உள்ளடக்கத்துக்குச் செல்

துசிடிடீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசிடிடீஸ்
Θουκυδίδης
துசிடிடீசின் மார்பளவு சிலை
புசுக்கின் அருங்காட்சியகத்தில் உள்ள துசிடைடிசின் மார்பளவுச் சிலை
தாய்மொழியில் பெயர்Θουκυδίδης
பிறப்புஅண்.  கிமு 460 கிமு 455 இக்கு பின்னர் இல்லை [1][2]
ஹாலிமஸ், ஏதென்ஸ் (நவீன அலிமோஸ்)
இறப்புஅண்.  கிமு 400
இறந்த இடம் தெரியவில்லை
பணிவரலாற்றாளர், தளபதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்History of the Peloponnesian War
உறவினர்கள்Oloros (தந்தை)

துசிடிடீஸ் (Thucydides, கிரேக்கம்: Θουκυδίδης; சு. கிமு 460 – சு. கிமு 400 ) என்பவர் ஒரு ஏதெனிய வரலாற்றாளர், தளபதி ஆவார். இவரது பெலோபொன்னேசியப் போரின் வரலாறு என்ற படைப்பு அக்கால கிரேக்கத்தின் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. அந்த நூல் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் கி.மு 411 ஆம் ஆண்டு வரை எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் நடந்த போரை விவரிக்கிறது.

துசிடிடீஸ் தான் எழுதிய நூலில் வரலாற்று நிகழ்வுகளை தெய்வங்களாலும் தெய்வீக சக்தியாலும் நிகழ்ந்தது என்று குறிப்பிடாமல் சன்றுகளை சேகரிப்பதிலும் காரணத்தையும், விளைவையும் பகுப்பாய்வு செய்வதிலும் பாரபட்சமற்ற கடுமையான தரத்தைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டு அவரை "அறிவியல் முறை வரலாற்றின் தந்தை" என்று அழைக்கின்றனர்.[3][4]

துசிடிடீசியசின் நூல்கள் இன்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், இராணுவக் கல்லூரிகளில் பாடநூல்களாக உள்ளன. இவரது மெலியன் பேச்சுவார்த்தை நூலானது பன்னாட்டு உறவுக் கோட்பாட்டின் ஒரு முக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது. பெரிக்கிளின் இறுதிச் சடங்குச் சொற்பொழிவு பற்றிய இவரது நூல் அரசியல் கோட்பாட்டாளர்கள், வரலாற்றாசிரியர்கள், செவ்வியல் மாணவர்களால் பரவலாகப் படிக்கப்படுகிறது[5]

பொதுவாக, கொள்ளைநோய்கள், படுகொலைகள், உள்நாட்டுப் போர்கள் போன்ற நெருக்கடிகளின்போது மனிதர்களின் நடத்தையைப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்குமான அடிப்படைகளை துசிடிடீஸ் கண்டறிந்தார்.

வாழ்க்கை

[தொகு]

வரலாற்றாசிரியர் என்ற அந்தஸ்து கொண்டவரான துசிடிடீசியசின் வாழ்கையைப் பற்றி, நவீன வரலாற்றாசிரியர்கள் ஓரளவு அறிந்திருக்கிறார்கள். மிகவும் நம்பகமான தகவலாக இவரது நூலான பெலோபொன்னேசியப் போரின் வரலாறு நூலில் இவரது சொந்த வரலாறும் வருகிறது. அதில் இவர் தனது தேசியம், தந்தைவழி, பிறந்த இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். இவர் பெலோபொன்னேசியப் போரில் போரிட்டதாகவும், பிளேக் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், ஏதென்சிலிருந்து அரசால் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறுகிறார். சாமியன் கிளர்ச்சியை அடக்குவதிலும் இவர் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பரம்பரியக் காலத்திய சான்றுகள்

[தொகு]

