நூல்தேட்டம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூல்தேட்டம்
நூல் பெயர்:நூல்தேட்டம்
ஆசிரியர்(கள்):ந. செல்வராஜா
துறை:{{{பொருள்}}}
மொழி:தமிழ்

நூல்தேட்டம் இலங்கை எழுத்தாளர்களினதும், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களினதும் நூல்களை ஆவணப்படுத்தும் தொகுப்பேடாகும்.

நூல்தேட்டம் ஆசிரியர்[தொகு]

இலங்கையின் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது புலம்பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் 'லூட்டன்' நகரை வசிப்பிடமாகக் கொண்டவருமான நூலகவியலாளர் ந. செல்வராஜா இவ்வேட்டின் ஆசிரியர்.

நோக்கம்[தொகு]

19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து இன்றைய காலகட்டம் வரை பல ஆயிரக்கணக்கான தமிழ்மொழி நூல்கள் இலங்கை எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய நூல்களைப் பற்றி முறையான பதிவுகள் இதுவரை பேணப்படவில்லை. இதனைக் கருத்திற்கொண்டு இலங்கை எழுத்தாளர்களினால் இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அச்சுருவில் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றிய விபரங்களை ஆவணமாக்குவதே நூல்தேட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இது ஒரு தேர்ந்த நூற்பட்டியலன்று. இங்கு பட்டியலாக்கப்பட்டுள்ள தனி நூல்கள் (Monographs) எவையும் எவ்வித தரக்கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. பெற்றுக் கொள்ளக்கூடிய ஈழத்துத் தமிழ் நூல்கள் அனைத்தையும், ஒரு தொகுதிக்கு 1000 நூல்கள் என்ற எண்ணிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

தொகுப்பும் தவிர்ப்பும்[தொகு]

வெளியீட்டின் பௌதீகத்தன்மை கருதி சில பிரசுரங்கள் நூல்தேட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டில்லை. துண்டுப்பிரசுரங்கள், வரைபடங்கள், அச்சிடப்படாத கையெழுத்துப் பிரதிகள், ஒலி, ஒளிப்பதிவு நாடாக்கள், இறுவெட்டுகள் என்பன இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டில்லை. பெரும்பான்மையான கல்வெட்டுகள், ஞாபகார்த்த மலர்கள், சஞ்சிகைகள் என்பனவும் இத்தொகுதியில் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஆயினும், தனி ஆவணமாகக் கருதும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகைகளின் சிறப்பு மலர்கள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கல்வெட்டுக்களும், ஞாபகார்த்த மலர்களும் தனிநூலின் வகைக்குள் அடங்கக்கூடியதான கனதியான அம்சங்களுடன் வெளிவந்திருப்பதால் அவையும் இத்தொகுதியில் சேர்த்துக் கொண்டுள்ளன.

கால எல்லை[தொகு]

இதில் தொகுக்கப்பட்டுள்ள நூல்கள் எவ்வித கால எல்லைகளுக்கும் வரையறுக்கப்படவில்லை.

பதிவுகளின் ஒழுங்கமைப்பு[தொகு]

நூல்தேட்டம் ஒரு உசாத்துணை நூலாகும். ஒரு நூலைப் பற்றிய நூலியல் தகவல்களைக் குறுகிய காலத்தில் வாசகர் கண்டறிய வகை செய்யும் வண்ணம் இத்தொகுதி 3 பிரிவாகப் பதியப்பட்டுள்ளது.

முதற்பிரிவு[தொகு]

முதற்பிரிவில் நூல் பற்றிய பிரதான பதிவுகள் பாட ஒழுங்கில் வகைப்படுத்தப்பட்டு தொடர்எண் மூலம் அடையாளமிடப்பட்டுள்ளன. பாடவாரியாக ஒரு நூலைத் தேடும் வாசகர் இப்பரிவின் மூலம் பயனடையலாம்.

இரண்டாம்பிரிவு[தொகு]

தலைப்பு வழிகாட்டியாகும். முதற்பகுதியில் நூல்கள் பாடவாரியாக முதலில் ஒழுங்குபடுத்தப்பட்டு, பின்னர் அகர வரிசையில் காணப்படுவதால் ஒரு நூலின் தலைப்பைக் கொண்டு நூலைத் தேடவிழையும் வாசகர் இரண்டாவது பிரிவில் அகரவரிசையில் காணப்படும் தலைப்பு வழிகாட்டியின் வாயிலாக நூலின் தொடர் இலக்கத்தைக் கண்டறிந்து முதற்பகுதியில் உள்ள பிரதான பதிவைப் பார்வையிட முடியும். இங்கு தலைப்புக்கள் அகரவரிசை எழுத்தொழுங்கில் அல்லாது சொல்லொழுங்கில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம்பிரிவு[தொகு]

ஆசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மூல ஆசிரியர் ஆகியோரின் விபரங்களைக் கொண்டு ஒரு நூலைத்தேடும் வாசகர் மூன்றாம்பிரிவின் மூலம் பயனடைவர். இங்கு ஆசிரியர் அகரவரிசையில் நூல்களின் தொடர்எண்களைக் கண்டறிந்து அதன் மூலம் தான் தேடும் நூலைச் சென்றடைய முடியும். ஆசிரியர் அகரவரிசையில் புனைபெயர்களும் இடம்பெறுகின்றன. ஒரு நூலாசிரியர் இயற்பெயரிலும் புனைபெயரிலும் நூல்களை எழுதுவதால் புனைபெயரின் கீழ் நூலைத்தேடும் வாசகர் ஆசிரியரின் இயற்பெயரிலும் அவற்றைத் தேட உதவும் வகையில் பார்க்க, மேலும் பார்க்க போன்ற வழிகாட்டி அம்சங்கள் தேவை கருதிச் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுவரை வெளிவந்தவை[தொகு]

நூல்தேட்டம் ஆறு தொகுதிகள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும்; ஆறாயிரம் நூல்கள் பற்றிய விபரங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலும் லண்டன் அயோத்தி நூலக சேவைகள் வெளியீடாக வெளிவந்துள்ளது.

தொடர் முயற்சி[தொகு]

இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை தொகுக்கும் முயற்சியில் ந. செல்வராஜா தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகம், தேசிய நூலக ஆவணமாக்கல் சபை, சுவடிக்கூடம், மற்றும் சர்வதேச நூலகங்கள், தனியார் நூலகங்கள், தனிப்பட்ட தொகுப்பாளர்கள் ஆகியவற்றில் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன் விளைவாக மேலும் பல நூல்கள் தற்போது நூலகவியலாளர் ந.செல்வராஜா அவர்களினால் பதிவாக்கப்பட்டுள்ளன.

ஆங்கில நூல்தேட்டம்[தொகு]

மேற்குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஆங்கில நூல்களின் விபரப்பட்டியலாக இந்நூல் விளங்குகின்றது. இதுவரை ஒரு தொகுதி மாத்திரமே வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 414 நூல்கள் பதிவாக்கப்பட்டுள்ளன.

மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்[தொகு]

மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் எனப்படும் நூலானது, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களின் விபரத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலினையும் லண்டன் அயோத்தி நூலக சேவைகள் வெளியிட்டுள்ளது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் வெளிவந்த 756 நூல்களின் விபரங்களை இதில் கண்டறிந்து கொள்ளலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூல்தேட்டம்_(நூல்)&oldid=3111815" இலிருந்து மீள்விக்கப்பட்டது