தேசிய கப்பல் போக்குவரத்துக்கான இந்தியாவின் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய கப்பல் போக்குவரத்துக்கான இந்தியாவின் போராட்டம்
இயக்கம்பால் ஜில்ஸ்
தயாரிப்புசாந்தி குமார் மொரார்ஜி
ஒளிப்பதிவுபிதாமண்டலம் வெங்கடாசலபதி
வெளியீடுஆகத்து 1947
ஓட்டம்30 நிமிடங்கள் (197 மீட்டர்கள்)
நாடுஇந்தியா
மொழிஇந்தி

தேசிய கப்பல் போக்குவரத்துக்கான இந்தியாவின் போராட்டம் (India's Struggle for National Shipping) என்பது ஆகத்து 1947 இல் வெளியிடப்பட்ட ஒரு இந்திய ஆவணப்படம் மற்றும் பெறுநிறுவனத் திரைப்படமகும். இதை ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் பால் ஜில்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை சிந்தியா கப்பல் போக்குவரத்து நிறுவனம் தயாரித்துள்ளது.

தயாரிப்பு[தொகு]

பால் ஜில்ஸ் ஜெர்மன் திரைப்பட இயக்குநராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது இந்தோனேசியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கப்பல் ஒரு இந்திய கடற்படைக் கப்பலிருந்து ஏவுகணை மூலம் தாக்கப்பட்டு, அவர் போர்க் கைதியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். இவரது நடத்தை நன்றாக இருந்ததால், இவர் 1946 இல் விடுவிக்கப்பட்டார். இவர் இந்திய திரைப்படத் தகவல்களில் (பின்னர் இந்திய திரைப்படப் பிரிவு) சேர்ந்தார். மேலும் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் நிறுவினார். [1] [2]

இப்படத்தை பாட்டியா சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாந்தி குமார் மொரார்ஜிக்கு சொந்தமான சிந்தியா கப்பல் போக்குவரத்து நிறுவனம் தயாரித்தது. இப்படத்தை அவரது மனைவி சுமதி மொரார்ஜி வழங்கினார். இப்படத்தை இந்திய ஜில்ஸ் ஆவணப்பட நிறுவனம் உருவாக்கியது. இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாட ஜவகர்லால் நேருவின் தூண்டுதலின் பேரில் இது தயாரிக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் கப்பல் மற்றும் பெறுநிறுவனப் படமாக கருதப்படுகிறது. [2] [3]

உள்ளடக்கம்[தொகு]

திரைப்படத்தில் இடம் பெற்ற ஜலபாலா என்ற கப்பலின் புகைப்படம்

பிரிட்டிசு அதிகாரிகளால் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட இந்திய கப்பல் துறையின் போராட்டங்களை இந்த படம் விவரிக்கிறது. 1938 ஆம் ஆண்டில் வல்லபாய் படேல் சிந்தியா மாளிகையை திறந்து வைக்கும் காப்பக காட்சிகளும், சாந்தி குமார் மொரார்ஜி அவரை வரவேற்கும் காட்சிகளும் இதில் அடங்கும். எந்தவொரு சூழ்நிலையிலும் நிறுவனம் சுதேசியை தக்க வைக்கும் என்று தலைவர் வால்சந்த் இராச்சந்த் நிகழ்ச்சியில் கூறுகிறார். சிந்தியாவின் நிறுவனர் மற்றும் முதல் தலைவரான நரோத்தம் மொரார்ஜியின் மார்பளவு சிலையை பூலாபாய் தேசாய் திறந்து வைக்கிறார். 1927 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் கட்டப்பட்ட 'ஜலபாலா' என்ற முதல் கப்பலை விட்டல் பாய் படேல் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் நேரு மற்றும் அவரது முழு குடும்பத்தினருடன் அப்போது ஏழு வயது இந்திரா காந்தியுடன் கலந்து கொண்டார். ஹஜ் யாத்ரீகர்களுக்கான கப்பலான எல்-மதீனாவை அறிமுகப்படுத்தும் காட்சியும் இதில் அடங்கும். ஒரு காட்சியில், முகம்மது அலி ஜின்னா சிந்தியா மாளிகையிலிருந்து வெளியே வருவதைக் காணலாம். இப்படத்தில் மகாத்மா காந்தி மற்றும் அவரது சுதேசி இயக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒரு காட்சியில், இராசேந்திர பிரசாத் இரயிலில் ஏறி விசாகப்பட்டினத்தில் சிந்தியா கப்பல் தளத்தைத் திறக்கச் செல்கிறார். இந்நிகழ்ச்சியில் சுமதி மொரார்ஜி, சரோஜினி நாயுடு, ஆச்சார்ய கிருபளானி மற்றும் 3000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். கடைசி காட்சியில் சிந்தியாவின் குழுமத்தின் கூட்டத்தை சித்தரிக்கிறது. இதில் மொரார்ஜி, வால்சந்த் இராச்சந்த், துளசிதாசு கிலாச்சந்த், மானேக்லால் பிரேம்சந்த், பொது மேலாளர் எம்.ஏ. மாஸ்டர் போன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். [2] [3] [4]