துசிடிடீஸ் தன்னை ஒரு ஏதெனியன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவருடைய தந்தையின் பெயர் ஓலோரஸ் என்றும் அவர் ஹாலிமஸின் ஏதெனியன் தெமெயைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார். இவரது துவக்ககால வாழ்க்கை குறித்த சற்றே ஐயத்திற்குரிய கதை ஒன்று உள்ளது. இவர் 10-12 வயது இளைஞராக இருந்தபோது, தன் தந்தையுடன் ஏதென்சின் அகோராவுக்குச் சென்றதாகவும், அங்கு சிறுவன் துசிடிடீஸ் வரலாற்றாசிரியர் எரோடோட்டசின் சொற்பொழிவைக் கேட்டான். சில தகவல்களின்படி, சிறுவன் துசிடிடீஸ் சொற்பொழிவைக் கேட்டவுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான். வரலாற்றை எழுதுவது தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தான். விரிவுரையாற்றிய பிறகு, ஹெரோடோடஸ் சிறுவனுடனும் அவனது தந்தையுடனும் பேசியதாகவும் அதே குறிப்புகள் கூறுகின்றன: ஓலோரோஸ் உங்கள் மகன் அறிவிற்காக ஏங்குகிறான் என்று அவர் குறிப்பிட்டார். இந்த கதை பெரும்பாலும் இவரது வாழ்க்கை குறித்த பிற்கால கிரேக்க அல்லது உரோமானிய குறிப்புகளில் குறிப்பிடப்படுகிறது[6] இவர் ஏதென்சின் பிளேக் நோயிலிருந்து தப்பினார். அது பெரிக்கிள்ஸ் மற்றும் பல ஏதெனியர்களைக் கொன்றது. தாசோஸ் தீவுக்கு எதிரே உள்ள திரேசில் உள்ள கடலோரப் பகுதியான ஸ்காப்டே ஹைல் (அதாவது "டக் வுட்லேண்ட்") என்ற இடத்தில் தங்கச் சுரங்கங்களை வைத்திருந்ததாகவும் அவர் குறித்துள்ளார்.

1831 ஆம் ஆண்டில் ஈ. கசினியால் கற்பனையாக வரையப்பட்ட ஆம்ப்பிபோலிசின் இடிபாடுகள்: ஸ்ட்ரூமா ஆற்றின் மீதான பாலம், நகரக் கோட்டைகள் மற்றும் அக்ரோபோலிஸ்

திரேசிய பிராந்தியத்தில் இவரது செல்வாக்கு காரணமாக, இவர் கிமு 424 இல் தாசோசுக்கு ஒரு ஸ்ரடிகெசாக (தளபதி) அனுப்பப்பட்டார். கிமு 424-423 குளிர்காலத்தில், எசுபார்த்தன் தளபதி பிரசிடாஸ், திரேசியன் கடற்கரையில் உள்ள தாசோசிலிருந்து மேற்கே அரை நாள் பயணத் தொலைவில் உள்ள ஆம்ப்பிபோலிசைத் தாக்கினார். இது ஆம்பிலோலிஸ் சமருக்கு காரணமாயிற்று. ஆம்பிபோலிசில் இருந்த ஏதெனியன் தளபதியான யூகிள்ஸ், உதவிக்காக துசிடிடீசுக்கு அழைப்பு அனுப்பினார். தாசோசில் துசிடிடீஸ் இருப்பதையும், ஆம்பிபோலிஸ் மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கையும் அறிந்த பிரசிதாஸ், கடல் வழியாக உதவிக்கு துசிடிடீஸ் வருவார் என அஞ்சி, ஆம்பிபோலிடன்கள் சரணடைய மிதமான நிபந்தனைகளை விதித்து விரைவாகச் செயல்பட்டார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு சரணடைந்தனர். இதனால், துசிடிடீஸ் வந்து சேர்வதற்குள், ஆம்பிபோலிஸ் எசுபார்த்ததாவினின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டிருந்தது.

ஆம்பிபோலிஸ் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். மேலும் அது வீழ்ந்தது பற்றிய செய்தி ஏதென்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் துசிடிடீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது, இருப்பினும் இது தன்னுடைய தவறு அல்ல என்றும், சரியான நேரத்தில் அங்கு தன்னால் சென்று சேர முடியவில்லை என்றும் இவர் கூறினார். ஆம்ப்பிபோலிசைக் காப்பாற்றத் தவறியதால், இவர் நாடு கடத்தப்பட்டார் :

நான் அந்த வாழ்வை முழுவதுமாக வாழ்ந்தேன். நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் வயதில் இருந்தேன், எனவே அவற்றைப் பற்றிய சரியான உண்மையை அறிந்து கொள்வதற்காக என் கவனத்தை அவற்றில் செலுத்தினேன். ஆம்ப்பிபோலிசில் என் பணிக்குப் பிறகு இருபது ஆண்டுகள் என் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டது என் விதியாகும்; மேலும் இரு தரப்பினருடனும், குறிப்பாக பெலோபொன்னேசியர்களுடன் இருந்ததால், நான் நாடுகடத்தப்பட்டதன் காரணமாக, அந்த விவகாரங்களை ஓரளவு கவனிக்க எனக்கு ஓய்வு கிடைத்தது.

