நன்னூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நன்னூல் வகைப்பாடு 1
நன்னூல் வகைப்பாடு 2
நன்னூல் வகைப்பாடு 3

நன்னூல், தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலையும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப் பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் நிகழ்ந்த தமிழியல் பார்வை இஃது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.[1]

நன்னூல் பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கண நூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும் ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும் எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக் கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிரம் குறிப்பிடுகிறது.

நூலின் பகுதிகள்[தொகு]

நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந்நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். ஆயினும் தற்போதுள்ள நன்னூலில் இடம்பெற்று இருப்பவை,

  1. பாயிரம் - 55 நூற்பாக்கள்
  2. எழுத்ததிகாரம் - 202 நூற்பாக்கள்
  3. சொல்லதிகாரம் - 205 நூற்பாக்கள்

மூன்று பகுதிகளை கொண்டுள்ள நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 7 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாயிரம்[தொகு]

நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் வைக்கும் முறையைப் பற்றி பேசுவது பாயிராமாகும். பாயிரத்திற்குரிய ஏழு பெயர்கள்:

  1. முகவுரை-நூலுக்கு முன் சொல்லப்படுவது.
  2. பதிகம்-ஐந்து பொதுவாகவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருட்களையும் தொகுத்து சொல்வது.
  3. அணிந்துரை
  4. புனைந்துரை - நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரிக்கும் சொல்வது.
  5. நூன்முகம்-நூலுக்கு முகம் போல முற்பட்டிருப்பது.
  6. புறவுரை-நூலில் சொல்லியப் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே சொல்வது.
  7. தந்துரை- நூலில் சொல்லியும் பொருள் அல்லாதவற்றை நூலின் புறத்திலே தந்து சொல்வது.

சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்ய வேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.[2][3][4][5]

எழுத்து
எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துகள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துகள் மொழிமுதலாக வரா எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை [6] மாற்றி வரும் [7] எனக் காட்டுகிறார்.
சொல்
தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
  • தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.[8]

பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்[தொகு]

  1. நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  2. ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  3. பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  4. மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
  5. பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)

எழுத்ததிகாரம்[தொகு]

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

  1. எழுத்தியல் - 72 நூற்பாக்கள்
  2. பதவியல் - 23 நூற்பாக்கள்
  3. உயிரீற்றுப் புணரியல் - 53 நூற்பாக்கள்
  4. மெய்யீற்றுப் புணரியல் - 36 நூற்பாக்கள்
  5. உருபு புணரியல் - 18 நூற்பாக்கள்

இவ் எழுத்ததிகாரத்தில் மொத்தம் 202 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

சொல்லதிகாரம்[தொகு]

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

  1. பெயரியல் - 62 நூற்பாக்கள்
  2. வினையியல் - 32 நூற்பாக்கள்
  3. பொதுவியல் - 68 நூற்பாக்கள்
  4. இடையியல் - 22 நூற்பாக்கள்
  5. உரியியல் - 21 நூற்பாக்கள்

இச் சொல்லதிகாரத்தில் 205 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு.4 -ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
  2. நூல் 3-639 முதல் 643
  3. நூலின் உரை 3-644 முதல் 655
  4. உத்தி 656
  5. இவை பிற்காலச் சேர்க்கை என்னும் கருத்து உண்டு.
  6. சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
    அ, ஐ, ஔ, எனும் மூன்று அலங்கடையே (தொல்காப்பியம் 1-62)
  7. பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய
    ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் (நன்னூல் 102)
  8. இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள் முதலான பொருள்-துறை நூல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலம் அது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னூல்&oldid=3781251" இலிருந்து மீள்விக்கப்பட்டது