நெல்லை சு. முத்து
நெல்லை சு. முத்து | |
|---|---|
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வெளியே முத்து (மார்ச் 2024-க்கு முற்பட்ட ஒரு நாளில்) | |
| பிறப்பு | சு. முத்து 10 மே 1951 திருநெல்வேலி, மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
| இறப்பு | 16 சூன் 2025 (அகவை 74) திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
| கல்வி | இளநிலை அறிவியல் (வேதியியல்), A.IC. |
| பணி | மேனாள் அறிவியலாளர் |
| பணியகம் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் |
| அறியப்படுவது | அறிவியலாளர், அறிவியல் எழுத்தாளர் |
| பெற்றோர் | ‘அய்யாபள்ளி' என்ற மு. சுப்பிரமணிய பிள்ளை, சொர்ணத்தம்மாள் |
| வாழ்க்கைத் துணை | மு. மரகதம் |
| பிள்ளைகள் | மகன்- மு. பாலசுப்பிரமணியன், மகள்- மருத்துவர் மு.கலைவாணி |
| விருதுகள் | தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது - 2000, 2004, 2005, 2010 & 2017 தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது -2017 மற்றும் இந்திய அரசின் விருதுகள் |
நெல்லை சு. முத்து (Nellai S. Muthu, 10 மே 1951 – 16 சூன் 2025)[1][2] என்பவர் தமிழகத்தைச் சார்ந்த அறிவியலாளரும் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.
இளமையும் கல்வியும்
[தொகு]முத்து, எம். சுப்பிரமணிய பிள்ளை, எம். சொர்ணத்தம்மாள் இணையருக்கு மகனாகத் திருநெல்வேலியில் பிறந்தார். திருநெல்வேலி சாப்டர் மேனிலைப் பள்ளியில் 1969ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியினை முடித்த முத்து, பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் 1973ஆம் ஆண்டு இளம் அறிவியல் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
பணி
[தொகு]ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை அறிவியலாளராகப் பணியாற்றினார். இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் எழுபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினைப் பெற்றுள்ளார். அறிவியல் ஆத்திசூடி என்பது இவர் எழுதிய நூல்களுள் ஒன்று ஆகும்.
2004-ஆம் ஆண்டு, செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும் என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன அறிவியல் வாய்ப்புகளைக் குறித்தும் எழுதினார்.[3] இவர் தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று அப்துல் கலாம் பாராட்டியுள்ளார்.[4]
தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது
[தொகு]இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு வழங்கப்பட்டது.
- விண்வெளி 2057 எனும் நூல் 2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு எனும் நூல் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் எனும் நூல் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்) எனும் நூல் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DIN (2025-06-16). "விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்". Dinamani. Retrieved 2025-06-17.
- ↑ நிருபர், நமது. "விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!". தினமலர். Retrieved 2025-06-17.
- ↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்; பக்கம் 226 231
- ↑ அறிவியல் ஆத்திச்சூடி,பக் 53 ஆறாம் வகுப்பு