நாத்தூராம் கோட்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாத்துராம் கோட்சே
Nathuram Godse
பிறப்புபாரமதி, புனே மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு15 நவம்பர் 1949(1949-11-15) (அகவை 39)
அம்பாலா சிறை, அரியானா, இந்தியா

நாத்தூராம் விநாயக் கோட்சே (மராத்தி: नथूराम विनायक गोडसे) (மே 19, 1910நவம்பர் 15, 1949) என்பவர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி. காந்தியைக் கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949, அன்று தூக்கிலிடப்பட்டார்.[1] இவரது சகோதரர் கோபால் கோட்சேவும் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை ஆனவர்.

இளமைக்காலம்

நிற்போர்: சங்கர் கிஸ்தையா, கோபால் கோட்சே, மதன்லால் பக்வா, திகம்பர் பட்சே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்). அமர்ந்திருப்போர்: நாராயண் ஆப்தே, வினாயக் தாமோதர் சாவர்க்கர், நாத்துராம் கோட்ஸே, விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே

நாத்துராம் கோட்சே புனே மாவட்டம் பாரமதியில் பிறந்தவர். இவருடைய தந்தை வினாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் அலுவலக ஊழியர்; இவருடைய தாயார் லட்சுமி (திருமணத்திற்கு முன் தாயாரின் பெயர் கோதாவரி). நாத்துராம் கோட்சே பிறந்தவுடன் இவருக்கு ராமச்சந்திரா என்ற பெயர் இடப்பட்டது. இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 1 மகள் பிறந்திருந்தனர். அதில் 3 மகன்கள் பிறந்த சில நாட்களில் குழந்தையிலேயே இறந்தனர். அதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால், ஐந்தாவதாக பிறந்த இவருக்கு மூக்குத்தி அணிவித்து அவரை பெண்பிள்ளைப்போல அலங்கரித்து சிறிது காலம் வரை வளர்த்தனர். அதனால் அவருக்கு நாதுராம் என்றப் பட்டபெயர் ஏற்பட்டது. மராத்தியில் நாதுராம் என்பது மூக்குத்தியைக் குறிக்கும் சொல். இவருக்குப்பின் ஒரு தமையன் பிறந்தார் அவர் பெயர் கோபால் கோட்சே.

நாத்துராம் தன் ஐந்தாவது வகுப்பு வரை பாரமதியிலும் பின்பு ஆங்கில வழிக்கல்வி கற்கவேண்டி புனே யில் தன் மாமியின் வீட்டில் தங்கி படித்தார்.[2]

காந்தியை கொன்ற வழக்கு மற்றும் தண்டணை

கோட்சே மகாத்மா காந்தியை ஜனவரி 30, 1948 அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியின் நெருக்கத்தில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தார். உடனே காவல் துறையினரிடம் தானே சரணடைந்தார். மே 27, 1948 ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவன் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவரது மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் நவம்பர் 8, 1949 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

கோட்சேயின் வாக்குமூலம்

கோட்சேயுடன் வேறு நபர்கள் இந்த வழக்கில் சதிகாரார்களாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர் செய்த செயலில் தனக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது எனக் கூறினார். அவருடைய செயலுக்கு அவர் மட்டுமே முழுப் பொறுப்பு என்றும் அவர்களை தன்னோடு குற்றம் சாட்டியிருக்காவிட்டால், எந்த எதிர்வாதமும் செய்திருக்க மாட்டார் என்றும் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறினார்.[3]

கோட்சே காந்திஜியை பாராட்டியது

கோட்சேவின் வாக்குமூலம் காந்திஜியின் செயல்களை எதிர்க்கோணத்தில் இருந்து பார்ப்பதகவே இருந்தது. என்றாலும், கோட்சே கூறியது "நாட்டுக்காக காந்திஜி துன்பங்களை ஏற்றார் என்பதை அவர் ஏற்கத் தயாராக இருக்கிறார். அவர் மக்கள் மனதில் விழிப்புணர்வை கொண்டு வந்தார். அவர் தனது சொந்த ஆதாயத்திற்காக எதுவுமே செய்து கொள்ளவில்லை" என்று பாராட்டிக் கூறினார்.[4]

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாத்தூராம்_கோட்சே&oldid=3787676" இலிருந்து மீள்விக்கப்பட்டது