தொல்காப்பியம் நூன்மரபுச் செய்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியத்தின் 3 அதிகாரங்களில் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம். எழுத்ததிகாரத்தில் முதலாவது இயல் நூன்மரபு. நூல் எழுத்து வடிவில் உள்ளது. எனவே நூல் என்பது எழுத்தைக் குறிக்கும். (ஆகுபெயர்) எழுத்தின் மரபு பற்றிக் கூறுவதால் இந்த இயல் நூன்மரபு எனப்பட்டது. இவ்வியலில் முப்பத்திமூன்று நூற்பாக்கள் காணப்படுகின்றன.

எழுத்து என்றாலே அது முதலெழுத்தைக் குறிக்கும். இவை 30 (உயிரெழுத்து 12 & மெய்யெழுத்து 18) இவை எந்தச் சார்பும் இல்லாமல் தனித்து ஒலிக்கக்கூடியவை. சார்பெழுத்துகள் மொழியைச் சார்ந்து வரும்போதுதான் தன் ஒலிப்பைப் புலப்படுத்தும்.

எழுத்தின் இனம்[தொகு]

மரபுவழி அடுக்காகிய தமிழ் நெடுங்கணக்கு, இனப்பாகுபாடுகள், ஒன்றோடொன்று மயங்கும் நிலை முதலானவை இந்த இயலில் கூறப்பட்டுள்ளன. உயிரெழுத்துகள் குறில், நெடில் என மாத்திரை நோக்கில் இனப்படுத்தப்பட்டுள்ளன. மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பொருளைப் புலப்படுத்தும் சுட்டெழுத்துகள், வினாவெழுத்துகள் இடைச்சொல்-எழுத்துகள் சுட்டப்பட்டுள்ளன. மக்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் மயங்குவது போல எழுத்துகள் ஒன்றோடொன்று மயங்கும் எழுத்து மயக்கம் மரபியல் கண்ணோட்டத்தில் வகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தொல்காப்பிய காலத்துக்கு முந்திய மரபுநெறி என்பதை இந்த இயலுக்குச் சூட்டப்பட்டுள்ள 'நூல்-மரபு' என்னும் பெயராலும், 'என்ப' என முன்னோரைச் சுட்டிச் சொல்லும் குறிப்பு இந்த இயலில் மட்டுமே ஆறு இடங்களில் வருவதாலும் அறியலாம்.

எழுத்துகளின் தொகுப்புக் குறியீட்டுப் பெயர்[தொகு]

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ - என்னும் பன்னிரண்டும் உயிரெழுத்து.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - என்னும் பதினெட்டும் மெய்யெழுத்து.
மெய்யெழுத்துகளைப் புள்ளி இட்டு எழுதுவர். ஒலிக்கும்போது புள்ளி இல்லா எழுத்தாக்கிக்கொண்டு ஒலிப்பர்.

குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துகள்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

அ, இ, உ மூன்றும் சுட்டெழுத்து. (அவன், இவன், உவன்) (அவன் - கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இருப்பவன், இவன் - கண் முன் இருப்பவன், உவன் - கண்ணுக்கு எட்டிய தூரத்தில் புலப்படாமல் இருப்பவன்)

ஆ, ஏ, ஓ - மூன்றும் வினா எழுத்து. (அவனா, அவனே, அவனோ செய்தான்) (எவன் என்னும் சொல் தொல்காப்பியர் காலத்தில் ஏன் என்னும் பொருளில் கையாளப்பட்டது.)

  • எழுத்துப் பெயர்களின் அகரவரிசை
அளபெடை, ஆய்தம், இடையெழுத்து, உயிரெழுத்து, எழுத்து(முதலெழுத்து), குற்றியலிகரம், குற்றியலுகரம், குற்றெழுத்து, சார்பெழுத்து, சுட்டெழுத்து, நெட்டெழுத்து, மெய்யெழுத்து, மெல்லெழுத்து, வல்லெழுத்து, வினாவெழுத்து

எழுத்துகளின் உருவம்[தொகு]

மெய்யெழுத்து புள்ளியிட்டு எழுதப்படும்.

