதுசாரித் தலைவர்கள் தொடர்பும் காங்கேசன்துறை துறைமுகத்திலும், குருநகர் துலையிலும் பணிபுரிந்த தொழிலாளர்களின் உறவும் ஊடாட்டமும் ஜெனத்துக்கிருந்த‍து. 1961ல் நாவலர் வீதி, அரியாலையில் வசித்த 'ராணி' என அழைக்கப்படும் மேரி வயலற்ராணி என்பவரை மணம்புரிந்தார். ஆண் மகனையும் ஒரு பெண்பிள்ளையையும் பெற்றெடுத்தனர். மகளின் மூன்று பிள்ளைகளான பேரப்பிள்ளைகளுடனும் மனைவி, மருமகன் ஜேசுதாசன் ஆகியோருடன் வத்தளையில் வாழ்ந்துவந்தார் ஜெனம்.

மேடை நாடக நடிகராய்[தொகு]

1951ல் பத்தாவது வயதில் பாடசாலையில் 'ஜூடித்' நாடகத்தில் விவிலியப் பெண் பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து ஜெனம் நடித்த நாடக களங்கள்: சில்லாலை றோ.க.பாடசாலை, புனித பத்திரிராசியர் கல்லூரி, கொய்யாத் தோட்டத்தில் இயங்கிய 'பி. எஸ் கலாமன்றம்', ஓரியன்ஸ் நுண் கலை- விளையாட்டுக் கழகம், திருநெல்வேலி 'அரங்கத்தார்' நாடக‍க் குழு, வண்ணை கலைவாணர் நாடக மன்றம், மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம், அரியாலை நாடக மன்றம், குருநகர் றெக்கிளமேசன் சனசமூக நிலையம், சுண்டுக்குளி நவரச நாட்டுக் கூத்து கலாமன்றம், நாடக அரங்க‍க் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை, தமிழ் நாட்டில் நாராய் நாராய் நாடகப் பயணம், திருமறைக் கலாமன்றமும் ஐரோப்பிய நாடுகளும். ஜெனம் என்ற நாடக நடிகர் மக்கள் கலைஞராக மலர்ச்சி பெற்றாரெனில், தன் சுய அடையாளப் பிரமைக்குள் மூளாது தான் வாழும் சமூகத்திலுள்ள இனத்தவர், மத‍த்தவர், பால்நிலையினர், சாதியினர், பிரதேசத்தவர் என்ற குறுகிய எல்லைகள் கடந்து நின்ற கலைஞர் என்பதால் அவர் மக்கள் கலைஞர் ஆக முதிர்ச்சி பெற்றார். அரங்க வெளியில் நடிப்பின் மோடியே பெருமளவில் புத்தாக்கம் செய்து விடுவதன் மூலம் நடிப்பின் இலக்கணத்தைக் கண்டு கொண்டார். 'எந்தையும் தாயும்' நாடகத்தில் சங்கரப்பிள்ளையாக உருமாறிய நடித்தார். நடிப்பது சுலபம். நடிக்காமல் வெறுமையாகப் பார்ப்பதும், முகச் சுருக்கங்களின்றியே படர விடும் நடியாத நடிப்பு மிக‍க் கடினம். அதனையே ஜெனம் செய்து காட்டினார். இதுவே ஜெனத்தின் நடிப்புத் திறன். 'பொறுத்தது போதும்' நாடகம் ஜெனத்தின் 'சம்மாட்டியார்' பாத்திரம். இந்தப் பாத்திரத்தில் நடித்தமைக்கு அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. எள்ளல், துள்ளல், ஆடல் கண்வீச்சுடன் வக்கிரத்தை வெளிப்படுத்துமாறு ஜெனம் காட்சிப்புலத்தை நம்பகத்தன்மை குலையாமல் வெளிப்படுத்தியமை பார்வையாளர் மத்தியில் 'சம்மட்டி' என்ற பாத்திரத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தின. 'கந்தன்கருணை' நாடகத்தில் நாரதராக காத்தான் கூத்திலமைந்த நவீனமோடியும், 'சங்காரத்தில்' வடமோடி கூத்துமோடியில் ஆடிப்பாடுவதும், 'கோடை'யில் பாநாடக யதார்த்த மோடியிலும், 'வெறியாட்டில்' பாநாடக பாவின மோடியிலும், 'பொறுத்த‍து போதும்' நாடகத்தில் தென்மோடி நாட்டாரிசையிலமைந்த நவீன மோடியிலும் நடித்துப் பாராட்டுப் பெற்ற ஜெனம் என்றும் நடிப்பின் இலக்கணமாகத் திகழ்வார். தான் வரித்துக்கொண்ட கதாபாத்திரத்தின் உளவியல், சமூகவியல், நடைத்தைக் கோலம் போன்ற பிற பல்துறை அவதானிப்பில் தன்னைப் புடம்போட்டு நடிக்கும் கதாமாந்தரினை உருவாக்கி புதிதாக‍க் கட்டியெழுப்புவதனூடாக அப்பாத்திரத்தின் வகிபாகத்தை நன்கு வெளிப்படுத்தியவர் ஜெனம்.

