திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிமேலழகர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் திருக்குறள், பரிபாடல் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை என்னும் பெயரில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. [1] இந்த நூலைத் திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது. பரிமேலழகர் வைணவர் ஆதலால் திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரையே சிறந்தது என்னும் குறிப்பு அதில் உள்ளது.

திருக்குறள் பொதுநூல் ஆதலால் உரை செய்தார். பரிபாடலில் திருமாலைப் பற்றிய பாடல்கள் உள்ளன. அதனால் அதற்கு உரை செய்தார். எனவே பரிபாடலில் உள்ள வைகை, மதுரை, செவ்வேள் பற்றிய பாடல்களுக்கும் உரை செய்ய வேண்டியதாயிற்று. திருமுருகாற்றுப்படை முருகனைப் பற்றி மட்டுமே பாடும் தனி நூல். எனவே இதற்கு இவர் உரை செய்திருக்க மாட்டார் என்னும் கருத்து நிலவிவருகிறது.

பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்களுக்கு உரை கண்ட பரிமேலழகர் அவன்பால் ஈடுபாடு கொண்டு திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதினார் எனக் கொள்வாரும் உளர்.

அரிமேல் அழகுறூஉம் அன்பு அமை நெஞ்சப்
பரிமேலழகன் பகர்ந்தான் - விரிவுரை மூ
தக்கீரிஞ் ஞான்று [2] தனி முருகாற்றுப்படையாம்
நக்கீரன் நல்ல கவிக்கு.

இது இவரது உரையில் காணப்படும் சிறப்புப் பாயிரம்

உரைப்பாங்கு

இவரது உரையில் உபநிடதம், கல்லாடம் என்னும் சைவ நூல், முதலானவை குறிப்பிடப்படுகின்றன.
சுப்பிரமணியன் என்னும் சொல்லைக் கையாளுகிறார்.
'நால் வேறு இயற்கை' எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் தொடருக்கு சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சயம் என்பனவற்றைக் காட்டி விளக்குகிறார்.

எனினும் இவரது திருக்குறள் உரையோடு ஒப்புநோக்குகையில் இவ்வுரை அத்துணைச் சிறப்புடையதாக அமையவில்லை என அறிஞர்கள் கருதுகின்றனர்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 63. 
  2. மூதக்கீர் (மூத்த தக்கவர்களே) இஞ்ஞான்று