த. ஆனந்தமயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. ஆனந்தமயில்
பிறப்புநவம்பர் 08, 1947
கரவெட்டி
இறப்புமார்ச் 11,2012
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்தம்பிப்பிள்ளை, வள்ளியம்மை
உறவினர்கள்மனைவி நகுலேஸ்வரி

த. ஆனந்தமயில், (நவம்பர் 08, 1947 - மார்ச் 11,2012) ஒரு ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகங்கள், மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று காலமானார்.

இளமையும், கல்வியும்[தொகு]

ஆனந்தமயில், யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தம்பிப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம், பொலிகண்டியில் வசித்து வந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், மற்றும் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று கலைமாணிப் பட்டம் பெற்றார்.

குடும்பம்[தொகு]

மனைவி நகுலேஸ்வரி, பிள்ளைகள் தீபவர்ணன், தாமரைவர்ணன், நிரூபவர்ணன்(மறைவு), நித்திலவர்ணன், ரூபவர்ணன், ஜீவவர்ணன், முல்லைத்திவ்யன், வர்ணாம்பாள்

தொழில்[தொகு]

எழுதுவினைஞராக பணிபுரிந்தார். கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய கல்வித்திணைக்களங்களிலும் பணியாற்றினார். இறுதியாக பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திலும் கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திலும் பணியாற்றினார்.

எழுத்துப்பணி[தொகு]

ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் ஒற்றைக்கால்கோழி, முருகைக்கற்பூக்கள், காக்காச்சி கரிமகளே, திருவிழா, ஓர் எழுதுவினைஞனின் டயறி, வாழும் வெளி, ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது, கொலுமீட்பு, விதி, கலை வந்தபோது, விளக்கீடு ஆகிய 12 சிறுகதைகள் உள்ளன. “சோகம் நிரம்பி யாத்திரை” என்ற சிவனெளிபாதமலை பயணம் பற்றி இவர் எழுதிய சிறுகதை அச்சுருப்பெறாத நிலையில் தொலைந்துவிட்டது.

‘வீச்சுவலைக்காரனும் மாதுளம் பிஞ்சுகளும்’ என்ற அச்சுருப்பெறாத கவிதைத்தொகுதியும், தொகுக்கப்படாத பல கவிதைகளும் உள்ளன. இவை இன்னமும் நூலுருப் பெறவில்லை.

இவர் ‘அம்மாவரை அவன்’ என்ற குறுநாவலை எழுதியுள்ளார். இது 2012 இல் வெளிவந்த “நினைவிலிருந்து சொற்களுக்கு” என்ற தொகுப்பில் உள்ளது.

இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, ‘எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. செல்லச்சாமியின் ‘விடுதலைக்கோர் பார்வை’ என்ற நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்தார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

  • இவருடைய ஒரு எழுதுவினைஞனின் டயறி என்ற சிறுகதைத் தொகுதி 2008 இல் வடக்கு மாகாண சிறந்த நூலுக்கான விருது மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது ஆகியவைகளைப் பெற்றது.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • ஒரு எழுதுவினைஞனின் டயறி (வர்ணா வெளியீடு - மார்ச் 2008)
  • நினைவிலிருந்து சொற்களுக்கு… (ஏப்ரல் 2012)

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஆனந்தமயில்&oldid=3247134" இலிருந்து மீள்விக்கப்பட்டது