சினிமா நடிகராய்[தொகு]

1968 ஆம் ஆண்டில் ஏ.இரகுநாதன் தயாரிப்பில் அருமை நாயகம் இயக்கத்தில் ஈழத்தின் நான்காவது திரைப்படமாக வெளிவந்த 'நிர்மலா' திரைப்படத்தில் நடித்தார்.1978இல் வெளிவந்த 'தெய்வம் தந்த வீடு' திரைப்படத்தில் நடித்தார். மேலும் 1978இல் செங்கையாளியானின் 'வாடைக்காற்று' திரைப்படத்தில் பிலேமினாவின் தந்தை பாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து வீ.எம். குகராஜாவின் கதைவசனம் நெறியாள்கையில் 'கதை இதுதான்' வீடியோ திரைப்படத்தில் நடித்தார்.

நடித்த நாடகங்கள் பட்டியல்[தொகு]

  • சமய நாடகங்கள்
  1. யூடித் என்ற விவியப் பெண் பாத்திரம் - சில்லாலை றோ.க. பாடசாலையின் நாடகம் 1951
  2. திருப்பாடுகளின் காட்சி- அரிமைத்தியூர் சூசை என்ற பாத்திரம், அருட்தந்தை ஆம்ஸ்ரோங் நெறியாளர்- சென். பற்றிக் கல்லூரி
  3. திருப்பாடுகளின் காட்சி- கைப்பாஸ் பாத்திரம்- இயக்குநர் நீ. மரிய சேவியர் அடிகள் யாழ் தூயமரியன்னை தேவாலய வெளியில்-1966
  4. கல்வாரியில் கடவுள்- பரிசேயன் பாத்திரம்- மரியசேவியர்- உரும்பிராய் திருமறைக் கலாமன்றம்-1967
  5. காட்டிக் கொடுத்தவன்- யூதாசின் மனச் சாட்சி
  6. திருப்பாடுகளின் காட்சி- பரிசேயர்களின் தலைவன்
  7. களங்கம்- எழுத்துரு- மரியசேவியர் அடிகள், 1968 நடுவர் பாத்திரம்
  8. அன்பில் மலர்ந்த காவியம் - சென்ற் சபைத் தலைவர் பாத்திரம் (திருப்பாடுகளின் காட்சி) யாழ் கோட்டை மதில்களே மேடை - 1971
  9. சாவை வென்ற சத்தியன்- இந்தியத் தமிழகத்தில்- திருச்சி தேவர் மண்டபத்தில் -1972
  10. அளவுகோல் - இராயப்பர் பாத்திரம்
  11. கரம்- பரிசேயன் பாத்திரம்
  12. வா மகனே வா
  13. ஒரு துளி
  14. அருளும் இருளும்
  15. பலிக்களம்
  16. தெய்வப்பாவை - திருதாவுக்கரசு நாயனார் பாத்திரம்- எழுத்துரு சொக்கன்- நெறியாள்கை எஸ்.ரி. அரசு- அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம் 1978
  17. நீ ஒரு பாறை- மந்திரவாதி அண்ணாவி பாலதாஸ் எழுத்துரு- நீ நீ. மரிய சேவியர் அடிகள் மேற்பார்வை- தென்மோடிக் கூத்து- 1988
  18. கல்வாரிப் பரணி- பிலாத்து Centre for Performaing Arts 1988பண்பாட்டு தள நிறுவனமாக மீள‍மைப்பு செய்யப்பட்டது
  • சமூக நாடகங்கள்
  1. அனலையி்ன் நெஞ்சம்- பெண்பாத்திரம் பி.எஸ். கலாமன்றம் கொய்யாத் தோட்டம்
  2. அன்புத்தெய்வம் - பெண்பாத்திரம் பி. எஸ். கலாமன்றம், கொய்யாத் தோட்டம்
  3. மங்கள வாசா- பெண் பாத்திரம் பி. எஸ். கலாமன்றம், கொய்யாத் தோட்டம்
  4. வழி தெரிந்த‍து- ஓரியன்ஸ் நுண்கலை விளையாட்டுக் கழகம்
