திருவிதாங்கோடு அரப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரப்பள்ளி

திருவிதாங்கோடு அரப்பள்ளி (Thiruvithamcode Arappally) என்றழைக்கப்படும் புனித மேரி பாரம்பரிய ஆலயமானது இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையாரால் கி.பி. 63 ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இது தமிழகத்தின் முதல் கிறித்தவ தேவாலயமாகும். உலகில் அழிவுறாத நிலையில் இருக்கும் பழமையான கிறித்தவ தேவாலயமாக கருதப்படுகிறது.
இவ் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்ற ஊரில் மணிக்கிராமம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கட்டை (கிலோ மீட்டர்) தூரத்திலும் தக்கலையிலிருந்து 2 கட்டைத் தூரத்திலும் இவ்விடம் அமையப்பெற்றுள்ளது. தோமையார் கோவில் என்று உள்ளூரில் அழைக்கப்படும் இக்கோவில் தற்போது மலங்கரா பாரம்பரிய சிரியன் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 16, டிசம்பர், 2007 நாளை கிழக்கு கத்தோலிக்கர்களும் மலங்கரா Metropolitan Baselios Mar Thoma Didymos I ஆகியோரும் இவ்விடத்தை புனித தோமையார் சர்வதேச வழிபாட்டு நிலையமாக அறிவித்துள்ளார்கள்..

வரலாறு[தொகு]

அரப்பள்ளி கல்வெட்டு

புனித தோமையார் இன்றைய கேரளத்தின் கொடுங்கல்லூரில் கடல் மார்கமாக கி.பி 52 இல் வந்திறங்கினார். புனித தோமையார் இந்தியாவில் சுமார் பதினேழு வருடங்கள் போதித்துள்ளார். இதில் நான்கு வருடங்கள் சிந்துவிலும், ஆறு வருடங்கள் மலபாரிலும், ஏழு வருடங்கள் மைலாபூரிலும் கிறித்துவைப்பற்றி போதித்தார். இவர் மலபாரில் போதித்த போது அங்கு பிராமணர்கள் தண்ணீரை வான் நோக்கி தெளித்து பூசை செய்வதை பார்த்ததாகவும் தானும் அவர்கள் அருகில் போய் தண்ணீரை வான் நோக்கி தெளித்து செபித்ததாகவும், அப்போது அத்தண்ணீர் வாணத்தில் அப்படியே தொங்கிக்கொண்டே இருந்ததாகவும் மரபு வழி செய்திகள் வழங்கப்படுகின்றன. இதை பார்த்த பிராமணர்கள் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள் என்று கூறப்படுகிறது. இதுதான் புனித தோமையர் செய்த முதல் அற்புதமாகும்.

ஏழரை ஆலயங்கள்[தொகு]

இதை தொடர்ந்து தோமையார் பலரை கிறிஸ்தவர்கள் ஆக்கியதோடு ஏழு ஆலயங்களையும் நிறுவினார்.

இதில் திருவிதாங்கோட்டு பள்ளிக்கு அரப்பள்ளி மதிப்பும் மற்றப் பள்ளிகளுக்கு ஒரு மதிப்பும் கொடுக்கப்பட்டது.

ஆலய அமைப்பு[தொகு]

ஆலயத்தின் உட்புற தோற்றம்

திருவிதாங்கோடு அரப்பள்ளி 45 அடி நீளமும், 15 அடி வீதியும், 10 அடி உயரமும் கொண்டது. முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டது. போத்துக்கீசியர்கள் பரிசாக கொடுத்த செப பீடமும், தூபக்கிண்ணமும் ஆலயத்தில் உள்ளது. மேலும் திருமுழுக்கு தொட்டி, கல்தூணில் விளக்கு, ஓவியங்கள், நற்கருணை பேழை ஆகியவையும் உள்ளன. ஒரு பெரிய சிலுவையும் முன்பக்க வாசலில் புனித பேதுரு, புனித பவுல் ஆகியோரின் உருவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

திருவிழா[தொகு]

இங்கு பங்குனி மாதம் 3 ம் நாள் நடைபெறும் புனித தோமையார் திருநாளில் கொடுக்கப்படும் காணிக்கை அப்பத்தை அனைத்து சமயத்தினரும் பாகுபாடு இல்லாமல் வாங்கி செல்வது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயம் உலக புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எண்ணை[தொகு]

புனித தோமையாரின் கைப்பட்ட தேவாலத்தின் அணையா விளக்கின் எண்ணை மிகவும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. அதை பலரும் வீடுகளுக்கு வாங்கிச் சென்று பயன்படுத்துகின்றனர். இவ்வெண்ணையை பயன்படுத்துவதால் குழந்தைப்பேறு கிடைப்பதாகவும், பல நோய்கள் குணமடைவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சவேரியார் கட்டின கோவில்[தொகு]

இவ்வாலயத்தின் அருகில் புனித சவேரியார் கட்டிய விண்ணேற்பு மாதா ஆலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]