வெளியீடு மற்றும் மறு உருவாக்கம்[தொகு]

இந்த படம் ஆகத்து 15, 1947 அன்று இந்தியாவின் சுதந்திர வாரத்தில் வெளியிடப்பட்டது. [3] 197 மீட்டர் நீளமுள்ள இந்தப் படம் பின்னர் திசம்பர் 4, 1979 அன்று இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியத்தல் யு சான்றிதழ் பெற்றது. [5] இப்படத்தின் திரைப்படச் சுருள் தற்போது அழிந்து போனது. இதை பலரும் மறந்தும் போயினர். [2]

இந்திய திரைப்பட பிரிவு 1990 களில் சுபாஷ் சேடா மற்றும் அமிர்த கங்கர் என்ற இருவரையும் 8000 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களின் தரவுத்தளத்தை உருவாக்கக் கேட்டுக்கொண்டது. வேளாண்மை, பால் தொழில் மற்றும் எஃகு தொழில் போன்ற பல்வேறு பாடங்களில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களை கங்கர் வெளியே கொண்டுவந்தார். ஆனால் இத்திரைப்படத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆராய்ச்சிக்குப் பிறகு, சிந்தியா போக்குவரத்து நிறுவனம் தயாரித்து ஜில்ஸ் இயக்கிய இத்திரைப்படம் குறித்த தகவலைக் கண்டுபிடித்தார். ஜில்ஸ் குறித்த புத்தகத்தை எழுத 2002 ஆம் ஆண்டில் மும்பையிலுள்ள மேக்ஸ் முல்லர் பவன் நிதியுதவி செய்தது. அப்போது நிறுவனத்தின் தலைமையகமான பல்லார்ட் பியரில் உள்ள சிந்தியா மாளிகை இப்போது இந்திய அரசுக்குச் சொந்தமானது என்றும், அந்தேரியின் சிந்தியா காலனியில் உள்ள சிறிய அலுவலகத்திற்கு நிறுவனம் மாறிவிட்டது என்றும் அவர் கண்டறிந்தார்.

சிந்தியா காலனியில் சோக்சி என்ற முன்னாள் ஊழியரைக் கண்டுபிடித்தார். அவர் படத்தைப் பார்த்ததை நினைவில் வைத்திருந்தார். ஆனால் புதிய அலுவலகத்திற்கு மாற்றும்போது ஏராளமான கலைப்பொருட்கள் தூக்கி எறியப்பட்டதால் படம் பிழைக்கவில்லை என்று நம்பினார். கங்கர் சோர் பஜாரில் தேட முயன்றார். ஆனால் சிந்தியா தயாரித்த கப்பல்களின் நிலையான, காகிதப்பணிகள் மற்றும் முன்மாதிரிகளை மட்டுமே அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அவரை சோக்சி தொடர்பு கொண்டார், அவர் மூன்று கொள்கலன்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். கொள்கலன்களில் ஒலி தடங்களுடன் திரைப்படத்தின் நகல் இருந்தன. மும்பையில் உள்ள பிரசாத் ஆய்வகத்தில் பணிபுரியும் ஒரு ஜெர்மன் தொழில்நுட்ப வல்லுநரை கங்கர் தொடர்பு கொண்டார். அவர் படத்தை மீட்டெடுத்தார். 2003 ஆம் ஆண்டில், மீட்டெடுக்கப்பட்ட படம் மேக்ஸ் முல்லர் பவனில் அவரது பால் ஜில்ஸ் மற்றும் இந்தியன் டாக்குமென்டரி என்ற வெளியீட்டோடு திரையிடப்பட்டது. படத்தின் நகல் இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டது. கங்கர் படத்தைப் பாதுகாப்பதில் எடுத்த முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டார். [2] [3]

குறிப்புகள்[தொகு]

  1. Bhattacharya, Chandrima S. (16 January 2006). "Hitler hand in advance of Hindi cinema". The Telegraph. Archived from the original on 8 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Shikha Kumar (12 June 2014). "A Struggle in Restoration". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 Mistry, Ketan (14 December 2015). "ભારતીય સમુદ્રી જહાજના ઇતિહાસનો કોહિનૂર..." (in Gujarati). Chitralekha: 36–38. 
  4. "Documentary Today No. 8". issuu. 22 February 2012. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.
  5. "India's Struggle For National Shipping (Celluloid)". CBFC. 27 January 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.

வெளி இணைப்புகள்[தொகு]