பால் உணர்த்தும் ஈறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 எழுத்துகள் என வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது. [1] உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறினையில் ஒன்றன்பால், பலவின்பால் என்பன தமிழ் மொழியில் உள்ள ஐந்து பால்கள்.

பெயரும் வினையுமாக வாக்கியம் அமையும்போது பெயரில் தோன்றும் பாலறி கிளவியும், வினையில் தோன்றும் பாலறி கிளவியும் மயக்கமின்றி (முரண்படாமல்)வருதல் நெறி. [2]

  • நல்லவன் வந்தான் (ஆண்பால்)[3]
  • நல்லவள் வந்தாள் (பெண்பால்)[4]
  • நல்லவர் வந்தார் (பலர்பால்), வரு (எதிர்காலம்), ஆர்த்தார் கொண்மார் வந்தார். (முற்றெச்சம்)[5]
  • நல்லது வந்தது (ஒன்றன்பால்) ஆடு ஓடிற்று, தவளை குண்டுகட்டு (குண்டுக்கண் உடையது)[6]
  • நல்லவை வந்தன() (பலவின்பால்), தீயவை வாரா(), அவை உண்கு (எதிர்காலம்)[7]

நன்னூல் இவற்றை விகுதி என்று பதத்தின் பகுதியாகக் காட்டுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் கிளவியாக்கம் 10
  2. வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
    பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
    மயங்கல் கூடா தம் மரபினவே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 11)
  3. னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 5
  4. ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 6
  5. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
    மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
    நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 7)
  6. ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
    குன்றியலுகரத்து இறுதி ஆகும். (தொல்காப்பியம் கிளவியாக்கம் 8)
  7. அ ஆ வ என வரூஉம் இறுதி
    அப் பால் மூன்றே பல அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 9)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_உணர்த்தும்_ஈறுகள்&oldid=3193677" இலிருந்து மீள்விக்கப்பட்டது