உள்ளடக்கத்துக்குச் செல்

நாடு அல்லது பிராந்திய வாரியாக விலங்குரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதரல்லா விலங்குகளின் உணர்திறன் மற்றும் துன்பத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்த உலகளாவிய சட்டங்கள். நீலம்: விலங்கு உணர்திறனுக்கான தேசிய அங்கீகாரம்; பச்சை: விலங்கு உணர்திறனுக்கான பகுதி அங்கீகாரம்1; மஞ்சள்: விலங்கு துன்பத்திற்கான தேசிய அங்கீகாரம்; இளஞ்சிவப்பு: விலங்கு துன்பத்திற்கான பகுதி அங்கீகாரம்2; சிவப்பு: விலங்குகளின் உணர்திறனுக்கும் துன்பத்திற்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் ஏதும் இல்லாமை; சாம்பல்: விவரம் தெரியவில்லை.
1 சில விலங்குகள் விலக்கப்பட்டுள்ளன; மன ஆரோக்கியம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது மற்றும்/அல்லது நாட்டிற்குள்ளேயே சட்டங்கள் மாறுபடும். 2 வளர்ப்பு/செல்லப்பிராணிகளை மட்டும் உள்ளடக்கியது.

விலங்குரிமை நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் பெரிதும் வேறுபடுகின்றது. இந்த உலகளாவிய மாறுபாடானது விலங்குரிமைச் சட்டங்கள் மனிதரல்லா விலங்குகளின் உணர்திறனை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதில் தொடங்கி விலங்கு நலனைக்கூடப் பொருட்படுத்தாமலும் எந்தவொரு வன்கொடுமை எதிர்ப்புச் சட்டங்களும் இல்லாமல் இருப்பது வரை பலதறப்பட்ட வகையிலும் காணப்படுகின்றன.

சுருக்கம்

[தொகு]

நவம்பர் 2019 நிலவரப்படி, 32 நாடுகள் மனிதரல்லா விலங்குகளின் உணர்திறனை முறையாக அங்கீகரித்துள்ளன. அவையாவன ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, சிலி, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நியூசிலாந்து, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளாகும்.

விலங்கு நலன் குறித்த உலகளாவிய பிரகடனம் (The Universal Declaration on Animal Welfare [UDAW]) என்பது விலங்குகளின் உணர்திறனை அங்கீகரிக்கவும், விலங்கு வன்கொடுமைகளைத் தடுக்கவும், விலங்குகளின் துன்பத்தைக் குறைக்கவும், விலங்குகளுக்கான நலன்புரி தரநிலைகளை நிறுவவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழியப்பட்ட உலகளாவிய முயற்சியாகும். இது பண்ணை விலங்குகள், செல்லப்பிராணிகள், அறிவியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் விலங்குகள், பொதி மற்றும் வேலை செய்யும் விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனித கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளுக்கும் பொருந்தும்.[1]

பெருங்குரங்கு திட்டம் (The Great Ape Project) எனப்படும் முன்னெடுப்பு தற்போது பெருங்குரங்கின வகை விலங்குகளைப் பற்றிய உலக பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இது மனிதரல்லா பெருங்குரங்கின வகை விலங்குகளுக்கு வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் சித்திரவதையைத் தடை செய்தல் உள்ளிட்ட மூன்று அடிப்படை நலன்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. உலகில் ஆறு நாடுகள் தற்போது அறிவியல் ஆராய்ச்சிக்காக பெருங்குரங்கின வலங்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன. மேலும் சிறிய குரங்கு வகை மீதான சோதனைகளைத் தடை செய்யும் உலகின் ஒரே நாடாக ஆஸ்திரியா விளங்குகிறது.

2009-ம் ஆண்டில், வட்டரங்கில் விலங்கு துஷ்பிரயோகம் மற்றும் தீங்கு விளைவிப்பதைத் தடை செய்த முதல் நாடாக பொலிவியா ஆனது.[2] உலகில் குதிரைகளை உண்பதற்காகக் கொல்வதைத் தடை செய்த ஒரே நாடாக ஐக்கிய அமெரிக்கா விளங்குகிறது. இந்தியா அதன் சில மாநிலங்களில் நுகர்வுக்காக பசுக்களைக் கொல்வதைத் தடை செய்துள்ளது.

பசு நேபாளத்தின் தேசிய விலங்கு ஆகும். பசுக் கொலை என்பது நேபாளத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

2014-ம் ஆண்டில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜைன யாத்திரைத் தலமான பாலிதானா நகரமானது சட்டப்பூர்வமாக உலகின் முதல் சைவ உணவு நகரமாக மாறியது. இங்கு இறைச்சி, மீன், முட்டை ஆகியவைகளை வாங்குவதும் விற்பதும் மட்டுமின்றி மீன்பிடித்தல் மற்றும் விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட மற்ற தொடர்புடய தொழில்களும் தடை செய்யப்பட்டுள்ளன.[3][4][5][6]

இவற்றையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. "Universal Declaration on Animal Welfare (UDAW)". Europa Regina (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-26.
  2. "The perfect storm: How the Bolivian Ban on Animal Circuses was won". Animal Defenders International (in ஆங்கிலம்). Retrieved 2019-11-04.
  3. "Culture / society | Worldcrunch - Real news. True sources. Seriously international". Archived from the original on 8 October 2014. Retrieved 7 November 2019.
  4. "In India, The World's First Vegetarian City" (in en-US). IndiaDivine.org. 2015-03-07 இம் மூலத்தில் இருந்து 2 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402163742/http://www.indiadivine.org/news/hinduism-in-the-news/in-india-the-worlds-first-vegetarian-city-r861. 
  5. "Jain monks want a ban on the sale of non-vegetarian food" (in en-GB). The Independent. 2014-07-06 இம் மூலத்தில் இருந்து 7 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220507/https://www.independent.co.uk/news/world/asia/the-vegetarian-town-they-wouldnt-hurt-a-fly-but-the-jains-upset-palitana-with-meatfree-plea-9588087.html. 
  6. van Popering, Ruben (2015). Jain Vegetarian Laws in the City of Palitana : Indefensible Legal Enforcement or Praiseworthy Progressive Moralism?. Linköping University, Department of Culture and Communication, Centre for Applied Ethics.

வெளியிணைப்புகள்

[தொகு]