நாரைவிடுதூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாரை விடு தூது என்பது தமிழ் இலக்கியச் சுவை மிகுந்த பல்சுவைப் பாடல்களுள் ஒன்று.

நூலாசிரியர்[தொகு]

நாரை விடு தூது என்ற இந்நூலின் ஆசிரியர் சத்திமுத்தப் புலவர். இவர் சத்திமுத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவரின் இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை. சத்திமுத்தம் என்பது கும்பகோணம் அருகிலுள்ள தலமாகும். உமையம்மை இறைவனை வழிபட்டுத் தழுவி முத்தமிட்ட காரணத்தால் சத்திமுத்தம் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்பர்.[1]

பாடல்[தொகு]

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக் கேகுவீ ராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே[2]

விளக்கம்[தொகு]

நாரை என்பது ஒரு நீர் வாழ் பறவை ஆகும்.


அதன் கால் செம்மை நிறத்தில் இருப்பதால் செங்கால் நாரை என்கிறார் புலவர். நாரையின் வாயான அலகைப் பற்றிக் கூறும் போது அதன் வடிவத்தை நோக்கி பிளந்த பனங்கிழங்கு என்ற உவமையைக் கையாள்கிறார். பல்லி ஒலி கேட்டு சகுனம் பார்க்கும் வழக்கம் இருந்ததனைப் இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. நனை சுவர்க் கூரை என்பதால் புலவரின் ஏழ்மை நிலை விளங்குகிறது. வாடைக் காற்றில் ஆடையின்றி வாடும் புலவருக்கு உவமையாகப் பெட்டிக்குள் சுருண்டு இருக்கும் பாம்பு கூறப்பட்டிருக்கிறது.

மையக்கருத்து[தொகு]

வறுமையில் உள்ள புலவர், அவரது நிலையைத் தன் மனைவிக்குக் கூற நாரையைத் தூதாக அனுப்புகிறார்.

மேற்கோள்[தொகு]

  1. பு.மா. ஜெயசெந்தில்நாதன் எம்.ஏ. "திருமுறைத்தலங்கள்". pp. 465, 466. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
  2. ஏழாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ் நாடு பாடநூல் கழகம். 2007. பக். 46,47. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரைவிடுதூது&oldid=3711167" இலிருந்து மீள்விக்கப்பட்டது