தீர்த்தகிரிப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரூரில் இருந்து தீர்த்தகிரியின் தோற்றம்

தீர்த்தகிரிப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலரால் பாடப்பட்ட புராணங்களில் ஒன்று. இந்நூல் சிறப்புப் பாயிரம், சாற்றுக்கவி, பாயிரம் நீங்களாக நானூற்று முப்பத்திரண்டு பாடல்களைக் கொண்டுள்ளது. தீர்த்தகிரி என்பது தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஆகும் இந்த மலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் உள்ளது.

பதிப்பியல்[தொகு]

இந்நூலின் முதல் பதிப்பானது 1870 இல் வெளியானது, 1922 இல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. 1948 இல் இந்நூலுக்கு புரசை சபாபதி முதலியாரால் பொழிப்புரை எழுதப்பட்டது. நூலின் மூன்றாம் பதிப்பு 1990 இல் பேராசிரியர் தி. கோவிந்தனின் குறிப்புரையுடன் வெளிவந்தது. [2]

பிற விவரங்கள்[தொகு]

நூலில் 445 பாடல்கள் உள்ளன. அவை 14 சருக்கங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

  1. பாயிரம்
  2. தாண்டக வனம்
  3. பருப்பதம்
  4. திருநாமம்
  5. சுவேத கேது

என்னும் சருக்கங்கள் நீங்கலாக மற்ற 9 சருக்கங்கள் தீர்த்தங்களின் பெயரைக் கொண்டுள்ளன.

  1. வசிட்ட தீர்த்தம்,
  2. அகத்திய தீர்த்தம்,
  3. உமை தீர்த்தம்,
  4. இந்திர தீர்த்தம்,
  5. இயம தீர்த்தம்,
  6. வருண தீர்த்தம்,
  7. கந்த தீர்த்தம்,
  8. அக்கினி தீர்த்தம்,
  9. இராம தீர்த்தம்,

இதனால் இந்த ஊரைத் தீர்த்தகிரி என்றனர். இந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால் விளையும் பயன்கள் எனச் சில கூறப்பட்டுள்ளன.

நூலின் பாடல் - எடுத்துக்காட்டு[தொகு]
உயிரின் ஊடு ஒளித்து இருப்பைப் புரியப் பாலில் வெண்ணெய் போல்
தயிரின் ஊடு நின்ற தன்மை தாபதற்கு நீ
வெயிலின் ஊடு புனல் பரந்து வெயிலின் ஊடு புலர்தல் போல்
மயல் அறாத சகலமும் உன்னிடத்தில் வந்து மாயுமே. [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 163. 
  2. தீர்த்தமலைத் திருக்கோயில் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 77. 
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தகிரிப்_புராணம்&oldid=2459421" இலிருந்து மீள்விக்கப்பட்டது