ந. சிவராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. சிவராஜ்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1957–1961
முன்னையவர்ஓ. வி. அழகேசன்
பின்னவர்ஏ. கிருஷ்ணசாமி
தொகுதிசெங்கல்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-09-29)29 செப்டம்பர் 1892
கடப்பா, மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு29 செப்டம்பர் 1964(1964-09-29) (அகவை 72)
மெட்ராஸ், மெட்ராஸ் மாநிலம், இந்தியா (தற்போது சென்னை, தமிழ் நாடு, இந்தியா)
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
நீதிக் கட்சி
துணைவர்
முன்னாள் கல்லூரிமெட்ராஸ் சட்டக் கல்லூரி
வேலைஅரசியல்வாதி, செயற்பாட்டாளர்

இராவ் பகதூர் நமசிவாயம் சிவராஜ் (பி. 29 செப்டம்பர் 1892இ. 29 செப்டம்பர் 1964) வழக்கறிஞர், இந்தியக் குடியரசுக் கட்சியின் தேசிய முதல் தலைவர், அரசியல் தலைவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்பட்டவர். டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றியவர். பிரித்தானிய அரசு இவருக்கு இராவ் பகதூர் பட்டம் அளித்துக் கவுரவித்தது.

கல்வி[தொகு]

இவரைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே 4ஆம் வகுப்புவரை இவரது தந்தை படிக்க வைத்தார். பிறகு, இராயப்பேட்டையிலிருந்த வெஸ்லி பள்ளியில் 5ஆம் வகுப்பில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்புவரை அங்குப் பயின்ற சிவராஜ், வெஸ்லி கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தார். மெட்ராஸ் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1917ஆம் ஆண்டு மெட்ராஸ்ச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

தொழில்[தொகு]

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1925இல் மெட்ராஸ்ச் சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

திருமணம்[தொகு]

சிவராஜ், தனது 26ஆம் அகவையில் 1918ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 10ஆம் நாள் மீனாம்பாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மீனாம்பாள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெண்களைத் திரட்டித் தீவிரமாகப் போராடியவர்.

அரசியல் வாழ்வு[தொகு]

சிவராஜ் தொடக்கக் காலம் முதலே நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். பல சுயமரியாதை இயக்க மாநாடுகளிலும், நீதிக்கட்சி மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பட்டியல் பிரிவு மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்துப் போராடியபோது அவர்களுக்கு ஆதரவாகச் மெட்ராஸ் மாகாணத்தில் செயல்பட்டார். இராசகோபாலாச்சாரி 1937இல் முதல் அமைச்சரானவுடன் சிவராஜ் சட்டக்கல்லூரி பேராசிரியர் பதவியைவிட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அம்பேத்கர் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை 1942இல் அமைத்தபோது சிவராஜை அதன் அகில இந்தியத் தலைவராக அறிவித்தார். சிவராஜ் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து சமூகப் பணிகளைச் செய்துவந்தார். அம்பேத்கர் மறைவுக்கு முன் செப்டெம்பர் 26 ஆம் நாள் 1956 ல் இந்தியக் குடியரசுக் கட்சி உருவாக்கப்பட்டபோது அதன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பணிகள்[தொகு]

1927 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒரே ஒரு ஆதிதிராவிட மாணவரைக்கூட சேர்த்துக் கொண்டதில்லை. சிவராஜ், பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை மீது வழக்கு தொடுத்து வழக்கில் வென்ற பிறகே 1928முதல் ஆதிதிராவிட மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆண்களுக்கு 21 எனவும், பெண்களுக்கு 16 எனவும் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற தீர்மானத்தை 27 மார்ச்சு 1928இல் மெட்ராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். 17 நவம்பர் 1928 இல் முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணையைச் சத்தியமூர்த்தி எதிர்த்துப் பேசினார். முத்தையா முதலியாருக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். 2 மார்ச்சு 1933 அன்று பொப்பிலி அரசர் கொண்டுவந்த இனாம்நில ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சிவராஜ் உரையற்றினார். அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்களுக்கு இனாமாகக் கொடுத்த நிலத்தைக் கைப்பற்றி விவசாயக் குடிகளுக்குக் கொடுக்கும் மசோதா அது. காந்தி உண்ணாவிரதம் இருந்ததால் தனிவாக்களர் தொகுதியை நேர்ந்த பூனா ஒப்பந்தம் நியாயமற்றது. ஆதிதிராவிட மக்களின் உரிமையைப்பறிப்பது ஆகும் என்று அந்த ஒப்பந்தத்தைக் கண்டித்து சட்டமன்றத்தில் 1934இல் தீர்மானம் கொண்டுவந்தார். நீதிக்கட்சி ஆதரவுடன் அத்தீர்மானம் நிறைவேறியது. 7 ஆகத்து 1935 அன்று சிவராஜ் தென்னாற்காடு மாவட்டம் வெள்ளையன்குப்பம் படையாச்சிகள் குற்றப் பரம்பரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். மெட்ராஸ் மாநகரத்தின் முதல் மேயராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வகித்த பதவிகள்[தொகு]

மறைவு[தொகு]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த செப்டம்பர் 1964இல் தில்லி சென்றார். தில்லியில் இருந்தபோதே 29ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் உடல் தில்லியிலிருந்து விமானம் வழியாகச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பவுத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

சிலை[தொகு]

ந. சிவராஜின் பணிகளை பாராட்டும் வகையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தங்கச்சாலை மணிகூண்டு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • சிந்தனையாளன் பொங்கல் மலர்.20014,ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ராவ்ச‍கிப் ந.சிவராஜ். கட்டுரை-வாலாசா வல்லவன்.
  • http://vizhithezhuiyakkam.blogspot.de/2012/10/26121904-30-11-1992.html


அரசியல் பதவிகள்


முன்னர்
ம. இராதாகிருஷ்ண பிள்ளை
மெட்ராஸ் மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1945 — 1946
பின்னர்
தா. சுந்தர ராவ் நாயுடு
இந்திய மக்களவை
முன்னர்
ஓ. வி. அழகேசன்
செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி உறுப்பினர்
1957 — 1961
பின்னர்
ஏ. கிருஷ்ணசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._சிவராஜ்&oldid=3702701" இலிருந்து மீள்விக்கப்பட்டது