பரமஹம்சதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமஹம்சதாசன் (திசம்பர் 16, 1916 - சனவரி 1965) இலங்கையில், புகழ்பெற்ற தமிழ்க்கவிஞராக விளங்கியவர். இவர் பிறப்பால் தமிழ்நாட்டினர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், அதிகரம் என்ற சிற்றூரில் திரு. முத்துப்பழனியப்பர்- திருமதி அழகம்மை இணையருக்கு, 16.12.1916இல் தலைப்பிள்ளையாகத் தோன்றியவர். இவரது இயற்பெயர் சுப்பராமன்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இக்கவிஞர் பல காரணங்களால் 1962 மத்தியக் காலத்தில் இலங்கையிலிருந்து அவர் தமிழகத்திற்குத் திரும்பினார். இலங்கைத் தமிழர் தேசிய கீதத்தை உருவாக்கிய பெருமையுடையவர் இவர். “இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தேசிய கீதத்தை உருவாக்கிய பெருமை கவிஞர் பரமஹம்சதாசனுக்கு உரியதாகும். இந்த நாட்டின் அநீதியானதொரு அரசியல் சட்டத்திற்குப் பலியாகி அவர் தமது தாய்நாடு திரும்ப நேரிட்டிருப்பினும்கூட, அவர் கவியுலகில் தமது தேன்சொட்டும் பாக்களால் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சிக்கு இலக்கிய அன்பர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்...” [1] என்று இலங்கையின் அந்நாளைய மட்டக்களப்பு முதல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ. இராசதுரை பாராட்டியுள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தார் பரமஹம்சதாசன். தன் மீது இவர் பாடியுள்ள பாடல்களை கவியோகி அவர்கள் தாம் இயற்றிய பாரதசக்தி மாககாவியத்தின் பிற்காலப் பதிப்புகளின் முகப்புப்பகுதியில் பெருமையோடு இணைத்து வெளியிட்டுக் கொண்டார். பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில், அவரோடு உடனுறைந்து பழகியவர் பரமஹம்சதாசன். சுவாமி சித்பவானந்தா, சுவாமி சச்சிதானந்தா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருலோகசீதாராம், துறைவன் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இவர் இறுதிக்காலம் வரை பிரம்மச்சரியாகவே வாழ்ந்தார்.

எழுத்துலகில்[தொகு]

சுப்பராமன் இளம்வயதிலேயே பணியின் காரணமாக, இலங்கைக்குச் சென்றார். அங்கே மட்டக்களப்பு நகரில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். இயல்பாகவே, உணர்ச்சியும், தமிழார்வமும் நிறைந்த இவரை, மட்டக்களப்புமண் கவிஞராக்கியது. அந்த நகரத்தின் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பு இவரை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தாசனாக்கியது. கி.பி. 1945முதல் இவரது கவிதைகள் இலங்கைத் தமிழ் இதழ்களில் வெளிவரத்தொடங்கின

படைப்புகள்[தொகு]

மகாகவிதாகூர் பாடிய (Fruit Gathering) ‘கனிகொய்தல்’ என்ற கவிதை நூலையும், கீதாஞ்சலியையும் மரபுக்கவிதை வடிவில் தமிழுக்குத் தந்த தகைசால் பெருங்கவிஞர் இவர். இவற்றுள் ‘கனிகொய்தல்’ நூலைத் ‘தீங்கனிச்சோலை’ என்ற பெயரில் இலங்கை நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையம், 1963இல் பதிப்பித்து வெளியிட்டது மகாகவி தாகூரின் தீங்கனிச்சோலை (Fruit Gathering) நூலும் கவிதை மணிமாலை என்னும் அளவால் சிறிய நூலும் தவிர, அக்கால இதழ்களில் வெளிவந்தவையும், கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவையுமான பிற கவிதைகள் மூன்று தொகுப்புகளாக, தேசியக் கவிதைகள், பக்திக்கவிதைகள், பல்சுவைக் கவிதைகள் என்ற பகுப்புகளில் வெளியிடப் பெற்றுள்ளன. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு இத்தொகுப்புகளின் பதிப்பாசிரியர் ஆவார். இத்தொகுப்புகளுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கிருங்கை சேதுபதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

1962இல் தமிழகம் வந்த கவிஞர் பரமஹம்சதாசன் நீண்ட நாட்கள் உடல் நலம் குன்றியிருந்து தமது 49ஆவது வயதின் தொடக்கத்தில் 1965 சனவரியில் அவர் சொந்த ஊரான அதிகாரத்தில் காலமானார். அவர் இல்லத்தோட்டத்தில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வீரகேசரிநாளிதழ், 29.05.1962

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமஹம்சதாசன்&oldid=3711210" இலிருந்து மீள்விக்கப்பட்டது