தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்

குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம் என்பது தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும்.

இந்த அருங்காட்சியகமானது குற்றாலத்தின், பேருந்து நிலையத்தில் இருந்து பிரதான அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கொச்சம்பட்டி சத்திரம் எனும் கட்டிடத்தில், தொல்லியல்துறையால் வைக்கப்பட்டுள்ளது. இந்த அகழ் வைப்பகத்தில், பழைய திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்களும், குற்றாலம் அருகில் உள்ள அழுதகண்ணியாறு, திருமலாபுரம், செந்தட்டியாபுரம், சாயர்புரம் போன்ற ஊர்களில் சேகரிக்கப்பட்ட நுண்கற்காலக் கருவிகளும், தென்காசி ஆசாத் நகர், கீழ ஆம்பூர் ஆகிய பகுதிகளில் சேகரிக்கப்பட்ட புதிய கற்காலக் கருவிகளும், பெருங்கற்கால பொருட்களும், அக்கால மக்கள் சமூகத்தவர்களின் கல், இரும்பு ஆயுதங்கள், சிலைகள், உருவாரங்கள், மரச் செதில்கள் மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு ஈமத்தாழிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]

ஆண்டிப்பட்டியில் சேகரிக்கப்பட்ட 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் பொம்மைகள், தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் கோபுரத்தை புதுப்பிக்கும்போது கிடைத்த சுதைச் சிற்பங்கள், கல்லூரணியில் சேகரிக்கப்பட்ட 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தேசத்து களிமண் பெண் உருவம், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இருந்து சேகரிக்கப்பட்ட பித்தளையால் ஆன கால் சிலம்புகள், பாண்டியர் காலத்து செப்பேடு, மருத்துவக் குறிப்புகளைக் கொண்ட ஓலைச் சுவடிகள், இராமாயண ஓவியச் சுவடி போன்ற சுவடிகளும், கோயில்களில் பயன்படுத்தப்படும் விசிறி, குடை, சாமரம், ஆலவட்டம் ஆகியவையும், கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழி முதல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பீரங்கிக் கல் குண்டுகள், பூலித் தேவன் பயன்படுத்திய கவண் கற்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகமானது குற்றால மலைப்பகுதிகளிலுள்ள வேடர் மற்றும் பழங்குடிகள் ஆகியவர்களின் வரலாற்றை ஆய்வதற்கு முதன்மையாக நிறுவப்பட்டது. இதனால் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய மர உரல், தேன் குடுவை, வில், எலிப்பொறி, மரத்தால் ஆன கொண்டை ஊசி, என காண அரிதான பழங்குடி மக்களின் பல்வேறு பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [2]

ஆற்றுவெளி நாகரிகம்[தொகு]

அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், குறுனிக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[3]

படக்காட்சியகம்[தொகு]

குற்றாலம், தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள சில தொன்மை வாய்ந்த படிமங்கள்:

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Folk Arts Museum, Courtallam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்". தமிழக தொல்லியல் துறை. p. 1. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2012.
  2. த.அசோக் குமார் (26 சூன் 2017). "மாதத்தில் பாதி நாட்கள் பூட்டிக் கிடக்கும் அகழ்வைப்பகம்: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2017.
  3. இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988–89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 மே 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-17.{{cite web}}: CS1 maint: unfit URL (link)