பரோக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை என்பது மிகவும் அலங்காரமான கட்டிடக்கலை ஆகும். இது 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இத்தாலியில் தோன்றி, படிப்படியாக ஐரோப்பா முழுவதும் பரவியது. இது முதலில் கத்தோலிக்க திருச்சபையால், குறிப்பாக இயேசு சபையினர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. சீர்திருத்த இயக்கம் மற்றும் சீர்திருத்தத் திருச்சபையை எதிர்கொள்ள, ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் புதிய கட்டிடக்கலையாக இது உருவாக்கப்பட்டது.[1] பரோக் கட்டிடக்கலை, இத்தாலி நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் உருவாகியது. இது மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையிலிருந்து, ரோமானிய மனிதநேயக் கூறுகளை எடுத்து, அவற்றைப் புதிய பாணியில், பயன்படுத்தியது. இது சார்பற்ற மெய்மைக் கோட்பாட்டுவாதிகளினதும், அது சார்பான அரசினதும் வெற்றியை வெளிப்படுத்தும் விதத்தில், வெளிப்பட்டது எனலாம். நிறம், ஒளியும் நிழலும், சிற்பக்கலைக்குரிய பெறுமானம் மற்றும் செறிவு என்பன போன்ற விடயங்களில் எழுந்த புதிய அக்கறைகள் பரோக் கட்டிடக்கலையின் சிறப்பு இயல்புகளாக வெளிப்பட்டன.
பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகள்
[தொகு]முன்னெப்பொழுதும் அறிந்திராத வகையில், வடிவமைப்பில் பிரம்மாண்டமான ஒருமைத்தன்மையை (unity) வெளிக்காட்டிய, மைக்கலாஞ்சலோவின் பிற்கால ரோமன் கட்டிடங்கள், குறிப்பாக சென். பீட்டர் பசிலிக்கா, பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகளாகக் கொள்ளத்தக்கவை. அவரது மாணவரான ஜியாகோமோ டெல்லா போர்ட்டா (Giacomo della Porta) என்பவர் இதே பாணியைப் பின்பற்றி வந்தார். குறிப்பாக கேசு தேவாலய (Church of the Gesù) முகப்பு கவனிக்கத் தக்கது. இது, கார்லோ மதேமோ (Carlo Maderno) என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால பரோக் தேவாலயமான சாந்தா சுசான்னாவின் முகப்புக்கு நேரடியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் பரோக் பாணி ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் பரவியது.
சிறப்பியல்புகள்
[தொகு]
- ஒடுங்கி நீளமாக அமைந்திருந்த தேவாலயங்களில் நடுக்கூடம் (naves) அகலமாக அமைந்ததுடன் சில இடங்களில் வட்டவடிவமாகவும் வடிவமைக்கப்பட்டன.
- வலுவான ஒளி, நிழல் வேறுபாடுகளை உருவாக்கியோ, பல சாளரங்கள் மூலம் சீரான ஒளியை கட்டிடங்களுக்குள் விடுவதன் மூலமோ வியக்கத்தக்க ஒளிப் பண்புகள் ஏற்படுத்தப்பட்டன.
- அலங்காரங்களின் பயன்பாட்டில் தாராளம். (மரம், சாந்து, சலவைக்கல் முதலிய பொருள்களால் செய்யப்பட்ட சிறகுடன்கூடிய, கொழுத்த, குட்டையான குழந்தையின் சிற்பம் பொதுவாகக் காணப்படும்)
- உட்கூரைகளில் (ceiling) பெரிய அளவிலான ஓவியங்கள் வரையப்பட்டன.
- வெளி முகப்புகள் பெரும்பாலும் பெரிய அளவு நீட்சி அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
- உட்புறங்கள், ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அலங்கரிக்கப்படும் ஒர் இடம் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. (சிறப்பாக பிற்கால பரோக் கட்டிடங்களில்)
- ஒவியங்களில் முப்பரிமாண நுட்பங்களின் பயன்பாடுமூலம் ஒவியமும், கட்டிடக்கலையும் ஒன்று சேர்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gauvin Alexander Bailey, Between Renaissance and Baroque: Jesuit Art in Rome, 1565–1610 (Toronto: University of Toronto Press, 2003).