நரசிம்மசுவாமி கோயில், சீபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீபி நரசிம்மசுவாமி கோயில்
சீபி நரசிம்மர்
இந்து கோயில்
Seebi Narasimha Swamy Temple
நரசிம்மசுவாமி கோயில் (1800 AD),சீபி, தும்கூர் மாவட்டம்
நரசிம்மசுவாமி கோயில் (1800 AD),சீபி, தும்கூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 13°31′50″N 77°00′05″E / 13.53056°N 77.00139°E / 13.53056; 77.00139
Countryஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம் தும்கூர் மாவட்டம்
தோற்றுவித்தவர்நல்லப்பா
அரசு
 • நிர்வாகம்தனியார் நிறுவனம்
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்http://seebikshetra.com/

நரசிம்ம சுவாமி கோயில்(Narasimha Swamy temple) இந்திய மாநிலமான கர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்தின் தும்கூர் வட்டத்தில் சீபி என்ற இடத்தில் அமைந்துள்ளது. தும்கூர் நகரிலிருந்து வடக்கே 20 கி.மீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4 இல் சீபி அமைந்துள்ளது.

வரலாறு மற்றும் புராணக்கதை[தொகு]

சீபியில் உள்ள நரசிம்மசுவாமி கோயிலின் நுழைவு மண்டபம்

புகழ்பெற்ற பிரித்தானிய அரசு காலத்தைச் சார்ந்த வரலாற்றாசிரியரும், கல்வெட்டு கலைஞருமான பி. லூயிஸ் ரைஸின் கூற்றுப்படி, பின்வரும் புராணக்கதை கூறப்படுகிறது. ஒரு காலத்தில், காளைகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் தானியங்களை ஏற்றிச் செல்லும் ஒரு வணிகர் சீபியில் தனது வண்டியை நிறுத்தி, பகல் உணவிற்காக, ஒரு பானை தானியத்தை அங்கிருக்கும் பாறையில் வேகவைத்தபோது, தானியத்தின் நிறம் இரத்த சிவப்பு நிறமாக மாறியது எனவும், இதனால் வணிகர், அவரது உதவியாளர்கள் மற்றும் எருமைகள் மூர்ச்சையடைந்தன எனவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தபோது, நரசிம்ம கடவுள் வணிகரின் கனவில் தோன்றி, பாறை அவரது தங்குமிடம் என்றும், அந்த வணிகர் தனது இருப்பிடத்தை இழிவுபடுத்தியதற்கு பரிகாரமாக, அந்த இடத்தில் அவருக்காக ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்ததாக நம்மப்படுகிறது. அதனால், ஒரு சிறிய கோயில் வணிகரால் கட்டப்பட்டது. மிக சமீபத்திய காலங்களில்,மைசூர் இராச்சியம், திப்பு சுல்தான் நீதிமன்றத்தில் திவானாக பணிபுரிந்த கச்சேரி கிருஷ்ணப்பாவின், மூன்று மகன்களான லட்சுமிநரசப்பா, புட்டண்ணா மேலும் நல்லப்பா ஆகிய மூன்று செல்வந்த சகோதரர்களால் முன்பே இருந்த சன்னதிக்கு மேல் ஒரு பெரிய கோயிலின் பிரதிஷ்டை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நல்லப்பாவுக்கு ஒரு கனவு வந்ததாகவும், அதில் நரசிம்ம கடவுள் இங்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டால் அவருக்கு நித்திய மகிழ்ச்சியை அளிப்பார் என்றும் கதை கூறப்படுகிறது. கோவில் கட்டுமானப் பணிகள் முடிவடைய பத்து ஆண்டுகள் ஆனது. நரசிம்ம சுவாமி கோயில் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட எளிய மற்றும் நேர்த்தியான திராவிட கட்டிடக்கலை அமைப்பு ஆகும். கோயிலின் முக்கிய தெய்வம் நரசிம்மர், இந்து கடவுளான விஷ்ணுவின் அவதாரம் ஆகும். [1] [2] [3]

கட்டிடக்கலை மற்றும் சுவரோவியங்கள்[தொகு]

நுழைவாயிலுக்கு மேலே உள்ள கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது மற்றும் கோயிலில் ஒரு பெரிய பிரகாரம் (எல்லை சுவர்) உள்ளது, இது ஒரு பெரிய நீளமான முற்றத்தை உருவாக்குகிறது. இங்குள்ள திறந்த மண்டபம் வழியாகச் சென்றால், தெய்வ சன்னதிகளுடன் கூடிய மண்டபத்திற்கு (அல்லது நவரங்கா ) இட்டுச்செல்கிகிறது. இது பல இந்து தெய்வங்களுக்கான சிறிய சன்னதிகளைக் கொண்டுள்ளது. இங்கு, ராமர், அம்பேகால் கிருஷ்ணா, ஸ்ரீரங்கநாதர், ( சயன நிலையில் இருக்கும் விஷ்ணுவின் ஒரு வடிவம்), நரசிம்மர் (சிங்கத்தின் தலையுடன் விஷ்ணு ), விநாயகர் மற்றும் சப்தகன்னியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளது. [1]

முக மண்டபம்[தொகு]

கோயிலின் முக்கிய பகுதியாக உள்ளமுகமண்டபம் எனப்படும் நுழைவு மண்டபத்தின் மேற்புரத்திலும், பக்கவாட்டுச் சுவர்களிலும் உள்ள சுவரோவிய ஓவியங்கள், இந்து மத கருப்பொருள்களான புராணங்களின் காட்சிகள் (காவியங்கள்); பாகவதம், நரசிம்ம புராணம், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றைச் சித்தரிக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள தாரியா தெளலத் பாக் சுவரோவியங்களில் காணப்படும் அதே கலை பாணியை இந்த சுவரோவியங்கள் பின்பற்றுகின்றன.

