பாஸ்கர் இராமச்சந்திர பகவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்கர் இராமச்சந்திர பகவத்
பிறப்பு31-மே-1910
இறப்பு27-அக்டோபர்-2001
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுகுழந்தைகள் இலக்கியம்
வாழ்க்கைத்
துணை
லீலாவதி பாஸ்கர் பகவத் (மனைவி)

பாஸ்கர் இராமச்சந்திர பகவத் (Bhaskar Ramachandra Bhagwat) (மராத்தி: भास्कर रामचंद्र भागवत ) என்றழைக்கப்படும் பா. ரா. பகவத் மராத்திய குழந்தைகள் இலக்கிய புத்தகங்களின் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பால்மித்ரா பத்திரிகையின் நிறுவனரான பா. ரா. பகவத், தான் உருவாக்கிய, ஃபாஸ்டர் ஃபெனே என்ற கற்பனை கதாபாத்திரத்தாலும், அக்கதாபாத்திரத்தின் சாகசங்களைச் சுற்றி எழுதப்பட்ட புத்தகத் தொடர்களாலும் மிகவும் பிரபலமானவர்.[1]

வாழ்க்கை மற்றும் வேலைகள்[தொகு]

1910 ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த பி. ஆர். என்றழைக்கப்படும் பா. ரா. பகவத், நாசிக்கு மற்றும் துலே ஆகிய இடங்களில் கல்வி பயின்றுள்ளார். 1941 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்ட செய்தி ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, இவர் மும்பையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய விடுதலைக்குப் பிறகு இவர் சூல்சு வெர்ன் மற்றும் எச். ஜி. வெல்சு ஆகியோரின் அறிவியல் புனைகதைகளை மராத்தியில் மொழிபெயர்த்தார். 1950 முதல் 1957 வரை அவர் குழந்தைகளுக்கான மராத்தி இதழை பால்மித்ரா என்ற பெயரில் வெளியிட்டு வந்தார். இவரின், ஃபாஸ்டர் ஃபேனே என்ற கற்பனை கதாபாத்திரம் மராத்திய குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. ஆதலால், இந்தத் தொடர் பின்னர் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்பட்டது. சுமார் 200 புத்தகங்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எழுதியுள்ள இவர் 2001 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். மிகச் சிறந்த மராத்திய குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பா. ரா. பகவத் பல இலக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]