நல்லத்தம்பி கலைச்செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லத்தம்பி கலைச்செல்வி (N Kalaiselvi) என்பவர் இந்திய அறிவியலாளரும் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் தற்போதைய தலைமை இயக்குநரும் ஆவார். இப்பதவியினை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையினையும் இவர் பெறுகின்றார்.[1]

இளமையும் கல்வியும்[தொகு]

கலைச்செல்வி இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர். கலைச்செல்வி இங்குள்ள தூய ஜோசப் நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும், பாளையங்கோட்டை காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார்.[2] திருநெல்வேலியில் பள்ளிக் கல்வியினை முடித்த இவர் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆய்வாளர் பணி[தொகு]

முனைவர் பட்ட ஆய்வினை முடித்து அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த கலைச்செல்வி, இந்த ஆய்வுக் கழகத்தின் ஆய்வு நிறுவனங்களுள் ஒன்றாக மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தின் இயக்குநராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். தற்பொழுது இந்திய அரசு இவரை இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் தலைமை இயக்குநராக நியமித்துள்ளது.

சாதனைகளும் விருதுகளும்[தொகு]

  • வருகை ஆய்வாளர் விருது, இந்திய தேசிய அறிவியல் கழகம், புது தில்லி, 1999
  • இளம் விஞ்ஞானி கருத்தரங்கு விருது (3 முறை) 1999, 2000 & 2001, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி
  • கொரியாவின் பிரைன் பூல் ஆய்வு விருது, (தென் கொரியா) 2003
  • ராமன் ஆய்வு விருது (அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், இந்தியா) 2009ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்விற்காக வழங்கப்பட்டது.
  • தென் கொரியாவிற்கு வருகை தரும் விஞ்ஞானிகளின் இந்திய தேசிய அறிவியல் கழகப் பரிமாற்றத் திட்டம்
  • பெங்களூர், பொருளறிவியல் சமூக பதக்கம், 2015
  • சி வி ராமன் மகளிர் அறிவியல் சாதனையாளர் விருது, 2019[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "N Kalaiselvi from Karaikudi becomes the first woman director general in CSIR". The Indian Express (in ஆங்கிலம்). 2022-08-07. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  2. "சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராக தமிழக பெண் விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  3. Narang, Gaurvi (2022-08-07). "Dr N. Kalaiselvi, known for her work on lithium-ion batteries, appointed first woman DG of CSIR". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.