ஏதென்சிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தி, பெலோபொன்னேசிய நட்பு நாடுகளிடையே சுதந்திரமாக பயணித்து, இவர் இரு தரப்புக் கண்ணோட்டத்தில் இருந்தும் போரைப் பார்க்க முடிந்தது. துசிடிடீஸ், போர் வெடித்தவுடன் அதன் வரலாற்றை எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறார். ஏனெனில் இது கிரேக்கர்களிடையே நடந்த போர்களில் அளவின் அடிப்படையில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார்:

ஏதெனியரான துசிடிடீஸ், பெலோபொன்னேசியர்களுக்கும் ஏதெனியர்களுக்கும் இடையில் நடந்த போரின் வரலாற்றை எழுதினார். போர் வெடித்த தருணத்தில், அது ஒரு பெரிய போராக இருக்கும் என்றும், அதற்கு முன்பு நடந்தவைகளைவிட குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றும் நம்பினார்.[7]

துசிடிடீஸ் தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதியது குறைவுதான். ஆனால் நம்பகமான சமகால ஆதாரங்களில் இருந்து வேறு சில உண்மைகள் கிடைக்கின்றன. துசிடிடீசின் தந்தையின் பெயரான ஓலோரஸ் என்ற பெயர் திரேசு மற்றும் திரேசிய அரச குடும்பத்துடன் தொடர்புடையது என்று எரோடோட்டசு எழுதினார். தீவிர சனநாயகவாதிகளால் மாற்றப்பட்ட பழைய பிரபுத்துவத் தலைவர்களும், ஏதெனியன் அரசியல்வாதியுமான தளபதி மில்டியாடீசு மற்றும் அவரது மகன் சிமோன் ஆகியோருடன் துசிடிடீஸ் குடும்பத்துக்கு உறவுமுறையில் தொடர்புபட்டிருக்கலாம். சிமோனின் தாய்வழி தாத்தாவின் பெயரும் ஓலோரஸ் ஆகும், இது உறவுக்கு உள்ள சாத்தியத்தைக் காட்டுவதாக உள்ளது. மற்றொரு துசிடிடீஸ் இந்த வரலாற்றாசிரியருக்கு முன் வாழ்ந்தவர். மேலும் அவர் திரேசுடன் தொடர்புபடுத்தப்பட்டார், அவர்களுக்கிடையில் ஒரு குடும்பத் தொடர்பு ஏற்படுத்தியிருக்கலாம்.

பெர்லினில் உள்ள பெர்கமோன் அருங்காட்சியகத்தில் கி.பி 3 ஆம் நூற்றாண்டைய ஜெராஷ், ஜோர்டான், உரோமன் ஆகியவற்றிலிருந்து துசிடிடீசை சித்தரிக்கும் மொசைக் பணி

கிடைக்கக்கூடிய அனைத்து துண்டுத் துண்டு தகவல்களைச் சேர்க்கும்போது, இவரது குடும்பம் திரேசில் ஒரு பெரிய பண்ணையைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதில் தங்கச் சுரங்கங்கள் கூட இருந்தன. மேலும் அந்த பண்ணை மூலம் குடும்பத்திற்கு கணிசமான, நீடித்த வருவாய் வந்தது. பெருந்த் தோட்டத்தின் பாதுகாப்பு, தொடர்ச்சியான செழிப்புக்கு உள்ளூர் மன்னர்கள் அல்லது தலைவர்களுடன் முறையான உறவுகள் பேணுவது அவசியமாக இருந்திருக்க வேண்டும். நாடுகடத்தப்பட்டவுடன், துசிடிடீஸ் தன் பண்ணையையே நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டார். மேலும் தங்கச் சுரங்கங்கள் மூலம் அவருக்குப் போதிய வருமானமும் கிடைத்ததால், உண்மைக் கண்டறி பயணங்கள் மேற்கொள்வது உட்பட முழுநேரம் வரலாறு எழுதுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிந்தது. சாராம்சத்தில், அவர் கணிசமான செல்வ வளம் கொண்ட நல்ல தொடர்புகள் கொண்ட மனிதர். அவர் அரசியலிலும், இராணுவத் துறையிலும் இருந்து விருப்பமின்றி ஓய்வு பெற்ற நிலையில், தனது வரலாற்று ஆய்வுக்கு நேரத்தை செலவிட முடிவு செய்தார்.