  5. அன்னத்திற்கு அரோகரா - பெண் பாத்திரம் - திருநெல்வேலி 'அரங்கத்தார்' நாடக‍க் குழு
  6. ஆரமுது அசடா - மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம்
  7. மல்லியம் மங்களம் - மானிப்பாய் மறுமலர்ச்சி மன்றம்
  8. வழி தெரிந்த‍து- ஜி.பி. பேர்மினஸ் குருநகர் றெக்கிளமேசன் சனசமூக நிலையம் 1966
  9. எங்கே நிம்மதி - பெண் பாத்திரம் - ஜி.பி. பேர்மினஸ்- குருநகர் றெக்கினமேசன் சனசமூக நிலையம் 1966
  • இலக்கிய வரலாற்று நாடகங்கள்
  1. திப்பு சுல்தான் - பேகம் சாஹீயா என்ற பெண் பாத்திரம்- வண்ணை கலைவாணர் நாடக மன்றம் - எஸ்.ரி. அரசு இயக்குநர்
  2. தமிழன் கதை - பெண்பாத்திரம்- வண்ணை கலைவாணர் நாடக மன்றம் - எஸ்.ரி. அரசு இயக்குநர்
  3. தேரோட்டி மகன் - குந்திதேவி பாத்திரம்- கலையரசு சொர்ணலிங்கம்
  4. கர்ண‍ன்- குந்திதேவி- அரியாலை நாடக மன்றம்
  5. அசோகனின் காதலி
  6. வையத்துள் தெய்வம்
  7. அசோகனின் காதலி
  • கூத்துகள்
  1. நீ ஒரு பாறை - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  2. கருங்குயில் - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  3. குன்றத்துக் கொலை - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  4. மனம்போல் மாங்கல்யம் - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  5. எஸ்தாக்கியார் - பெண்வேடம் - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  6. விஜய மனோகரன் - அண்ணாவியார், நடிகர் பூந்தான் யோசப்பு
  7. சங்கிலியன் - சுண்டிக்குழி நவரச நாட்டுக்கூத்து கலாமன்றம்
  8. பூத‍த்தம்பி - அட்மிரல்
  • நவீன நாடகங்கள்
  1. பொறுத்த‍து போதும் - 1978.08.26 நாடக அரங்க கல்லூரி - அ.தாசீசியஸ் நெறியாள்கை, எழுத்துரு
  2. கோடை - 1979.03.02 - மஹாகவி- நெறியாள்கை வீ.எம்.குகராஜா
  3. கந்தன் கருணை - எழுத்துரு ரகுநாதன், அம்பலத்தாடிகள்- தாசீசியஸ் நெறியாள்கை -1979.03.05
  4. கூடி விளையாடு பாப்பா - குழந்தை.ம. சண்முகலிங்கம் எழுத்துரு- தாசீசியஸ் நெறியாள்கை -1979.10.12
  5. அவள் ஏன் கலங்குகிறாள் - வீ. எம். குகராஜா எழுத்துரு - குழந்தை ம. சண்முகலிங்கம் நெறியாள்கை - 1982.08.02
  6. வாடகைக்கு அறை - ஏ.ரகுநாதன்
  7. வேதாளம் சொன்ன கதை - கவிஞர் அம்பி
  8. பாவிகள்
  9. ஊமை நெஞ்சம்
  10. சங்காரம் - சி.மௌனகுரு எழுத்துரு நெறியாள்கை - 1980.11.15
  11. புதியதொரு வீடு - மஹாகவி எழுத்துரு- எல். எம். றேமன் நெறியாள்கை 1981.03.21
