உள்ளடக்கத்துக்குச் செல்

பாரா இமாம்பாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரா இமாம்பாரா
2012-இல் இமாம்பாரா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலக்னோ, உத்தரப் பிரதேசம்
புவியியல் ஆள்கூறுகள்26°52′09″N 80°54′46″E / 26.86917°N 80.91278°E / 26.86917; 80.91278
சமயம்சியா இசுலாம்
நிலைஇமாம்பாரா மற்றும் மசூதி
செயற்பாட்டு நிலைசெயலில் உள்ளது

பாரா இமாம்பாரா (Bara Imambara) (உருது: بڑا امامباڑہ) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இலக்னோவில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க இமாம்பரா மற்றும் மசூதி வளாகமாகும்.[a]இது 1784 ஆம் ஆண்டில் அவத் நவாப் ஆசஃப்-உத்-தௌலாவால் கட்டப்பட்டது. நிஜாமத் இமாம்பாரா அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய இமாம்பாராவாகும். [1]

இது இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம் ஆகும்.[2]

வரலாறு

[தொகு]

பாரா இமாம்பாராவின் கட்டுமானம், பேரழிவுகரமான பஞ்சம் நிலவிய 1780 ஆம் ஆண்டில் தொடங்கியது. பஞ்சம் நீடித்திருந்த கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்கு அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே, இந்த பிரம்மாண்டமான திட்டத்தைத் தொடங்கியதில் ஆசஃப்-உத்-தௌலாவின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. சாதாரண மக்கள் பகலில் கட்டிடத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே நேரத்தில் பிரபுக்களும் மற்ற உயரடுக்கினரும் இரவில் அன்றைய தினம் எழுப்பப்பட்ட எதையும் இடித்துத் தள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கெயின்சியன் போன்ற தலையீட்டிற்கு முந்தைய ஒரு திட்டமாகும். இமாம்பாராவின் கட்டுமானம் 1784-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இமாம்பாராவைக் கட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட செலவு அரை மில்லியன் ரூபாய் முதல் ஒரு மில்லியன் ரூபாய் வரை இருந்தது. கட்டி முடிக்கப்பட்ட பின்னரும், நவாப் அதன் அலங்காரத்திற்காக ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவழித்து வந்தார்.[3]

கட்டிடக்கலை

[தொகு]
பாரா இமாம்பாராவின் சிக்கலான பாதைகள் கொண்ட பகுதியின் (புல்-புலையா) மேலிருந்து தெரியும் காட்சி

இக்கட்டிடத் தொகுதியில் பெரிய அஸ்பி மசூதி, புல்-புலையா (சிக்கலான பாதைகள் கொண்ட பகுதி) மற்றும் ஓடும் நீருடன் கூடிய செங்குத்தான கிணறான 'பௌலி' ஆகியவையும் அடங்கும். இதன் முதன்மை மண்டபத்திற்குச் செல்ல இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.[4]

இந்த வளாகத்தின் கட்டிடக்கலை, அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த முகலாயக் கட்டிடக்கலையின் (குறிப்பாக பாத்சாகி மசூதியின்) முதிர்ந்த பாணியைப் பிரதிபலிக்கிறது. ஐரோப்பியக் கூறுகளையோ அல்லது இரும்பையோ பயன்படுத்தாத இறுதிக்கட்டப் பெரும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

முக்கிய இமாம்பாரா, ஆசஃப்-உத்-தவ்லாவின் கல்லறையைக் கொண்ட ஒரு பெரிய வளைவுக்கூரை அமைப்பிலான மைய அறையைக் கொண்டுள்ளது. 50க்கு 16 மீட்டர் பரப்பளவும்(164 x 52அடி) 15 மீட்டருக்கும்(49அடி) அதிகமான உயரமும் கொண்ட இந்த அறையின் மேற்கூரையைத் தாங்குவதற்குத் தூண்களோ அல்லது விட்டங்களோ இல்லை.மேலும் இது உலகின் மிகப்பெரிய வளைவுக்கட்டிட அமைப்புகளில் ஒன்றாகும்.

வெவ்வேறு கூரை உயரங்களைக் கொண்ட எட்டு அறைகள் இதைச் சுற்றி அமைந்துள்ளன. இவற்றின் மேல்புறத்தில், 489 ஒரே மாதிரியான நுழைவாயில்கள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாதைகளைக் கொண்ட ஒரு முப்பரிமாண சிக்கல் வழி போன்ற அமைப்பை உருவாக்க இது வழிவகுத்துள்ளது. கட்டிடத்தின் இப்பகுதி, அல்லது சில சமயங்களில் முழு வளாகமுமே, புல்புலையா என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் இது மிகவும் பிரபலமான ஓர் இடமாகும். அநேகமாக இந்தியாவில் தற்போதுள்ள ஒரே சிக்கல் வழி அமைப்பும் இதுவாகத்தான் இருக்கக்கூடும். சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் எடையைத் தாங்கும் நோக்கத்திற்காகவே, தற்செயலாக இந்த அமைப்பு உருவானது.

ஆசஃப்-உத்-தௌலா இக்கட்டிடத் தொகுதியின் வெளியே 18 மீட்டர் (59 அடி) உயரமுள்ள ரூமி தர்வாசாவையும் அமைத்தார். ஆடம்பரமான அலங்காரங்களுடன் கூடிய இந்த நுழைவாயில், இமாம்பாராவின் மேற்கு நோக்கிய நுழைவுப்பகுதியாக அமைந்திருந்தது. இலக்னோவின் மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களில் ஒன்றாக 'பாரா இமாம்பாரா' திகழ்கிறது.[4]

இமாம்பாராவின் வடிவமைப்பு ஒரு போட்டி முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தில்லியைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் கிஃபாயத்துல்லா இதில் வெற்றி பெற்றார்[3] அவரும் இந்த இமாம்பாராவின் பிரதான மண்டபத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்டிடத்தை அமைத்தவரும் அதன் வடிவமைப்பாளரும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டிருப்பது இக்கட்டிடத்தின் மற்றொரு தனித்துவமான அம்சமாகும்.

படத்தொகுப்பு

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]
  • லக்னோவின் இமாம்பாராக்கள்
  • இந்தியாவில் சியா இசுலாம்
  • ரூமி தர்வாசா
  • சத்தர் மன்சில்
  • இலக்னோவில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்
  • இந்தியாவில் உள்ள மசூதிகளின் பட்டியல்

குறிப்புகள்

[தொகு]
  1. முகரம் துக்க அனுசரிப்புச் சடங்குகளுக்கான ஒரு சியா வழிபாட்டுத் தலம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Muharram mournings begin with 'Shahi Zari Ka Juloos'". The Times of India. 2023-07-21. https://timesofindia.indiatimes.com/city/lucknow/muharram-mournings-begin-with-shahi-zari-ka-juloos/articleshow/102001595.cms.
  2. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of Lucknow". Archaeological Survey of India. Retrieved 2016-11-19.
  3. 1 2 Khanna, Meenakshi (2007-07-01). Cultural History Of Medieval India. Berghahn Books. p. 82. ISBN 978-81-87358-30-5.
  4. 1 2 "Lucknow City". Laxys.com. Archived from the original on 16 October 2013. Retrieved 2014-02-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bara Imambara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரா_இமாம்பாரா&oldid=4574972" இலிருந்து மீள்விக்கப்பட்டது