நீ. சந்திரசேகரன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீ. சந்திரசேகரன் நாயர் (N. Chandrasekharan Nair) ஒரு பிரபலமான இந்தி அறிஞர் ஆவார்.[1] இவர் கேரளத்தில் இந்தி சாகித்திய அகாதமியை நிறுவினார்.[2] நாயர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தி துறையின் முன்னாள் தலைவராக இருந்தார்.[3] நாயர் 2004-05ஆம் ஆண்டுக்கான இந்தி பேசாத பகுதிகளில் இந்தி எழுத்தாளர்களுக்கான மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் விருதையும்[3] 2008ஆம் ஆண்டு மகாராட்டிரா இந்தி சாகித்திய அகாதமி விருதையும் பெற்றார்.[4] இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.[1]

இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[5]

இளமையும் கல்வியும்[தொகு]

சந்திரசேகரன் நாயர் 1924ஆம் ஆண்டு சூன் 27 ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை கே. நீலகண்ட பிள்ளை, ஒரு விவசாயி. தாயார் ஜானகி அம்மா, பக்தியுள்ள இல்லத்தரசி.

சந்திரசேகரன் தனது படிப்பை முடித்து, கொல்லத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 4 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய பிறகு, அக்டோபர் 15, 1951 அன்று திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் இந்தியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். நாயர் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலைப் பட்டமும், பீகார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1967-ல் இந்தித் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் ஆன இவர், ஓட்டப்பாலம் என். எஸ். எஸ். கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.[6]

தொழில்[தொகு]

1982 முதல் 2009 வரை பதினைந்து அமைச்சகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். இவருக்குப் பல்கலைக்கழக மானியக் குழு தகைசால் பேராசிரியர் விருதின் மூலம் ஆராய்ச்சி உதவித்தொகையினை வழங்கியது.

எழுதுதல்[தொகு]

இந்தி மற்றும் மலையாளத்தில் இவர் கட்டுரைகள் எழுதுகிறார். இவர் ஒரு கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கதை எழுத்தாளர், ஆராய்ச்சி அறிஞர், ஓவியர் மற்றும் கலை மற்றும் இலக்கியத் துறைகளில் விமர்சகர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார். இவர் ஐம்பத்தொன்பது விருதுகளுடன் ஏழு தேசிய விருதுகளையும் பெற்றார். புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாம் உலக இந்தி மாநாட்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை மற்றும் இந்தி உலகின் பிற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டார்.

நாயர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னுரைகளை எழுதினார். இவர் 800க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐம்பத்தாறு புத்தகங்களை வெளியிட்டார். இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களால் பாடநூல்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏழு பேராசிரியர்கள் இவரின் பணியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

ஓவியம்[தொகு]

நாயர் கிட்டத்தட்ட நூறு ஓவியங்களை வரைந்துள்ளார். இதனைக் கொண்டு புது தில்லி கேரளா இல்லத்தில் கண்காட்சி நடத்தினார்.

நிறுவனங்கள்[தொகு]

ஓட்டப்பாலத்தில் காந்தி நூற்றாண்டு விழாக்குழு தலைவராகவும், பாலக்காடு மாவட்டத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாயர் ஓட்டப்பாலத்தில் காந்தி விக்னன் பவனை நிறுவி, அந்த நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தார்.

நாயர் காந்தி அமைதிப் படை, பாரத் யுவக் சமாஜ் போன்ற பல மாணவர் குழுக்களை நிறுவினார்.

நாயர் ஓட்டப்பாலம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத்தில் உறுப்பினராக இருந்தார். இங்கு பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார்.

கேரள இந்தி சாகித்திய அகாதமி[தொகு]

1980ஆம் ஆண்டு கேரள இந்தி சாகித்திய அகாதமிதிருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது.இந்நிறுவன முக்கிய நோக்கங்களாக இலக்கிய மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் தேசத்தின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்து பாதுகாப்பதாகும். நாயர் தலைமையிலான செயற்குழுவால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அகாதமி 13 சூன் 1982-ல் தொடங்கப்பட்டு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அகாதமியின் முதல் சாகித்திய புரசுகார் ஸ்ரீ தேவ் கேரளாவுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக, இந்த அமைப்பு நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஊக்குவித்தது. இந்த எழுத்தாளர்கள் தங்கள் அசல் தன்மை மற்றும் இந்தி மீதான ஈடுபாட்டிற்காக வழக்கமான அடிப்படையில் வெகுமதி பெறுகிறார்கள். இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் இந்தி மொழிகளுக்கான சூழலையும் இலக்கியப் போக்கையும் ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சி நூலகம் உள்ளது. கேரள இந்தி சாகித்திய அகதமி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. இவற்றில் சில தேசிய அளவில் விருது பெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஆறு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Photo Id: 6220065". The Hindu. 3 December 2005 இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120329141621/http://www.thehinduimages.com/hindu/photoDetail.do?photoId=6220065. 
  2. "Filmmaker falls to death from train". The Hindu. 2 April 2010 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100407085227/http://www.hindu.com/2010/04/02/stories/2010040255750400.htm. 
  3. 3.0 3.1 "Work in Hindi receives recognition". The Hindu. 27 October 2007 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071029204615/http://www.hindu.com/2007/10/27/stories/2007102750110200.htm. 
  4. "Hindi scholar donates prize money to students". The Hindu. 2 April 2008 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080409040237/http://www.hindu.com/2008/04/02/stories/2008040250910200.htm. 
  5. "Padma Awards 2020 Announced". pib.gov.in.
  6. "Biography of Dr. N Chandrasekharan Nair". drnchandrasekharannair.in. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ._சந்திரசேகரன்_நாயர்&oldid=3699407" இலிருந்து மீள்விக்கப்பட்டது