பிரதோசம்
பிரதோசம் (Pradosha) என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.
பிரதோச விரதம்
[தொகு]பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.
இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.
பிரதோஷக் காலம்
[தொகு]மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.
பிரதோச வகைகள்
[தொகு]பிரதோசத்தில் 20 வகைகள் உள்ளன. அவையாவன:
- தினசரி பிரதோஷம்
- பட்சப் பிரதோஷம்
- மாசப் பிரதோஷம்
- நட்சத்திரப் பிரதோஷம்
- பூரண பிரதோஷம்
- திவ்யப் பிரதோஷம்
- தீபப் பிரதோஷம்
- அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
- மகா பிரதோஷம்
- உத்தம மகா பிரதோஷம்
- ஏகாட்சர பிரதோஷம்
- அர்த்தநாரி பிரதோஷம்
- திரிகரண பிரதோஷம்
- பிரம்மப் பிரதோஷம்
- அட்சரப் பிரதோஷம்
- கந்தப் பிரதோஷம்
- சட்ஜ பிரபா பிரதோஷம்
- அஷ்ட திக் பிரதோஷம்
- நவக்கிரகப் பிரதோஷம்
- துத்தப் பிரதோஷம்
திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]
சோம சூக்தப் பிரதட்சணம்
[தொகு]சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.[2]
பிரதோசதலங்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "www.aanmegam.co.in - பிரதோசம் - Pradosham".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2015-03-05.