தேர்தல் பத்திரத் திட்டம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேர்தல் பத்திரத் திட்டம் (Election Bond Scheme), அரசியல் கட்சிகள் ரொக்க நன்கொடைகளை பெறுவதை தவிர்த்து வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் தேர்தல் பத்திரத் திட்டதை இந்திய அரசு சனவரி, 2018-இல் அறிமுகப்படுத்தியது.[1] இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 29ஏ-இன் படி, பொதுமக்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ், இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறலாம். இதற்கு வசதியாக, இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை, இந்திய அரசு சனவரி, 2018-இல் நடைமுறைபடுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறப்படும் ரொக்கப் பரிவர்த்தனைகள் தடைசெய்யப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை கிளைகளில் மட்டும் விற்கப்படுகிறது.[2] தேர்தல் பத்திரம் விற்பனை செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லத் தக்கது. தகுதியான எந்த அரசியல் கட்சியும் நன்கொடையாகப் பெற்ற பத்திரத்தை வங்கியில் டெபாசிட் செய்தவுடன் அதே வங்கியில் அக்கட்சி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் அதே நாளில் சேர்க்கப்பட்டுவிடும். கெடு தேதி முடிந்த பிறகு வங்கியில் பத்திரத்தை டெபாசிட் செய்து நிதியைப் பெற இயலாது. இத்திட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.[3]

தேர்தல் பத்திர திட்டத்தின் கீழ் நன்கொடை வழங்கும் நடைமுறைகள்[தொகு]

  • தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் நன்கொடை பெற, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பதிவான மொத்த வாக்குகளில் 1% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு காலாண்டின் முதல் பத்து நாட்கள் வரை ரூபாய் 1,000, 10,000, ஒரு இலட்சம், 10 இலட்சம், 1 கோடி மதிப்பில் வெளியிடும் தேர்தல் பத்திரங்களை வாங்கிய 15 நாட்களுக்குள், அப்பத்திரங்களை தங்களுக்கு வேண்டிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேர்தல் பத்திரங்களில் அதனை வாங்கியவர் பெயர் இடம்பெறாது. [4]
  • இந்தியக் குடிமகன், தொழில் அதிபர்கள், வணிகர்கள், இந்தியத் தொழில் அல்லது வணிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கலாம்.
  • தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் தில்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா கிளைகளில் மட்டுமே வாங்க முடியும.
  • தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடையை தெரிவிக்க வேண்டும்.
  • தேர்தல் பத்திரம் வாங்கிய நாளிலிருந்து 15 நாட்களுக்குள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்காத பத்திரங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வாங்கிய பத்திரங்கள் கெடு தேதிக்குள் வங்கியில் செலுத்தாமல் இருப்பின் அவைகள் செல்லாது போய்விடும்.

தேர்தல் பத்திரம் குறித்த வழக்கு[தொகு]

2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை வாங்கும் நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தேர்தல் பத்திர திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தேர்தல் பத்திர திட்டம், கருப்பு பணப் புழக்கத்திற்கு வழி வகுக்கும். குறிப்பாக, ஆளும் கட்சிக்கு சாதகமான இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும், என, வலியுறுத்தினார்.அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த அமர்வு, தேர்தல் பத்திரம் தொடர்பாக, மத்திய அரசும், தலைமை தேர்தல் ஆணையமும் இரு வாரங்களில் பதில் அளிக்குமாறு, 'அறிவிக்கை' அனுப்ப 19 சனவரி 2020-இல் உத்தரவிட்டது [5][6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. WHAT IS AN ELECTORAL BOND
  2. “தேர்தல் பத்திரம் திட்டம் 2018”: பாரத ஸ்டேட் வங்கியின் 4 கிளைகளில் விற்பனை
  3. தேர்தல் நிதி பத்திரங்களில் வெளிப்படை தன்மை தேவை - நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
  4. The Hindu Explains: What is an electoral bond and how do we get one?
  5. தேர்தல் பத்திர திட்டம்: சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு
  6. Won’t stay electoral bonds scheme even now: CJI
  7. Supreme Court to hear pleas against electoral bond scheme ahead of Delhi polls
  8. Top court seeks govt, EC response on plea to stay electoral bonds

வெளி இணைப்புகள்[தொகு]