பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்அல்லது பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆகிய இரண்டு பாண்டியருள் ஒருவனது மகன் இவன் எனலாம். ‘மாறன்வழுதி’ என்னும் பெயர் இதனை உணர்த்துகிறது.[1] இரண்டு புலவர்கள் இவனது வெற்றியைப் பாராட்டிப் பாடியுள்ளனர்.

  • ஐயூர் முடவனார் இவனைச் 'சினப்போர் வழுதி' எனக் குறிப்பிட்டு எப்படி என்று விளக்குகிறார். தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் பொது என்று சொல்வதைக்கூட இவன் போறுத்துக்கொள்ள மாட்டானாம். தனக்கே உரியது எனப் போருக்கு எழுவானாம்.[2] கடல் பொங்கினாலும், காட்டுத்தீ பரவினாலும், காற்று மிகுந்தாலும் எதிர்ப்போர் யாரும் இல்லாதது போல இவன் தாக்குதலுக்கு எதிர்நிற்பார் யாரும் இல்லையாம்.[3]
  • மருதன் இளநாகனார் இவனை ‘இயல்தேர் வழுதி’ எனக் குறிப்பிட்டு, வடபுல மன்னர்களை வென்றார் என்கிறார்.[4] இவன் வென்ற ஊர்களில் தூண்கடவுள்களுக்குப் பலியிடுவோர் யாரும் எல்லாததால் கடவுள்கள் தூணை விட்டுப் போய்விட்டனவாம். அந்த இடங்களில் முன்பு நரைதலை முதியவர்கள் தாயம் விளையாடிய குழிகளில் கானக்கோழி முட்டையிடுமாம்.[5][6]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இக்காலத்திலும் தந்தை பெயரை முன் வைத்துத்தானே நம் பெயரை எழுதுகிறோம்.
  2. தண்டமிழ் பொரு எனப் பொறான் போர் எதிர்ந்து கொண்டி வேண்டுவன்.
  3. புறம் 51
  4. வடபுல மன்னர் வாட அடல் குறித்து இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி
  5. கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரை மூதாளர் நாய் இடம் குழித்த வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக் கான வாரணம் ஈனும். புறம் 52
  6. வல்லு, வல்லநாய் – தொல்காப்பியம், புள்ளி மயங்கியல் 79