எ, ஒ ஆகிய இரண்டும் புள்ளி பெறும்.

(வீரமாமுனிவர் எ, ஏ என்றும், ஒ, ஓ என்றும் எழுதும் இக்காலத்தில் பயன்பாட்டுச் சீர்திருத்த வடிவத்தைச் செய்தார்.)

சார்பெழுத்துகளாகிய குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய எழுத்துகளும் புள்ளியிட்டு எழுதப்படும்.

மகரக்குறுக்கம் உள்ளே புள்ளி பெறும். (ம் எழுத்தில் முன்பே புள்ளி உள்ளது. ம் எழுத்தின் அரைமாத்திரை கால்மாத்திரையாகக் குறையும்போது புள்ளியை ம்-க்குள்ளே வைத்தனர்)

புள்ளி இல்லாமல் எழுதப்படும் மெய்யெழுத்து உயிர்மெய் அகர-உயிர் ஏறிய எழுத்தாக மாறிவிடும். ஏனைய உயிரெழுத்துகள் மெய்யெழுத்தோடு இயையும்போது திரிந்த உருவம் பெறும்.

எழுத்துகளின் ஒலியளபு(மாத்திரை)[தொகு]

('முருகன்' என்று சொல்லிப்பார்ப்போம். இது மூன்றரை மாத்திரைக் கால அளவில் ஒலிக்கப்படுகிறது. 'நல்லன்' என்று சொல்லிப்பார்ப்போம். இது மூன்று மாத்திரைக் கால-அளவில் ஒலிக்கப்படுகிது.)
(படித்துக்கொண்டிருக்கும்போதே கண்ணிமை நொடிக்கிறது. இந்தச் சொடிப்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை.)

இப்படிக் கண்ணின் இமை நொடிக்கும் காலத்தை ஓர் 'அளபு' என்று கொண்டு அதனை 'மாத்திரை' என்று குறிப்பிடலாயினர்.

குறில் எழுத்துக்கு ஒரு மாத்திரை. நெடில் எழுத்துக்கு இரண்டு மாத்திரை. எந்த எழுத்தும் மூன்று மாத்திரை ஒலிக்காது. எழுத்துக்கு மாத்திரை கூடவேண்டும் என்று கருதினால் கூடவேண்டிய அளபுள்ள எழுத்தைக் கூட்டி எழுதிக்கொள்ளவேண்டும். (உயிரளபெடை, ஒற்றளபெடை)

மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்துகளுக்கு அரைமாத்திரை. மகரக்குறுக்கத்துக்குக் கால்மாத்திரை.

உயிர்மெய்[தொகு]

உயிர்மெய் எழுத்து ஒலிக்கப்படும்போது மெய்யொலி முதலில் தோன்றி அதன் வழியை உயிரொலி தொடரும்.

நரம்பின்மறை[தொகு]

நரம்பு என்பது யாழ். யாழிசை பற்றிய நூல் நரம்பின்மறை. யாழிசைக்கு ஏற்ப இசை பாடும்போது எழுத்தின் மாத்திரை சொல்லப்பட்ட அளபெல்லையை மீறும். உயிரெழுத்துக்கு மட்டுமல்லாமல் ஒற்றெழுத்துகளுக்கும் மாத்திரை நீளும். இப்படி இசை நீடும் என்று புலவர்கள் கூறுவர் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

மெய்யெழுத்துகளின் உடனிலை மயக்கம்[தொகு]

எல்லா மெய்யெழுத்துகளும் எல்லா மெய்யழுத்துகளோடும் இணைந்து நிற்பதில்லை. இன்ன மெய்யெழுத்து இன்ன மெய்யெழுத்தோடுதான் இணைந்து நிற்கும், இன்ன மெய்யெழுத்தோடு இணைந்து நிற்காது - என்பது இப்பகுதியில் சுட்டப்படுகிறது.

