திருவக்கரை கல்மரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவக்கரியில் காணப்படும் கல்மரத்துண்டு

திருவக்கரை கல்மரங்கள் என்பது தமிழகத்தின் தென்னாற்காடு பகுதியிலுள்ள திருவக்கரை கிராமத்தில் காணப்படும் கல் மரங்களாகும். இக்கல்மரங்கள் பட்டையில்லாத தாவர (Psilophyton) பேரினத்தைச் சேர்ந்தவை. இவற்றை ஜான் வாரீர் என்ற ஆங்கிலேயர் கண்டறிந்த பின், இக்கல்மரங்களைக் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் குரல் கொடுத்த பின் இந்திய தேசிய புவியியல் துறை 1951 இல் இவற்றுக்கு ஒரு பூங்காவை ஏற்படுத்தியது. இக்கல்மரங்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ளன.

காலம்[தொகு]

சுமார் ஒரு கோடி முன்னர் உலகத்தில் 4 பனியுகங்கள் தோன்றின. இதை குவார்ட்டர்னரி காலம் என்று கூறுவர். அப்போது ஏற்பட்ட புவியியல் மாறுபாட்டால் மரங்கள் புதைந்து படிமங்களாக மாறின. அவற்றுள் பட்டையில்லாத தாவர வகையைச் சேர்ந்த மரங்களும் அடங்கும். இப்பட்டையில்லாத தாவரங்கள் மொட்டு இலாமல் சிதில்கள் மூலமே இனப்பெருக்கம் செய்ய வல்லவை. திருவக்கரை மரங்களில் சிலவும் இந்த பேரினத்தையே சேர்ந்தவை.[1]

அதே நேரம் திருவக்கரையை அடுத்துள்ள சேதாரப்பட்டு முதலிய இடங்களில் மீன் இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் இறுகிக் கல்லாக மாறியுள்ளன.[2] இதனால் திருவக்கரை பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்தது தெளிவு.[2] ஒரு காலத்தில் இங்கு 180 கல்மரங்கள் காணப்பட்டன. தற்போது 11 மரங்களும் 60 கலமரத்துண்டுகளுமே இங்கு காணப்படுகின்றன. மற்றவை இங்குள்ள மக்களாலும் சுற்றுலா பயணிகளாலும் மண்வெட்டிகளாலும் திருடப்பட்டுவிட்டன.

இக்கல்மரங்களில் சில பட்டையோ, கிளைகளோ, வேர்களோ காணப்படாமையால் இம்மரங்கள் கல்லாக மாறுமுன்பே திருவக்கரையில் இருந்தது தெளிவு. மேலும் இம்மரங்கள் கல்மரங்களான பிறகு இடம் மாற்றப்பட்டதற்கு எந்த சான்றுமில்லை. அதனால் இம்மரங்களோடு ஒட்டிய பாறைகளின் காலமே இம்மரங்களின் காலமென எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன் மணற்கல் வகை பாறைகளோடு ஒட்டியுள்ள இக்கல்மரங்கள் குறைந்தபட்சம் சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையானவை என்று கூறலாம்.[1]

நம்பிக்கை[தொகு]

மகாவிட்ணுவால் கொல்லப்பட்ட அரக்கனின் எலும்புகளே இக்கல்மரங்கள் என்பது திருவக்கரை மக்களின் நம்பிக்கை.[1]

மூலம்[தொகு]

  • திருவக்கரையின் தொன்மை வரலாறும் கல் மரப்பூங்காவும். பண்டைத் தடயம். புதுச்சேரி: மணிவாசகர் பதிப்பகம். பக். 47 - 63. 

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 www.thehindu.com(செப்டம்பர் 26, 2010). "A repository of spectacularly preserved trees". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: செப்டம்பர் 30, 2012.
  2. 2.0 2.1 பேராசிரியர் சுந்தர சண்முகனார் (2002). கெடிலக்கரை நாகரிகம். மணிவாசகர் பதிப்பகம். பக். 96, 97. 

உசாத்துணை[தொகு]

  • வேல்முருகன் சு. திருவக்கரை வரலாறு. புதுச்சேரி. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவக்கரை_கல்மரங்கள்&oldid=2233537" இலிருந்து மீள்விக்கப்பட்டது