பயனர்:Njaanam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானவெட்டியான்

படம் = http://kuravanji.com/wp-content/uploads/2006/10/kuravanji.gif

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு.

இயற்பெயர் - அ.நட. செயச்சந்திரன் B.Sc.,A.M.I.E.R.E.(LOND).,M.B.A.,C.A.(LOND).,ICWA(LOND).,

தந்தை - திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம் (District Collector)

தாய் - திருமதி.சீதை அம்மாள்

எளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பவுதீகம்) பெற்று, ஆசிரியராக 2 ஆண்டுகள் கழிந்தன. பின்னர் State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு.

1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம்.

விருப்பம் - பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும். எவ்வகையிலாகிலும் தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டும்.

ஞானவெட்டியான்

திண்டுக்கல்(தமிழகம்)

தமிழ் மொழியின் எதிர்காலம்[தொகு]

ஞாலம் போற்றும் உயர்தனிச் செம்மொழிகளில் அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்களின் அறியாமை, அலட்சியப் பாங்கு ஆகியவைகளால் நெருப்பு, நீர், கரையான் ஆகியவற்றால் அழிந்துபட்டது போக எஞ்சியிருக்கும் எண்ணற்ற நூல்களும், அவைகள் சுட்டும் கருத்துக்களும் தமிழ் தொன்மையானது என்பதற்கு ஆதாரம். தமிழர்களின் நாகரீகத்தின் மேம்பட்ட நிலையினை தெள்ளத் தெளிவாய்க் காட்டும் ஆடியாகவும் விளங்குகிறது.

இலக்கிய வளம், இலக்கணச் செறிவு, தத்துவப் பான்மை ஆகிய எல்லாம் அமைந்த மொழி. நெறிகளில் உயர்ந்த திருநெறியைச் சுட்டுவதால் "திருநெறியத் தமிழ்" எனவும், தெய்வத்தன்மை வாய்ந்ததாலும், தெய்வத்திடம் வழிப்படுத்தும் மொழியாகவிருப்பதாலும் "தெய்வத்தமிழ்" எனவும் சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார். மும்மூர்த்திகளாம், குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர் ஆகியோர், இறைவனையும் இறை உணர்வினையும் உரைநடைகளாக ஆக்கி பேச்சுமொழியைத் தெய்வத் தன்மை பொருந்தியதாகச் செய்தனர்.

தோற்றம்:[தொகு]

கத்தொலிகள்(ஓ, கோ, கூ), ஒப்பொலிகள்(கூ, மா, குர்), வாய்ச்சைகை ஒலி(வா, போ), இன்னும் பிற ஒலிக்குறிகள் ஆகியவைகளிலிருந்து ஒலிகள்(சொற்கள்) பிறந்தன. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களின் ஒலிக்குறிப்புகளும் சொற்பிறப்பிற்கு அடிப்படையாயின. இதைவைத்து முதன் முதலில் தோன்றியவை தனிச்சொற்களே. குறிஞ்சியில் வாழ்ந்தபொழுது தமிழர்கள் புழங்கியது சில சொற்களே. பின்னர், முல்லை முதலிய ஏனைய திணைகளுக்குப் புலம் பெயர்ந்தபொழுது, ஒவ்வொன்றிலும் சிற்சில புதுச் சொற்கள் தோன்றின. பல சொற்கள் மருதத்தில் தோன்றியவை.

மருத நிலத் தலைவன் மற்ற திணைகளில் புழங்கிய சொற்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்க ஒரு முழு மொழியாகியது. அடுத்தடுத்த இடங்களுக்குச் சென்றபோது சொல்வளம் பெருகிற்று.

வளர்ச்சி:

இடம், பொருளீட்டல், தொழில் ஆகியன விரிவுபட்டபோது புதுச் சொற்கள் தோன்றின. சொற்களை வைத்து சொற்றொடர்கள் தோன்றின. சொற்றொடர்களை வைத்து இலக்கியம் தோன்றிற்று. முதலிலக்கியம், காதல் வெளிப்பாடுகள், முன்னோர் சரித்திரம், போர்ப்பாடல்கள், திருமன்றாட்டுகள், மறைநூல் என்னும் வரிசையில் வெளிவந்தன. பின்னர், இலக்கணிஞர்கள் இலக்கணம் யாத்தனர். அதன் பின்னர், எழுதுபவரின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இலக்கியம் வளர்ந்தது. அறநூல் எழுதும்பொழுது, எழுதுபவரின் சொல்லாக்கமும், இறைச்சிந்தனையாளர்கள் பெருநெறியாம் திருநெறி பற்றி எழுதும்பொழுது அவர்களின் சொல்லாக்கமும் தமிழை வளப்படுத்தின. தமிழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாயிருந்தது திருநெறி இலக்கியமே. அப்பொழுது, தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழை வளர்த்தன.

