தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (National Children Science Congress NCSC) National Children Science Congress[தொடர்பிழந்த இணைப்பு] இந்தியாவில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்வு. 1993லிருந்து, கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய அரசின் தொழில் நுட்பத்துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும், மற்றும் ஆர்விபிஎஸ்பியும் (Rashtriya Vigyan Evan Prodyogiki Sanchar Parishad RVPSP), இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின் அறிவியல் தொழில் நுட்பக்கழகம் / தன்னார்வல இயக்கங்கள் இதில் பங்கேற்று இதனை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அரசு சார்ந்த அமைப்புகளும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் தன்னார்வல அமைப்புகளும் நடத்தி வருகின்றன. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த, புதுவை அறிவியல் இயக்கம் புதுவையிலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாட்டிலும் இதனை கடந்த 31 ஆண்டுகளாக, சிறப்புடன் நடத்தி வருகின்றன.

நோக்கம்[தொகு]

  • இளம் வயதிலேயே குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி, சிந்தனையை வளர்த்து, அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது
  • இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவது
  • அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது

நடத்தப்படும் காலம்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 27 -31 தேதிகளில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஏதாவது ஒரு மாநிலத் தலைநகரில் நடக்கும். பொதுவாக இதில், இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்று, மாணவர்களுக்கு, இளம் விஞ்ஞானி பட்டமும், சான்றிதழும், பரிசும் கொடுப்பார்.

கருப்பொருள்[தொகு]

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான கருப் பொருளை இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை, உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த தலைப்பு மாறுபடும். இந்த மாநாட்டின் கருப் பொருள் ஆற்றல் இதன் கீழ் குழந்தைகள், 6 துணைத்தலைப்புகளில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

விதிமுறைகள்[தொகு]

  • இந்தியா முழுவதிலும் உள்ள 10-17 வயதுள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம்.
  • பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான்
  • பள்ளிக்குழந்தைகளும், பள்ளி சாராக் குழந்தைகளும், இரவுப்பள்ளியில் படிப்பவர்களும், படிப்பை இடைவிட்ட குழந்தைகளும் கூட இதில் பங்கேற்கலாம்.
  • இக்குழந்தைகள் அறிவியல் தொழில் நுட்ப குழுமம் அறிவித்த மையப் பொருள் பற்றி சுமார் மூன்று மாத காலம் குழுவாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • குழுவின் எண்ணிக்கை 2 - 5 பேர் மட்டுமே.
  • குழந்தைகளின் குழு, ஆய்வினை சுமார் 3 மாத காலம் ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும்.
  • ஆய்வு எப்போதும், உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாய் இருக்க வேண்டும்.
  • ஒரு மாவட்டத்துக்காரர் அடுத்த மாவட்ட தகவல்களை எடுத்து ஆய்வு செய்தல் கூடாது.
  • தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
  • தினந்தோறும் அதற்கான நாட்காட்டி எழுத வேண்டும்.
  • ஆய்வு சோதனையாகவோ, கணக்கெடுப்பு முறையாகவோ, மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியோ இருக்கலாம்.
  • உயிர்ப் பொருள்கள், ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் மற்றும் மனிதனின் உணவு/பானம் போன்றவற்றில், ஆய்வுகள் செய்தல் கூடாது.
  • ஆய்வின் கருத்தினை இளநிலை வயதினர் (10-13) 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும், மேனிலை வயதினர் (14 -17) 3,500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயார் செய்ய வேண்டும்.
  • மேலும் ஆய்வறிக்கைக்கான செலவு ரூ 250 க்கு மேல் ஆகக் கூடாது.

தேர்வு முறைகள்[தொகு]

அறிக்கையை மாணவர்கள், மாவட்ட மாநாட்டில் சமர்ப்பிப்பார்கள். அதிலிருந்து மாநில மாநாட்டிற்கு அறிக்கை தெரிவு செய்யப்படுகிறது. பின்னர், தேசிய மாநாட்டிற்குக் குழந்தைகளின் அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எல்லா நிலைகளிலும், பங்கு பெறும் குழந்தைகளுக்கு இளம் விஞ்ஞானி சான்றிதழும், பரிசும் தரப்படுகிறது.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் குழந்தைகள், மதிப்பீட்டாளர் முன்பு உரையாடல்/நேர்காணலும் செய்ய வேண்டும். இங்கு குழந்தைகள், தங்கள் ஆய்வறிக்கைக்கான பிரச்சினை மற்றும் தீர்வையும் சொல்லுவார்கள்.

ஒரு மாவட்டத்தில் சுமார் 200 ஆய்வறிக்கைகள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்த தகவல்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 X 5 X 30 =30,000 குழந்தைகளுக்கு இந்த அறிவுத்தேடல் நடை பெறுகிறது. இந்தியா முழுவதும், சுமார் 90 ,0000 குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர்.

தேசிய குழந்தைகள அறிவியல் மாநாடு நடைபெறும் இடத்தில், ஒரே நாளில், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள், சாதி, மதம், இனம், மொழி கடந்து சந்தோஷமாய் கூடி விளையாடி இருப்பார்கள், அங்கேதான், உண்மையான தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும் காணப்படுகிறது. மேலும் கடந்த 8 ஆண்டுகளாக, தெற்கு ஆசிய நாடுகளான, நேபாளம், பூடான், பர்மா, மலேசிய, தாய்வான் நாடுகள் பங்கேற்கின்றன.

இதுவரை நடைபெற்ற இடங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]