பிட்டங்கொற்றன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டங்கொற்றன் சங்ககால அரசவள்ளல்களில் ஒருவன்.[1]

பிட்டன் மகன் கொற்றனைக் குறிப்பது இத்தொடர். புகழூர்க் கல்வெட்டு பிட்டனுக்கும், கொற்றனுக்கும் தனித்தனிப் படுக்கைகள் (அதிட்டானம்) இருந்த்தைக் குறிப்பிடுகின்றன. இந்தக் கல்வெட்டுகளால் இவன் சமணன் எனத் தெரியவருகிறது.

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் [2] காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் [3] உறையூர் மருத்துவன் தாமோதரனார் [4] வடமவண்ணக்கன் தாமோதரனார் [5] ஆகிய புலவர்கள் அவனைப் பாடியுள்ளனர்.

  • இவன் குதிரைமலை நாட்டு அரசன்.[6] இவனது குடிப்பூ வேங்கை.[7] இவனும் இவன் நாட்டு மக்களும் மான் கறியோடு ஆவின் பாலில் தினைச்சோறு சமைத்து வழை மரத்தின் அகன்ற இலையில் பகுத்துத் தருவார்கள்.[2]
  • இவன் போருக்குச் சளைக்காதவன். இளம்பல் கோசர் பழகும்போது எய்யும் அம்புகளைத் தாங்கும் முருக்க மரம் போல இவன் பகைவரின் அம்புகளைத் தாங்கியவன்.[8]
  • இவன் கொல்லன் உலையில் இரும்பு அடிக்கத் தாங்கும் பணைக்கல் போன்றவன். இவன் பாணர்க்குத் தேறலும் விறலியர்க்கு யானைத் தந்தத்தாலான அணிகலன்களும் பரிசாக நல்கினான்.[9]
  • இவன் ‘திருந்துவேல் கொற்றன்’ எனப் பாராட்டப்பட்டவன். இரவலர் திரும்பத் திரும்பச் சென்றாலும் தருபவன்.[10]
  • இவன் தன் தந்தை ‘வயமான் பிட்டனின் வேலைத் தாங்கியவனாய், அவனது இறைவன் [11] கோதையையே தனக்குப் பேரரசனாகவும் கொண்டவன்.[5]

காண்க

சான்றுகள்

  1. புறநானூறு 168 முதல் 172 வரை உள்ள 5 பாடல்கள் இவனைப் பாடியவை.
  2. 2.0 2.1 புறம் 168
  3. புறம் 169
  4. புறம் 170, 171
  5. 5.0 5.1 புறம் 172
  6. ஊராக் குதிரைக் கிழவன் – புறம் 168
  7. நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி வில்லோர் பெரும - புறம் 168
  8. புறம் 169.
  9. புறம் 170
  10. புறம் 171
  11. அரசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டங்கொற்றன்&oldid=3851730" இலிருந்து மீள்விக்கப்பட்டது