  12. அபசுரம் - நா.சுந்தரலிங்கம் எழுத்துரு - சி.மௌனகுரு நெறியாள்கை 1981.07.25
  13. குருசேத்திர உபதேசம் - சி.மௌனகுரு நெறியாள்கை- ஞானியின் குசேலரைத் தழுவியது. 1982.03.26
  14. சக்தி பிறக்குது- குடிகாரக் கணவன் பாத்திரம் - சி.மௌனகுரு எழுத்துரு நெறியாள்கை 1986.03.08
  15. வெறியாட்டு - பிரமுகர் பாத்திரம் - இ. முருகையன் எழுத்துரு- வீ.எம்.குகராஜா நெறியாள்கை- யாழ் பட்டப்படிப்புகள் கல்லூரி 1986.05.07
  16. உயிர்த்த மனிதர் கூத்து- க.சிதம்பரநாதன் நெறியாள்கை
  17. எந்தையும் தாயும்- குழந்தை.ம.சண்முகலிங்கம் எழுத்துரு- க.சிவயோகன் நெறியாள்கை 1992
  18. இருதுயரங்கள்- இ.முருகையன் எழுத்துரு (தழுவல்) - நெறியாள்கை பிரான்சிஸ் ஜெனம்- வைத்தியர் பாத்திரம் 1996
  19. கெக்குளே இராசன் வழக்கு தீர்த்த கதை - குயவன் திருடன்- சி.சிவசேகரம் எழுத்துரு
  20. வலியவனும் சிறியவனும் - கோலித்தாத்தா பாத்திரம் - 1999ல் 'யாதுமூரே' ஐரோப்பிய கலைப் பயணத்தில் இவரது தலைமையில் பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து
  • சினிமா, வீடியோ நடிகராக
  1. வாடைக்காற்று - செங்கையாழியான்
  2. நிர்மலா - ஏ.ரகுநாதன்
  3. தெய்வம் தந்த வீடு - ஏ.ரகுநாதன்
  4. கதை இதுதான் - வீடியோ திரைப்படம்- வீ.எம். குகராஜா, கே.எம்.வாசகர்
  • நெறியாளராக
  1. புனித யோன் பொஸ்கோ
  2. புனித பெனடிக்ற் கல்லூரி
  3. சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
  4. திருமறைக் கலாமன்றம்
  5. யாழ்ப்பாணம் மறைக் கல்வி நடுநிலையம்
  6. வேம்படி மகளிர் கல்லூரி
  7. கொழும்பு பல்கலைக்கழக வணிக பீட மாணவர்கள்- 'கிட்கிந்தை அல்லது அயலார் வருகை' சி.சிவசேகரம்
  8. கொழும்பு திருமறைக் கலாமன்றம்
  • நாடகர் ச. உருத்திரேஸ்வரனின் 'நானும் ஜெனமும்- நனவிடைத் தோய்தல்' என்ற கட்டுரை
  • நாடகர் யோ. யோன்சன் ராஜ்குமாரின் 'பிரான்சிஸ் ஜெனம்- அரங்க வரலாற்றில் ஒரு மைல்கல்- ஜீவந்தி 2017 வைகாசி இதழ்
  • இழத்த‍ற்கரிய இரண்டு அரங்க ஆளுமைகளின் நினைவுகளில் நனைந்து... அ.பிரான்சிஸ் ஜெனம்- கலைமுகம் இதழ் 62 ஏப்பிரல்- ஜனவரி2017
  • கனடா பத்திரிகை 'தாய்வீடு' கட்டுரை ஆகியவற்றில் பெறப்பட்டவற்றின் அட்டவணைக்குறிப்புகள்

மறைவு[தொகு]

நடிப்பால் கவர்ந்தவர் 2017 இல் மறைந்தார்

உசாத்துணை[தொகு]

  • 'மக்கள் கலைஞர் நாடகர் அ. பிரான்சிஸ் ஜெனம்' - சோ. தேவராஜா - 'தாயகம்' 93வது இதழ் ஏப்ரல் 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_ஜெனம்&oldid=3128325" இலிருந்து மீள்விக்கப்பட்டது