பிறமொழிக் கலப்பு:[தொகு]

வேதங்களை (ரிக், யசுர், சாம, அதர்வணம்) தமிழருக்கு அறிமுகப்படுத்துங்கால், அதிலுள்ள செங்கிருதச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொல் வேர்களையெடுத்துக்கொண்டு, முன்னொட்டு அல்லது பின்னொட்டு சேர்த்து சொற்களை உருவாக்கினர். பின்னர், அதுதான் மூலம்; அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தது என வாதிடவும் செய்தனர். வைணவம் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் செங்கிருதமும் தமிழும் கலந்த நடை உருவாயிற்று. அதை மணிப்பிரவாள நடை என்றனர். இதன் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க பல சமயக் குறவர்கள் போராடியுள்ளனர். அத்துடன் நில்லாது, தெலுங்கு, கன்னட, கேரள மன்னர்களின் ஆதிக்கத்திற்குள் சென்ற பகுதியினர் அம்மொழிகளின் சொற்களையும் தமிழுடன் கலந்து பலுக்க(பேச) ஆரம்பித்தனர். இதனால், பல வேர்ச்சொர்கள், கிளைச் சொற்கள் ஆகியன மறைந்து விட்டன. மறைமலையடிகள் போன்ற ஆன்றோர்கள் தமிழைக் காக்க அரும்பாடுபட்டு, தங்களின் ஆக்கங்களில் இனம் காட்டியுள்ளனர்.

நிகழ்காலத்தில் தமிழ்:[தொகு]

நிகழ்காலத்தின் தமிழ் மிகவும் வருந்தத்தக்க நிலயில் உள்ளது. மடிக்குழைப் பள்ளிகளில் கல்வி பயின்றுவந்த தலைமுறையினர் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோரும், மற்றையோரும், ஆங்கிலம் கலந்து உரையாடுவதுதான் மதிப்பைத் தரும் என்னும் கருத்துகொண்டு, தாய்மொழிச் சொற்களைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக:"எனக்கு health சரியாக இல்லைங்கிறதால lateஆ எந்திரிச்சு shave பண்ணாம autoவில collegeக்குப்போய் first period attend பண்ணிட்டு ப்ரொபெசர்கிட்ட half day leave கேட்டுகிட்டு hostelல்ல என் friend roomல rest எடுத்தேன்."

ஆங்கிலம் வேண்டாமெனக் கூறவரவில்லை. புழங்கினால் முழுவதும் ஆங்கிலத்திலேயே புழங்கவேண்டும்(அலுவலகம் போன்ற இடங்களில், அல்லது தமிழ் மொழி தெரியாதோரிடம்). அதில் தமிழ் கலப்பு கூடாது. மற்ற இடங்களில், முக்கியமாக, இல்லத்தில், தமிழ் தெரிந்தோரிடத்தில் உரையாடும்போது, தமிழில் மற்றமொழிக் கலப்பின்றி உரையாடுதல் வேண்டும். செந்தமிழில் உரையாடாவிடினும், பேச்சுத் தமிழில் கலப்பின்றி பேசுதல் வேண்டும்.

ஊடகங்களில், தமிழ் எழுத்துக்களின் ஒலிக்குறிப்பு கொலை செய்யப்படுகிறது. யாருக்கும் கவலை இல்லை. எடுத்துக்காட்டு:

