பசுபதேசுவரர் குடைவரைக் கோயில்

பசுபதேசுவரர் குடைவரைக் கோயில், திருமலாபுரம் பாசுபதேசுவரர் கோயில், திருமலைக்கோயில் என அழைக்கப்படுவது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் - சேர்ந்தமரம் சாலையில், திருமலாபுரம் என்னும் சிற்றூரில், சர்வேசுவரன் மலை என்ற மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலாகும். இக்குடவரை ஏழாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் அமைக்கபட்டது. இக்கோயிலின் தலமரமாக பனை மரம் உள்ளது.
குடவரைக் கோயில் அமைந்துள்ள இம்மலையானது தற்காலத்தில் சர்வேசுவரன் மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையானது கிழக்கு மேற்காக தொடராக நீண்டு அமைந்துள்ளது. இந்த மலையின் அடியில் குடவரைக் கோயிலும், மலையின் மேலே கிறித்துவ தேவாலயம் அமைந்துள்ளது.[1] இம்மலையின் தெற்கு வடக்கு என இரு குடவரைக் கோயில்கள் உள்ளன. தெற்கு பகுதியில் உள்ள கோயில் சிற்பப் பணிகள் முழுமையடையாமல், எந்த தெய்வச் சிலையும் இன்றி வெறுமையாக உள்ளது. அது முருகனுக்காக குடையப்பட்டது எனப்படுகிறது.[2]
அமைப்பு
[தொகு]வடபகுதியில் உள்ள குடவரைக் கோயில் வழிபாட்டில் உள்ளது. இது வண்ணாச்சிப் பாறை என்ற குன்றின் வடபுபுற அடிவாரத்தில் தரையில் இருந்து ஆறடி உயரத்தில் குடையப்பட்டுள்ளது. குடைவரையின் முன் மண்டபம் வடக்கு திசைப்பார்த்தவாறு உள்ளது. அதன் உள்ளே கருவறை கிழக்குப் பார்த்ததாக அமைந்துள்ளது. முன் மண்டப முகப்பின் நடுவில் இரு முழு தூண்களும், பக்கவாட்டில் இரு அரைத் தூண்களும் உள்ளன. தூண்களின் உச்சியில் தோரணவாயில் போன்ற கலையம்சம் அமைக்கபட்டுள்ளன. முழுத் தூண்கள் செவ்வக வடிவில் உள்ளன. அதன் நடுவில் எண்பட்டை வடிவமைப்பு உள்ளது. தூண்களில் தாமரை, மீன், யானை, மீன், காளை போன்றவற்றின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. பக்கவாட்டில் உள்ள அரைத் தூண்களை ஒட்டிய பாறையின் விளிம்பில் விளக்கு மாடங்கள் இரண்டு செதுக்கபட்டுள்ளன. இக்கோயிலின் முக மண்டபத்தில் நின்ற நிலையில் விநாயகர், பிரம்மன், திருமால், நடராசர், பூதகணங்கள், துவாரபாலகர்கள் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. நடராசரின் புடைப்புச் சிற்பமானது காலை தூக்காமல், சடாமுடி மூடிய நிலையில், காலடியில் முயலகன் இல்லாத நிலையிலும் உள்ளார். இது தாண்டவமாடுவதற்கு முந்தைய நிலையாகும். இவரை சதுர தாண்டவ நடராசர் என்று அழைக்கின்றனர். கருவறையில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கமானது சதுரவடிவிலான ஆவுடையாருடன் பாறையிலேய வெட்டி உருவாக்கபட்டள்ளது. எதிரே நந்தியும் காணப்படுகின்றன.[2] இங்கு உள்ள நந்தியானது முன்மண்டப தரைப்பகுதியில் பாறையில் இருந்தே செதுக்கி வடிவமைக்கபட்டுள்ளது.
ஓவியம்
[தொகு]இக்கோயிலின் முக மண்டப விதானத்தில் வண்ண மூலிகை ஓவியங்கள் காணப்படுகின்றன. இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் சிறீமாறன் சிறீவல்லபனின் (கி.பி. 815 - 868) ஆட்சிக் காலத்தில் ஆசிரியர் இளங்கௌதமன் என்பவரால் வரையப்பட்டுள்ளது.[3]
கல்வெட்டு
[தொகு]பதினோராம் நூற்றாண்டில் சிறீவல்லபதேவன் (கி.பி. 1132 - 1152) என்னும் பாண்டிய மன்னன் இக்கோயிலுக்கு இந்த மலைப்பகுதியையும், அதனைச் சுற்றியுள்ள குளங்களையும், தானமாக வழங்கிய செய்திக்கான கல்வெட்டு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]
படத்தொகுப்பு
[தொகு]-
திருமலாபுரத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வுக்கழகம் வைத்துள்ள தகவற்பலகை
-
பிரம்மா புடைப்புச் சிற்பம், திருமலாபுரம்
-
சிரட்டைக் கின்னரி இசைக்கு ஆடும் சிவன், திருமலாபுரம்
-
விஷ்ணு புடைப்புச் சிற்பம், திருமலாபுரம் குடைவரை
-
திருமலாபுரம் குடைவரையிலுள்ள மற்றொரு இறையுரு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சேர்ந்தமரம் அருகே தேவாலய பிரச்னை :சங்கரன்கோயிலில் சமாதானக் கூட்டம்". தினமணி. 2012-09-20. Retrieved 2021-10-21.
{{cite web}}:|first=missing|last=(help) - ↑ 2.0 2.1 2.2 "சங்கரன்கோவில் அருகே ஒரு காசி". Hindu Tamil Thisai. Retrieved 2021-10-24.
- ↑ தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்கும் திருமலாபுரம் பாசுபதேஸ்வரர் கோயில், வெ. கணேசன், இந்து தமிழ் திசை,11 செப்டம்பர் 2025
