பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை[தொகு]

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)[தொகு]

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம் கணக்கிடுதல்[தொகு]

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிக்கொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடை கணக்கீடு[தொகு]

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறரை (16½) மாத ஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.

பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.

அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை[தொகு]

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும். [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]