பாமா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாமா (பிறப்பு - 1958), தலித் இலக்கியம் படைக்கும் குறிப்பிடத்தக்க முன்னணி எழுத்தாளர் ஆவார். இவர் 1992 இல் எழுதிய தன்வரலாற்றுக் கூறுகளுடன் எழுதிய கருக்கு என்னும் புதினம் புகழ் பெற்றது. அதில் இவர் தலித் மக்கள் மொழியைப் பயன்படுத்தி எழுதியது புதிய பாதை வகுத்தது என கருதப்படுகின்றது. கன்னியராகிப் பின்னர் அப்பொறுப்பிலிருந்து விலகி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவரது கருக்கு புதினத்தை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2000 ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதைப் பெற்றிருக்கிரார்.

தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப் பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரின் கருக்கு(1992), சங்கதி (1994) ஆகிய இரு நாவல்களும் மிகச் சிறந்த தலித்திய நாவல்களாகும். இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித் இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஒரு பெண்ணாக, கிறித்தவப் பெண் துறவியாகத் தென்மாவட்ட கிராமம் ஒன்றில் தான் பட்ட அனுபவங்களே இவர் எழுதிய தன்வரலாற்று நாவலான கருக்கு ஆகும். கருக்கு நாவலின் முன்னுரையிலேயே பாமா கூறுகிறார்:

வாழ்க்கையின் பல நிலைகளில் பனங்கருக்குப் போல என்னை அறுத்து ரணமாக்கிய நிகழ்வுகள், என்னை அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப் பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச் சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இப்புத்தகத்தின் கரு.

தலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் கருக்கு. தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் வழி பதிவு செய்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு.

ஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன.

சுயவரலாறு அல்லது தன்கதை கூறுதல் என்பது நாவலின் ஒரு வடிவம். தலித் மக்களின் வாழ்வை சொல்லவும் அல்லது ஒடுக்கப்படுபவர் தன் வாழ்வைச் சொல்லவும் ஏற்ற தொணி சுயவரலாற்று முறையே என கருதுகிறேன். சுயவரலாறு நிஜத்தை முகத்துக்கு நேர் நின்று பேசுகிறது. வாசகன் மனதில் இது உண்மை...உண்மை என சதா உள்ளுக்குள் முணகும் வண்ணம் செய்கிறது. அந்தக்குரலில் பாசாங்கு இருப்பதில்லை. 'இது புனைவாக இருக்கலாம்... இப்படியெல்லாம் நடக்காது' என்ற நம்பிக்கையின்மை வாசகனுக்கு எழுவதே இல்லை. அதன் மூலம் ஒரு சமூகம் தங்களுக்கு ஏற்படும் சுரண்டல்களை அதன் வெறுப்போடு முன்வைக்க முடிகிறது. அங்கு மொழியின் குழைவோ கவித்துவ அழகோ முக்கியமில்லை. தகக்கும் உண்மையின் உஷ்ணத்தின் நின்றே அப்படைப்பு தனக்கான இடத்தைப் பிடித்துவிடுகிறது.

இவரது நூல்கள்[தொகு]

புதினம்[தொகு]

  1. கருக்கு (1992)
  2. சங்கதி (1994)
  3. வன்மம் (2002)
  4. மனுசி

சிறுகதைத்தொகுப்பு[தொகு]

  1. கிசும்புக்காரன் (1996)
  2. கொண்டாட்டம்
  3. ஒரு தாத்தாவும் எருமையும்

விருதுகள்[தொகு]

  • வருகை தரு இலக்கிய ஆளுமை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் [1]

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமா_(எழுத்தாளர்)&oldid=3517805" இலிருந்து மீள்விக்கப்பட்டது