('செய்கிறான்' என்னும் சொல்லில் ய், க் ஆகிய இரண்டு மெய்கள் உடனின்று மயங்கியுள்ளன. அதே பொலச் 'செய்வான்' என்பதில் ய், வ் ஆகிய இரண்டு மெய்கள் உடனின்று மயங்கியுள்ளன. இப்படி இந்த உடனிலை மெய்ம்மயக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டும்.)

ட், ற், ல், ள் ஆகிய மெய் முன் க, ச, ப மூன்றும் மயங்கும்.

காட்டு - பெரும்பான்மை இளம்பூரணர் உரையைத் தழுவியவை:
கேட்க, கற்க, செல்க, கொள்க
கட்சிறார்(= கண்ணோட்டம் உள்ள சிறுவர்), கற்சிறார்(= கற்கும் சிறுவர்). செல்சிறார், கொள்சிறார்.
கட்ப, கற்ப, செல்ப, கொள்ப

ல், ள் ஆகிய ஆகிய மெயம்முன் ய, வ தோன்றும்.

கொல்யானை, வெள்யானை
கோல்வளை, வெள்வளை

ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய மெய்ம்முன் அதன் இனவெழுத்து மயங்கும்.

தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று.

ண், ன் ஆகிய மெய்ம்முன் க, ச, ஞ, ப, ம, வ, ய ஆகிய ஏழும் மயங்கும்.

வெண்கலம், புன்கண்(= இரக்கம் - "புன்கணீர் பூசல் தரும்" - திருக்குறள்)
வெண்சாந்து, புன்செய்
வெண்ஞான்(வெள்ளி அரைஞான் கயிறு), பொன்ஞான்
வெண்பனி, பொன்படு நெடுவரை
வெண்மாலை, பொன்மாலை
மண்யாது, பொன்யாது
மண்வலிது, பொன்வலிது

ஞ், ந், ம், வ் முன்னர் ய நிற்கும்.

உரிஞ்யாது(உரிஞ் = தோல்), பொருந்யாது (பொருந் = முதுகு), திரும்யாது(திரும் = திருகாணி), தெவ்யாது(தெவ் = பகை)

ம், வ மயங்கும்

நிலம்வலிது

ய், ர், ழ் முன்னர் மொழிமுதல் ஒன்பது மெய்யும், ங எழுத்தும் உடனிற்கும்.

வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது (வீழ் = விழுது)
வேய்சிறிது, வேர்சிறிது, வீழ்சிறிது,
வேய்தீது, வேர்தீது, வீழ்தீது,
வேய்பெரிது, வேர்பெரிது, வீழ்பெரிது,
வேய்ஞான்றது, வேர்ஞான்றது, வீழ்ஞான்றது,
வேய்நீண்டது, வேர்நீண்டது, வீழ்நீண்டது,
வேய்மாண்டது, வேர்மாண்டது, வீழ்மாண்டது,
வேய்யாது, வேர்யாது, வீழ்யாது,
வேய்வலிது, வேர்வலிது, வீழ்வலிது,
வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம், (ஙனம் = படி - துணைப்பெயர், ஒப்புநோக்குக - இங்ஙனம்)

ர, ழ

ர், ர இணைவதில்லை.
ழ், ழ இணைவதில்லை.
ர், ழ இணைவதில்லை.
ழ், ர இணைவதில்லை.

தன் மெய்யோடு தான் மயங்கும்

காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, பண்ணை, தத்தை, வெந்நோய், அகப்பை, அம்மா, வெய்யர், எல்லி (= கதிரவன்), எவ்வி (பீச்சுகுழல்), கொள்ளி, கொற்றி, கன்னி

எந்த எழுத்தும் தன்னைச் சுட்டுவதாயின் இணையும்.

யரழ என்னும் புள்ளி

வெளி இணைப்புகள்[தொகு]