"ச" என்னும் எழுத்து "ஸ" என பலுக்கப்படுகிறது(ராசா=ராஸா). "பலனியில் மளை பேஞ்சதால் பக்தர்கள் மளை ஏறமுடியாமல் வலுக்கி விளுந்தனர்." ஊடகங்களைத் திருத்த முடியாது. அவர்களின் குறிக்கோள் "பணம்....பணம்." விளம்பரப் படங்களின் தரம் கொடிது. அவர்கள் செய்யும் தமிழ்க்கொலையை காணக் கண்கூசும்; கேட்கும் செவிப் பறை கிழிந்து போகும்.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் சொல்வளம் குறைவு. அதனால், பிறமொழிகளிலுள்ள சொற்களைக் கடன் பெற்றது. அப்பொழுதும் அது ஆங்கில ஒலிக்குறிப்பிலேயே அச்சொல்லைப் பலுக்கியது. தமிழ் பெருவளமொழி. இல்லாத சொற்களேயில்லை. கடன்பெற வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், இதுவரை புகுத்தப்பட்ட பிறமொழிச்சொற்கள் எல்லாம் தமிழின் வளத்தைக் குறைத்து அதன் தூய்மையைக் குலைத்து வந்துள்ளன. பல சொற்கள் வழக்கிழந்தன. சற்றொப்ப இருநூறு ஆண்டுகளாக ஆங்கில் வல்லாண்மையை எதிர்த்துப் போராடி வந்தும் முன்னேற்றமின்மை தமிழனின் ஆங்கில மோகத்தைத்தான் காட்டுகிறது."பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்", "உண்பாடின்றேல் பண்பாடில்லை" என்னும் முதுமொழிக்கிணங்க, தரமுடன் வாழ்ந்த தமிழரில் சிலர், தவத்திரு மறைமலயடிகளைத் தவிர, பொருளுக்கும், புகழுக்கும் ஆசைகொண்டு தமிழ் முழக்கத்தையே கைவிட்டிருக்கின்றனர். தமிழின் இந்நிலையை நீக்க:

இவ்விழிநிலையிலிருந்து தமிழைக் காக்க, தமிழ் கற்றறிந்த ஆன்றோரும், மாணாக்க சமுதயமுமே ஏற்றவர்கள். இவர்கள்தாம் எதிர்காலக் குடிவாணர்கள்; அமைச்சர்கள்; அரசு. நம் தமிழைக் காக்க, வரும் இளைய தலைமுறையினர் தவறுவார்களேயாயின், பின்னர் தமிழன் என்ற இனம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

  1. .முன்னோர் ஆக்கிய சொற்களைக் கையாளுதல் வேண்டும்.
  2. .பின்னோரும் புதுச் சொற்களை ஆக்குதல் வேண்டும்.
  3. .நேர் தமிழ்ச் சொல் இல்லாத பிறமொழிச் சொல்லுக்கு வேர்ச்சொல் அறிந்து, அதற்கொப்ப புதிய தமிழ்ச் சொல் உருவாக்குதல் வேண்டும். அதையும் தமிழ் ஒலிக்குறிப்பில் பலுக்குதல் வேண்டும்.
  4. .பிற மொழிகளில் உள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்தல் வேண்டும்.
  5. .திரைப்படம், சின்னத்திரையில் அழுகை புலம்பல் நாடகங்கள், பண்பலை வானொலியின் பண்பற்ற உரையாடல்கள் ஆகியவைகளைப் பார்த்தோ அல்லது கேட்டோ, அதை உள்வாங்கி அப்படியே பலுக்கக் கூடாது.
  6. .தமிழில் புகுத்தப்பட்ட சொற்களில் நாளொன்றுக்கு ஒரு சொல் நீக்கிப் புழங்க முயன்றால் போதும்.
  7. .ஒவ்வொருநாளும், அகரமுதலியிலிருந்து முன்னர் புழக்கத்தில் இருந்த தமிழ்ச் சொற்களிலிருந்து ஒரு சொல் புதியதாகத் தெரிந்து கொள்ள முயலவேண்டும்.

மொழி என்பது மக்கள் வாயில் வழங்கும் ஒலித்தொகுதியே. அவரினும் வேறான ஓர் உயிர் அல்லது உருவமல்ல. மக்கள் தம் தாய்மொழியைப் பேசினால் அது வாழும்; இல்லையேல் மாளும். தமிழின்றேல் தமிழனில்லை. தமிழ் அழிந்தால் தமிழன் என்னும் இனமும் அழியுமென்பதில் ஐயமேதுமில்லை. தமிழின் தூய்மையைக் காப்பது தமிழனின் தலையாய கடமை.

ஞானவெட்டியான் திண்டுக்கல்(தமிழகம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Njaanam&oldid=2923046" இலிருந்து மீள்விக்கப்பட்டது