பத்துக் குற்றங்கள்
நூலில் இடம் பெறக் கூடாத குற்றங்களாக தொல்காப்பியமும்,பின்னர் வந்த நன்னூலும் எவை என விரித்துக் கூறுகின்றன.
தொல்காப்பியம் கூறும் பத்துவகை குற்றங்கள் :
1.கூறியது கூறல் - ஓரிடத்தில் கூறிய செய்தியைப் பயனின்றி மீண்டும் பிற இடங்களிலும் கூறுதல்.
2.மாறுகொளக் கூறல் - முன்னர் ஏற்புடையது எனக் கூறிய கருத்தைப் பின்னர் மறுத்துக் கூறுதல்.
3.குன்றக் கூறல் - இத்தனை என வரையறை செய்து கொண்ட பொருட்களுள் சிலவற்றை விளக்கிக் கூறாமல் விட்டுவிடுதல்.
4.மிகைபடக் கூறல் - கூறவந்த பொருளையே அல்லாமல் பிற பொருட்களையும் சேர்த்துக் கூறுதல்
5.பொருளில கூறல் - முன்னும் பின்னும் வருகின்ற பொருட்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைப் பயனின்றிக் கூறுதல்.
6.மயங்கக் கூறல் - கேட்டவர்க்குப் பொருள் தெளிவின்றி இதுவோ அதுவோ என மயக்கம் ஏற்படும்படி கூறுதல்.
7.யாப்பிற்றாதல் - பொருளைப் புலப்படுத்துவதற்குச் செய்யப்பட்ட செய்யுள் இனிய ஓசை வேறுபாடுகளாகிய சந்த இயைபின்றி அமைக்கப்பட்டிருத்தல்.
8.இழுக்கக் கூறல் - தாம் கூற வந்த கருத்தை உயர்ந்த சொற்களால் கூறாமல் இழிந்த சொற்களால் எடுத்துரைத்தல்.
9.கருதிக் கூறல் - வழக்கு வழிபட்ட மரபில் கூறாமல் மாறான ஒன்றைத் தானே படைத்துக் கூறுதல்
10.மனங்கோள் இன்மை - எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் பிறர் மனதில் பதியும்படி கூற முடியாமை.
நன்னூல் கூறும் பத்துவகைக் குற்றங்கள் :
- குறிப்பிட்ட ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான சொற்களில் குறைவுபடக் கூறுதல்
- குறித்த ஒரு பொருளை விளக்குவதற்குத் தேவையான சொற்களைவிட மிகைபடக் கூறுதல்
- சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்
- முன்னர் சொல்லிய ஒரு செய்திக்கு முரணாகக் கூறுதல்
- குற்றமுடைய சொற்களை ஆங்காங்கே சேர்த்தல்
- கூறவேண்டிய செய்தியை இதுவோ அதுவோ எனப் பொருள் புரியாமல் மயங்கும் வகையில் கூறுதல்
- பொருளோடு பொருந்தாது வெறும் சொற்களை அடுக்கி அலங்கரித்துக் கூறுதல்
- சொல்லத் தொடங்கிய பொருளை விட்டுவிட்டு இடையில் மற்றொரு பொருளைக் குறித்துப் பேசுதல்
- விரிவாகச் சொல்ல ஆரம்பித்த பொருளைப் போகப்போகச் சொல்நடையும் பொருள் நடையும் குறையுமாறு முடித்தல்
- சொற்களிருந்தும் அவற்றால் பொருட்பயன் ஏதுமில்லாது கூறல்
ஆகிய இப்பத்தும் ஒருநூலுக்கு இருக்கக்கூடாத குற்றங்களாகும்.[1]
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑
"குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே". நன்னூல் 12 "சிதைவுஎனப் படுபவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில கூறல் மயங்கக் கூறல் கேட்போர்க்கு இன்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும்". தொல்காப்பியம் (பொருளதிகாரம் 654)