திருவாட்போக்கி நாதர் உலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாட்போக்கிநாதர் உலா கவிராச பிள்ளை எழுதிய 16 ஆம் நூற்றாண்டு நூல். இரத்தினகிரி உலா என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது.

குளித்தலையை அடுத்து உள்ள இந்த இரத்தினகிரிக்கு மரகதாசலம், மாணிக்கமலை என்னும் பெயர்களும் உண்டு. சிவன்கோயில் உள்ள மலைகளில் அதிகமான உயரம் கொண்ட மலை. நல்ல படிக்கட்டுகள் இருப்பினும் ஏறுவதற்குக் கடினமானதாக உள்ளது. சிவாயம் என்னும் மந்திர வடிவில் மலை அமைந்திருப்பதால் இம்மலை உள்ள ஊருக்கும் சிவாயநகர் என்னும் பெயர் அமைந்ததாம். சிவாயமலை இப்போது அய்யர்மலை என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. [1]

வாட்போக்கி கதை[தொகு]

ஆரியமன்னன் என்பவனுடைய மணிமுடி மறைந்து போயிற்று. இந்த மலைக்கு வந்து பெற்றுக்கோள்ளுமாறு இறைவன் கனவில் தோன்றிக் கூறினார். மன்னன் இம் மலைக்கு வந்தான். இறைவன் வேதியன் உருவில் தோன்றி அங்கிருந்த கொப்பரையை 1000 குடம் காவிரி நிரால் திரப்பினால் மணிமுடி கிடைக்கும் என்றார். மலை காவிரி ஆற்றிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ளது. [2] மன்னன் வேதியர் சொன்னபடி 1000 குடம் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினான். கொப்பரை நிரம்பவில்லை. மன்னன் வேதியரிடம் நிகழ்ந்த்தைச் சொன்னான். மன்னன் மண்குடத்தில் தண்ணீர் கொண்டுவந்ததால் பொதிவாசி [3] 100 குடம் தள்ளுபடி என்று கூறி மேலும் 100 குடம் நீர் ஊற்றுமாறு கூறினார். மன்னன் 100 குடம் ஊற்றினான். வேதியர் 10 குடம் பொதிவாசி என்றார். மன்னன் அதையும் கொண்டுவந்து ஊற்றினான். வேதியர் ஒருகுடம் பொதிவாசி என்றார். மன்னன் அதையும் கொண்டுவந்து ஊற்றினான். வேதியர் உழக்கு நீர் பொதிவாசி என்றார். மன்னனுக்குச் சினம் வந்துவிட்டது. வேதியரை வாளால் வீசினான். தலையில் வெட்டு வாங்கிய வேதியர் மறைந்தார். இதனால் இங்குள்ள இறைவன் திருமேனியின் தலையில் தழும்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். வாளால் வீசப்பட்ட இறைவன் வாட்போக்கி எனப்பட்டான். – இது கதை.

நூல் அமைதி[தொகு]

காப்பு வெண்பா ஒன்றும் 408 கண்ணிகளும் கொண்ட நூல் இது.

இந்த நூல் கவிராச பிள்ளை எழுதிய திருக்காளத்திநாதர் உலாவைப் போல அத்துனை இலக்கிய நலம் உடையதாக அமையவில்லை. நடையும், பருவ மங்கையர் பற்றிய செய்திகளும் காளத்திநாதர் உலாவில் உள்ளது போன்றே உள்ளன.

நூலில் அவ்வூரில் வாழ்ந்த வாட்போக்கிப் பண்டிதர், தட்சிணாமூர்த்திப் பண்டிதர், தியாக வினோத குரு, மாணிக்க வாசக தேசிகர், பக்கம்பையன், வேலாயுதன் முதலானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களின் தூண்டுதலால் இந்த நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அதிரூபம், ஏகீபவித்தல், சல்லாப லீலாகானம், சாம்பசின், தானா பதிக்கம், புக்கினான், பம்மகத்தி முதலான் பல அருஞ்சொற்கள் நூலில் காணப்படுகின்றன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. அய்யர்மலை
  2. உலா கண்ணி 22-27
  3. கசிந்து ஒழுகிய நீர்