நரசிங்கம்பேட்டை நாகசுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசிங்கம்பேட்டை நாகசுரம் என்பவை தமிழ் நாட்டில் உள்ள நரசிங்கம்பேட்டையில் தயாரிக்கப்படும் நாதசுவரத்தைக் குறிப்பன.[1] இந்திய ஒன்றிய அரசு 2022 ஆண்டு புவிசார் குறியீடாக இதை ஏற்றுக்கொண்டது.

வரலாறு[தொகு]

தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 ஆம் நூற்றாண்டு முதல் நாகசுவரம் இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1955 ஆண்டுக்கு முன்பு பிரதி மத்திமம் சுவரம் கொண்டு நாகசுவரத்தில் இராகங்கள் வாசிக்கப்பட்டன. 1955இல் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்த இரங்கநாத ஆச்சாரி என்ற தச்சுக் கலைஞர் சுத்த மத்திமம் சுவரம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப நாகசுவர கருவியில் மாற்றங்களைச் செய்து உருவாக்கினார். இந்த புதிய இசைக்கருவி இசைக்க எளிதானதாக இருந்தது.

டி. என். ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் போன்ற புகழ்பெற்ற நாகசுவரக் கலைஞர்கள் நரசிங்கம்பேட்டை நாகசுரத்தை வாசித்துள்ளனர்.[2]

தயாரிப்பு[தொகு]

நரசிங்கம்பேட்டை நாகசுரமானது ஆச்சா மரங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. பழைய வீடுகளின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய மரங்களைக் கொண்டு இது செய்யப்படுகிறது. இரண்டரை அடி நீள மரத்துண்டை வெட்டி, அதை உள்ளே கடைந்து துளையிட்டு, மேலே 12 துளைகளை கவனமுடன் இ்ட்டு செய்யப்படுகிறது. முதலில் குழல் பாகமும், பின்னர் அணசு பாகமும் செய்வர். நரசிங்கம்பேட்டையில் சுமார் 15 குடும்பத்தினர் இதை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புவிசார் குறியீடு[தொகு]

2014ஆம் ஆண்டு சனவரி 31 புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அதனை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு 2022 ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீடு அளித்து அங்கீகரித்தது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிமை?". BBC News தமிழ். 2014-02-17. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
  2. "நரசிங்கம்பேட்டை நாகசுரத்துக்கு புவிசார் குறியீடு!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
  3. "நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான சான்று வழங்கல்: சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தகவல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.