வரலாற்று ஆசிரியர்களின் கருத்து[தொகு]

விமர்சகர் வீணா சேகர் கருத்துப்படி, சுவரோவிய ஓவியங்களின் கலை கர்நாடகாவுக்கு குடிபெயர்ந்தது எனவும், இந்த கோவிலில் உள்ள சுவரோவியங்கள் "நாட்டுப்புற" தன்மை கொண்டவை எனவும் அறியப்படுகிறது. [1] [4] கலை வரலாற்றாசிரியர் ஜார்ஜ் மைக்கேலின் கூற்றுப்படி, இந்த கோயிலின் சுவரோவியங்கள் மைசூர் இராச்சிய காலத்தில் மிகச் சிறந்தவையாகவும், மேலும், அரச ஊர்வலங்களை சித்தரிக்கும் நீதிமன்ற ஓவியங்கள் ஒரு முகலாய அரசின் செல்வாக்கை வெளிப்படுத்துகின்றனவாகவும் உள்ளது என அறியப்படுகிறது. [5]

ஓவிய கருப்பொருள்கள்[தொகு]

சுவர்கள் மற்றும் கூரையில் உள்ள சுவரோவியங்கள் மூன்று வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: முதல் வரிசையில் கிருட்டிணன் கடவுளின் கிருஷ்ண லீலாவை சித்தரிக்கிறது, இரண்டாவது வரிசையில் மகாராஜா மூன்றாம் கிருட்டிணராச உடையார் நீதிமன்றத்தில் நல்லப்பாவுடன் (திவான் கிருஷ்ணப்பாவின் மகன்களில் ஒருவர்) இருந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வரிசையில் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோருடன் கச்சேரி கிருஷ்ணப்பா, மற்றும் ராவணப்பா மற்றும் வெங்கடப்பா (உயர் பதவிகளை வகித்த நல்லப்பாவின் தாய்வழி மாமாக்கள்)ஆகியோர் கலந்து கொண்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

வீணா சேகரின் கூற்றுப்படி, ஓவிய பாணியை அடிப்படையாகக் கொண்டு, மகாராஜா மூன்றாம் கிருஷ்ணா ராஜா வோடியாரின் (ஹைதர் மற்றும் திப்பு சுல்தான் இறந்த பிறகு ஆட்சி செய்தவர்) உருவப்படம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. [1]

பிரதான நுழைவாயிலின் மண்டபத்தின் உச்சவரம்பில் ஒரு சுவரோவியம் உள்ளது. அதில் கடவுள் கிருஷ்ணர் தன் நண்பர்களுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டுவது போல உள்ளது. சுவரின் உச்சவரம்பில் தலா நான்கு விட்டங்கள் உள்ளன. அவற்றில், முதலாவது சவாரி இல்லாத குதிரைகளை சித்தரிக்கின்றன, அதைத் தொடர்ந்து யானைகள் உள்ளன; இரண்டாவதாக குதிரைவீரர்கள் கூம்புத் தொப்பிகளை அணிந்துகொள்கிறார்கள் (விஜயநகர காலத்தில் பொதுவானது) சில குதிரைவீரர்களுடன் கூடிய குதிரைகள், மற்றவர்கள் கொடிகளை ஏந்தியபடியும், மேலும் ஒரு சிலர் கால்நடையாக நடந்து வருவது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது; மூன்றாவது வரிசையில், குதிரைவீரன், சிலர் சவாரி செய்கிறார்கள், மற்றவர்கள் கால்நடையாகவும் வருவது போன்று வரையப்பட்டுள்ளது. யானைகள் மற்றும் பீரங்கிகளை ஏற்றிச் செல்லும் வண்டியும் காணப்படுகிறது. இந்த சுவரோவியங்கள் ஹம்பியில் உள்ள விருபக்ஷா கோயிலிலும், ஹோலல்கண்டியில் உள்ள சித்தேஸ்வரர் கோயிலிலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட கட்டுமானத்துடன் ஒப்பிடப்படுகின்றன. [3]

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Alluring mural paintings of Seebi". Mamatha B.R. The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  2. Rice B.L. (1887), pp196-197, Mysore: A Gazetteer Compiled for Government - vol 2, Asian Educational Services, ISBN 81-206-0977-8
  3. 3.0 3.1 Michell, George (1995), p228, Architecture and Art of Southern India: Vijayanagara and the Successor States 1350-1750, Chapter:Paintings, Cambridge University Press, ISBN 0-521-44110-2
  4. Miller, Sam (2012), Karnataka: Chapter from Blue Guide India, Chapter: North Bangalore, Section: Sibi and Sira, Blue Guides,, ISBN 978-1-905131-53-2
  5. Michell, George (2013), Southern India: A Guide to Monuments Sites & Museums, Chapter: Karnataka, Section: Bengaluru, Sub-section: Sibi, Roli Books Private Limited, ISBN 978-81-7436-920-8

வெளி இணைப்புகள்[தொகு]