பாபநாசம் மின்னாக்க நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபநாசம் மின்னாக்க நிலையம் (Papanasam Hydroelectric Power Plant) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம் அணையில் சேகரிக்கப்படும் நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நீர் மின் நிலையம் ஆகும்.[1] இங்கு 21000 கிலோவாட்டு மின்சக்தியை உண்டாக்கக் கூடிய முதல் பகுதி 1944 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. 4000 கிலோவாட்டு மின்சக்தியை உண்டாக்கக் கூடிய வெப்ப மின்னாக்க நிலையமும் 7000 கிலோவாட்டு மின்சக்தியை உண்டாக்கக் கூடிய நீர் மின்னாக்கப் பகுதியும் 1951 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன.[2]

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8 மைல் தொலைவில் பாபநாசம் அருவிக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து 310 அடி உயரத்தில் பாபநாசம் மின்னாக்க நிலையம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பாபநாசம் மின்னாக்க நிலையத்தின் முதல் கட்டம் 1938 ஆம் ஆண்டு தொடங்கி 1944 ஆம் ஆண்டு முடிந்தது. இரண்டாவது கட்டம் 1947 ஆம் ஆண்டு தொடங்கி 1951 ஆம் ஆண்டு முடிந்தது. திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் பல இடங்களுக்கு பாபநாசம் மின்சாரம் கிடைக்கிறது. விவசாய நிலையங்கள் இதனால் பயனடைகின்றன. மதுரையில் இது பைக்காரா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அணை[தொகு]

176 அடி உயரமும், 814 அடி நீளமும் உள்ள அணை பெரியதொரு நீர்தேக்கமாக தாமிரபரணி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது. 1350 அடி நீளமும் 35 அடி உயரமும் கொண்ட திசைமாற்ற அணை ஒன்றை கட்டி ஆற்று நீரோட்டத்தின் திசை திருப்பப்படுகிறது. 8,6 அங்குல விட்டமுள்ள இரு குழாய்கள் மூலம் நீர்த்தேக்கத்திலிருந்து திட்டத்திற்குத் தேவையான நீர் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாபநாசத்தில் நீர்மின் உற்பத்தி துவங்கியது". Dinamalar. 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  2. "பாபநாச மின்னாக்க நிலையம்". பார்க்கப்பட்ட நாள் 7 May 2022.