நாவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது தமிழக நாவாய் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  • நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல். [1]

துறைமுகத்தில்[தொகு]

  • நாவாயில் வந்த வெள்ளைக் குதிரைகளும், வடதிசையிலிருந்து வந்த வளப்பொருள்களும் நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.[2]
  • சாலியூர் துறைமுகத்தில் நாவாய்கள் ஆடிக்கொண்டே நின்றன.[3] [4]
  • புகார் துறைமுகத்தில், யானை கட்டியிருக்கும் வெளிறு என்னும் கூடம் போல, அலைமோதும் கடலில் கூம்பில் கொடி பறக்கும் நாவாய்கள் பல நெருக்கமாக நின்றுகொண்டிருந்தன. [5]
  • கரிகாலனின் முன்னோர் காற்றைக் கட்டுப்படுத்தி நாவாய் என்னும் பாய்மரக் கப்பலை ஓட்டி வாணிகம் செய்துவந்தனர்.[6]

தோற்றம்[தொகு]

  • நாவாயில் உள்ள கூம்பில் இதை என்னும் பாய்களைக் கயிற்றால் பிணித்துக் கட்டியிருப்பார்கள். புயலில் இதைக்கயிறு அறுந்துபோவது உண்டு. [7]
  • அவற்றில் நாட்டுக்கொடிகள் பறந்தன.[8]
  • கட்டுக்குள் நில்லாது நாவாய்கள் அசைவது உண்டு.[9]

பன்னாட்டு நாவாய்[தொகு]

  • பன்னாட்டு நாவாய்கள் தமிழகத் துறைமுகங்களில் உலவின.[10]
  • வானவன் என்னும் சேரமன்னன் கடலில் நாவாய் ஓட்டும்போது பிற நாவாய்கள் செல்லக்கூடாது. (இது முசிறித் துறைமுக்க் கட்டுப்பாடு) [11]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து (திருக்குறள் 496)
  2. நீர்ப்பெயற்று எல்லை போகிப் பால்கேழ்
    வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
    நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை (பெரும்பாணாற்றுப்படை 319-321)
  3. ஆடு இயல் பெரு நாவாய்
    மழை முற்றிய மலை புரைய
    துறை முற்றிய துளங்கு இருக்கை
    தெண் கடல் குண்டு அகழி
    சீர் சான்ற உயர் நெல்லின்
    ஊர் கொண்ட உயர் கொற்றவ (மதுரைக்காஞ்சி 83-88)
  4. விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
    நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்மார்
    புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியோடு அனைத்தும் (பாண்டிநாட்டு நெய்தல் வளம் – மதுரைக்காஞ்சி 321-323)
  5. வெளில் இளக்கும் களிறு போல,
    தீம் புகார்த் திரை முன்துறை,
    தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
    மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)
  6. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)
  7. பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்,
    வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இதை புடையூ,
    கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து உடன்
    கடுங் காற்று எடுப்ப, கல் பொருது உரைஇ,
    நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல, (மதுரைக்காஞ்சி 375-379)
  8. நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
    காணாமோ (அகம் 110)
  9. களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)
  10. வேறு பல் நாட்டுக் கால் தர வந்த
    பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை (நற்றிணை 295)
  11. சினம் மிகு தானை வானவன் குடகடல்
    பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
    பிற கலம் செல்லாது ஆங்கு (புறம் 126)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவாய்&oldid=3294184" இலிருந்து மீள்விக்கப்பட்டது