நடராசபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடராசப் பத்து, சிதம்பரம் நடராசர் மீது சிறுமணவூர் முனுசாமி என்பவரால் பாடப்பட்டது. விருத்த வகையைச் சேர்ந்த பத்துப் பாடல்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. இப்பாடல்கள், "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என முடிவதாக அமைந்துள்ளன. இப்பாடல்களை இயற்றிய முனுசாமி முதலியார், திருவள்ளூர் தாலுக்காவில் தற்போது சிறுமணைவை என வழங்கப்படும் ஊரிலே சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு நடராசர் அடியவராவார்.

முதலாவது பாடல் 'மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ' என ஆரம்பிக்கின்றது. கீழேயுள்ள இரண்டாவது பாடல் நடராசர் நடனமாடும்போது புல்லிலிருந்து கடல் வரை எவையெல்லாம் ஆடுகின்றன என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கைசிவ காமி யாட
மாலாட நூலாட மறையாட திரையாட
மறைதந்த பிரம்ம னாட
கோனாட வானுலகு கூட்டமெல் லாமாட
குஞ்சர முகத்த னாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட
குழந்தை முருகேச னாட
ஞானசம் பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகரு மாட
நரைதும்பை யருகாட நந்திவா கனமாட
நாட்டியப் பெண்க ளாட
வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை
விருதோடி ஆடிவரு வாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லை வாழ்நட ராசனே

வெளியிணைப்புகள்[தொகு]

நடராச தீட்சிதர் வலைப்பதிவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடராசபத்து&oldid=3846947" இலிருந்து மீள்விக்கப்பட்டது