பெலோபொன்னேசியப் போரின் வரலாறு

[தொகு]
10 ஆம் நூற்றாண்டு துசிடிடீசின் பெலோபொன்னேசியப் போரின் வரலாறின் சிறிய கையெழுத்துப் பிரதி

பெலோபொன்னேசியன் போர் ஒப்பிடமுடியாத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என துசிடிடீஸ் நம்பினார். எனவே, கிமு 431 இல் போரின் தொடக்கத்தில் வரலாற்றை எழுதத் தொடங்கினார். [8] "எல்லா காலத்திற்குமான ஒரு சொத்தாக" இருக்கும் ஒரு நூலை எழுதுவதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்தார். இருபத்தியோராம் ஆண்டு போரின் முடிவில் (கிமு 411), சிராகுசில் ஏதெனியன் தோல்வியை அடுத்து வரலாறில் இடைவெளிகள் உண்டாகிறது. எனவே மோதலின் இறுதி ஏழு ஆண்டுகளைப் பற்றிய செய்திகள் விரிவாகக் கூறப்படவில்லை.

பெலோபொன்னேசியப் போரின் வரலாறு கி.மு. 404 இல் போரின் முடிவிற்கு அப்பால் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டது, இது போரின் முடிவிற்கு புத்தகம் I.1.13 இல் உள்ள குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. [9] இவரது மரணத்திற்குப் பிறகு, துசிடிடீசின் வரலாறு நூல் எட்டு புத்தகங்களாகப் பிரிக்கப்பட்டது: அதன் நவீன தலைப்பு பெலோபொன்னேசியப் போரின் வரலாறு என்று இடப்பட்டது. இந்த உட்பிரிவுகள் பெரும்பாலும் நூலகர்கள் மற்றும் காப்பகத்தாரால் செய்யப்பட்டவை அவர்களே வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள், பெரும்பாலும் அலெக்சாந்திரியா நூலகத்தில் பணிபுரிந்தவர்கள்.[சான்று தேவை]

துசிடிடீஸ் பொதுவாக உண்மை வரலாற்றாசிரியர்களில் முதல் நபராக கருதப்படுகிறார். "வரலாற்றின் தந்தை" என்று அழைக்கப்படும் இவரது முன்னோடி எரோடோடசைப் போலவே, துசிடிடீஸ், நேரில் கண்ட சாட்சிகளின் சான்றுக்கு அதிக மதிப்பைக் கொடுத்தார். மேலும் இவர் கலந்துகொண்ட நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளார். இவர் எழுதப்பட்ட ஆவணங்களை கவனமாக படித்தார். மேலும் இவர் பதிவுசெய்த நிகழ்வுகள் குறித்து அதில் பங்கேற்றவர்களை நேர்காணல் செய்தார். எரோடோடசின் வரலாற்றில் உள்ள தெய்வங்களின் கோபத்தால் நிகழ்ந்த செயல் என்பது போலல்லாமல், துசிடிடீஸ் மனித விவகாரங்களில் தெய்வீக தலையீட்டை ஒப்புக் கொள்ளவில்லை. [10]

குறிப்புகள்

[தொகு]
  1. Virginia J. Hunter,Past and Process in Herodotus and Thucydides, (Princeton University Press, 2017), 4.
  2. Luciano Canfora,'Biographical Obscurities and Problems of Composition,' in Antonis Tsakmakis, Antonios Rengakos (eds.), Brill's Companion to Thucydides, Brill 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-047-40484-2 pp. 3–31
  3. Cochrane, Charles Norris. Thucydides and the Science of History.
  4. Korab-Karpowicz, W. Julian (26 July 2010). "Political Realism in International Relations". The Stanford Encyclopedia of Philosophy (Summer 2013). Ed. Edward N. Zalta. 
  5. Harloe, Katherine, Morley, Neville, Thucydides and the Modern World: Reception, Reinterpretation, and Influence from the Renaissance to the Present.
  6. Herodot iz Halikarnasa.
  7. "Thucydides, The Peloponnesian War, book 1, chapter 1, section 1". data.perseus.org. Retrieved 2018-03-07.
  8. Zagorin, Perez.
  9. Mynott, Jeremy, The War of the Peloponnesians and Athenians.
  10. Grant, Michael (1995). Greek and Roman Historians: Information and Misinformation. London: Routledge. pp. 55–56. ISBN 0-415-11770-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசிடிடீஸ்&oldid=4346156" இலிருந்து மீள்விக்கப்பட்டது